மதாம் டுசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்திற்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்று நாம் ஏற்கனவே அறிவோம். உலகெங்கிலும் பிரபலமாக இருக்கும் இந்த மதாம் டுசாட்ஸ் முதன் முதலில் லண்டனில் திறக்கப்பட்டது. மக்கள் கொடுத்த ஆதரவின் பேரிலும், அதற்கு ஏற்பட்ட ரசிகர்களின் காரணமாகவும் இந்த மெழுகு அருங்காட்சியகம் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, சிங்கப்பூர், நெதர்லாந்து, ஹங்கேரி, துருக்கி இன்னும் எண்ணற்ற நாடுகளிலும் நகரங்களிலும் பரவி உள்ளது.
நமக்கு மிகவும் பிடித்த சினிமா பிரபலங்கள், இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தலைவர்களின் மெழுகு உருவங்களை இங்கே நாம் கண்டு ரசிக்கலாம். இந்த உலகப் புகழ்பெற்ற மதாம் டுசாட்ஸ் இந்தியாவிலும் திறக்கப்பட்டது. அதற்கு என்ன ஆனது? இப்போது அதன் நிலைமை என்ன? மறுபடியும் எப்போது திறக்கப்பட்டது என்பதைப் பற்றி இங்கே காண்போம்.

இந்தியாவில் மதாம் டுசாட்ஸ்
2017 ஆம் ஆண்டில், முதல் மதாம் டுசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகம் புது டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸில் உள்ள ரீகல் சினிமாவில் அமைக்கப்பட்டது. சிறிது சிறிதாக மேம்படுத்தப்பட்ட அருங்காட்சியகம் கொரானா தொற்றால் மூடப்பட்டது.
தற்காலிகமாக மூடப்பட்ட அருங்காட்சியகம், பின்னர் நிரந்தரமாக மூடப்பட்டது என அருங்காட்சியகம் மேலாண்மையிலிருந்து சொல்லப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நொய்டாவில் உள்ள செக்டார் 18 இல் டி.எல்.எஃப் மால் ஆஃப் இந்தியாவின் நான்காவது மாடியில் 16,000 சதுர அடி பரப்பளவில் இந்த மெழுகு அருங்காட்சியகம் மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை திறக்கப்பட்டது. இதில்
விளையாட்டு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையைச் சார்ந்த இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்களின் 50 மெழுகு சிலைகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

மதாம் டுசாட்ஸின் நுணுக்கமான படைப்புகள்
இந்தியாவில் உள்ள மதாம் டுசாட்ஸின் ஹோல்டிங் நிறுவனமான மெர்லின் எண்டர்டெயின்மென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்குநரான அன்ஷுல் ஜெயின் இங்கே வைக்கப்பட்டுள்ள சிலைகள் இந்திய பார்வையாளர்களுக்கு நன்கு அறியப்பட்ட பிரபலங்கள் பற்றிய ஆழமான பார்வையை வழங்கும்.
தங்களுடைய வாழ்க்கையில் பல வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்திய இந்த ஐகான்களைச் சந்திப்பதில் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை அறிந்து, இந்திய சூப்பர் ஸ்டார்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என்று கூறினார்.
ஒவ்வொரு மெழுகு உருவமும் 20 சர்வதேச கலைஞர்களால் 3 முதல் 6 மாதங்கள் வரை வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லா உருவங்களும் முதலில் லண்டன் ஸ்டுடியோக்களில் தயாரிக்கப்பட்டு, திருப்தியான ஒப்புதல் பெற்ற பின்னரே அந்தந்த அருங்காட்சியகங்களுக்கு அனுப்பப்படும் என்று குறிப்பிட்டார்.

மதாம் டுசாட்ஸில் உள்ள இந்திய பிரபலங்கள்
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், பகத் சிங், சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி போன்ற பிரபல அரசியல் தலைவர்களின் சிலைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டுத் துறையை சார்ந்த உசைன் போல்ட், மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோருடன் சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், மேரி கோம் மற்றும் விராட் கோலி ஆகியோரின் மெழுகு சிலைகள் உள்ளன.
பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், அமிதாப் பச்சன், கத்ரீனா கைஃப் மற்றும் மாதுரி தீட்சித் ஆகியோருக்கு அடுத்தபடியாக வில் ஸ்மித், ஏஞ்சலினா ஜோலி, லியோனார்டோ டி கேப்ரியோ போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளனர்.
குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களான மோட்டு-பட்லுவை நீங்கள் நுழைவாயிலிலேயே காணலாம்.

டிக்கெட் கட்டணங்கள்
டிக்கெட்டுகளை ஆன்லைனிலும் கவுண்டரிலும் பெறலாம். பெரியவர்களுக்கு 960 ரூபாயும், குழந்தைகளுக்கு 760 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் 11.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நாளின் எந்த நேரத்திலும் வருகை தரலாம்.
நேஷனல் கேபிடல் ரீஜியனில் உள்ள நொய்டா மெட்ரோ, பேருந்து சேவைகளின் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. ஆக, அடுத்த முறை நொய்டாவிற்கு செல்லும் போது கட்டாயம் இங்கு செல்ல தவறாதீர்கள்!



Click it and Unblock the Notifications






