கொரானா தொற்றுக் காரணமாக உலகமே முடங்கியது! பொருளாதாரம் முதல் சுற்றுலா வரை அனைத்துமே ஒரு ஆட்டம் கண்டுவிட்டது என்றே சொல்லலாம்! இப்போது அனைத்தும் சற்றுக் கட்டுக்குள் கொண்டு வரும் பட்சத்தில் சுற்றுலா லேசாக தலை தூக்குகிறது.
அதன் ஒரு பகுதியாக இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பூடான் இந்திய எல்லைக் கதவுகள் செப்டம்பர் 23 ஆம் தேதியும், 16ஆம் நூற்றாண்டு டிரான்ஸ் பூட்டான் பாதை செப்டம்பர் 28 ஆம் தேதியும் திறக்கப்பட உள்ளன! அவற்றைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காண்போம்!
செப்டம்பர் 23 ஆம் தேதி திறக்கப்படவுள்ள இந்திய பூட்டான் எல்லை
அஸ்ஸாம் எல்லையில் உள்ள சம்ட்ரூப் ஜொங்கர் மற்றும் கெலேபுவில் உள்ள இந்தியா பூட்டான் எல்லைக் கதவுகள் செப்டம்பர் 23 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரானா தொற்று காரணமாக இந்த எல்லை காலவரையற்று மூடப்பட்டு இருந்தன. இரண்டரை ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இப்போது இந்தியா பூடான் இடையேயான எல்லைக் கதவுகள் திறக்கப்படும் செய்தி சுற்றுலாப் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து கணிசமான மேம்பாட்டு நிதி (SDF) வசூலிக்கப்படும் என்றும், இது சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு செலவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்படவுள்ள டிரான்ஸ் பூட்டான் பாதை
16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த டிரான்ஸ் பூட்டான் பாதை 60 வருட இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக செப்டம்பர் 28 அன்று திறக்கப்பட உள்ளது. 403 கிலோமீட்டர்கள் நீளமுள்ள இந்த வரலாற்றுப் பாதை ஒன்பது மாவட்டங்கள், இரண்டு தேசிய பூங்காக்கள் மற்றும் 28 உள்ளூர் அரசாங்கங்களை இணைக்கிறது.
பண்டைய காலத்தில், கிழக்கிலிருந்து மேற்கு பூட்டான் மற்றும் திபெத் வரை பயணிக்கும் துறவிகள் மற்றும் வணிகர்களுக்கான புனிதப் பாதையாக இது இருந்தது.
இயற்கை எழில் கொஞ்சும் ட்ரான்ஸ் பூட்டான் பாதை
மேற்கு பூட்டானில் உள்ள ஹாவை கிழக்கு பூட்டானில் உள்ள டிராஷிகாங்குடன் இணைக்கும் டிரான்ஸ் பூட்டான் பாதை இயற்கை அன்னை மிகுதியாக ஆசீர்வதித்த இந்தோ-திபெத்திய எல்லைக்கு அருகில் உள்ளது.
உயரமான இமயமலைச் சிகரங்கள், பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் பிரமிக்க வைக்கும் மலை முகடுகளால் இந்த பாதை சூழப்பட்டுள்ளது. பாதையில் உள்ள அழகிய காட்சிகள் இயற்கை ஆர்வலர்கள், புகைப்படக்காரர்கள், தாவரவியலாளர்கள் மற்றும் பறவை ஆர்வலர்களை கவர்ந்திழுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இயற்கை மற்றும் சாகச ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இடம்பிடிக்க போகும் பாதை
உலகெங்கிலும் உள்ள சாகச ஆர்வலர்களுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் இந்தப் பாதை ட்ரெக்கிங், நேச்சர் வாக்கிங், பர்ட் வாட்சிங் போன்ற செயல்களில் ஈடுபட ஊக்குவிக்கும். பல்வேறு புனிதமும், வரலாறும், இயற்கை அழகும் நிறைந்த இந்தப் பாதையில் பயணிக்க நிச்சயம் சுற்றுலாப் பயணிகள் விரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், அழகான பாதையில் ஹோம்ஸ்டேகள், முகாம்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவற்றை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதையை மீண்டும் திறப்பது பூட்டானின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பதோடு உள்ளூர் சமூகங்களின் வளர்ச்சிக்கும் உதவும்.
பூட்டான் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களைக் கொண்டு வருமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர் என்பதை நினைவில் கொள்ளவும்!