இயற்கையின் அழகால் ஆசீர்வதிக்கப்பட்ட தெற்காசிய நாடுகளில் இந்தோனேசியா மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. குறிப்பாக பாலி நகரத்திற்கு ஆண்டுக்கு 5 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் இந்தோனேசிய அரசு வெளியுட்டுள்ள புது சட்டம் உலக அளவில் ட்ரெண்டு ஆகி வருகிறது. திருமணம் ஆகாத ஆண் பெண் இந்தோனேசியாவிற்கு ஒன்றாக சுற்றுலா வந்தால் ஒரு வருடம் சிறைவாசம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எதனால் இப்படி கூறுகிறார்கள் என்று குறித்து கீழே பார்ப்போம்!

கொரானாவுக்கு பின் கணிசமாக முன்னேற்றம் காணும் இந்தோனேசிய சுற்றுலாத் துறை
பல நாடுகளைப் போலவே, இந்தோனேசியாவின் சுற்றுலாத் துறையும் தொற்றுநோய்களின் போது கடுமையான அடியைச் சந்தித்தது. கொரோனா தொற்றில் இருந்து லேசாக மீண்டு வருகிறது இந்தோனேசிய சுற்றுலாத் துறை. இந்த நேரத்தில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகி, உலக அளவில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. இந்தச் சட்டம் சுற்றுலாத் தொழிலுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி, குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்கப் போகிறது.

உலகிலேயே அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடு
இந்தோனேசியாவில், நாட்டின் சில பகுதிகள் கடுமையான இஸ்லாமியக் குறியீடுகளைச் செயல்படுத்தி வரும் நிலையில், புதிய சட்டங்கள் அதிகரித்துவரும் மதப் பழமைவாதத்தின் பிரதிபலிப்பாகக் காணப்படுகின்றன. பாலியில், மக்கள்தொகையில் பெரும்பான்மையாக இந்துக்கள் உள்ளனர், இதன் விளைவாக மேற்கத்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தாராளமயமான சமூகச் சூழலைக் கொண்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும்
இந்தோனேசியாவில் வசிக்கும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கும், பாலி போன்ற விடுமுறை இடங்களுக்குச் செல்பவர்களுக்கும் புதிய சட்டம் சமமாக பொருந்தும் என்று கூறப்படுகிறது. மேலும் சட்டப்படி, திருமணமாகாத தம்பதிகள் ஒன்றாக இந்தோனேசியாவிற்கு பயணித்தால் அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந்தச் சட்டம் சுற்றுலாப் பயணிகளையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்படும்
புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ், இந்தோனேசியர்கள் அல்லது வெளிநாட்டவர்கள் திருமணத்திற்கு முந்தைய உறவுகளில் ஈடுபடுதலில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என கூறப்படுகிறது.

பயணத்தை ரத்து செய்யும் சுற்றுலாப் பயணிகள்
சட்டத்தை அமல்படுத்துவது நிலுவையில் இருந்தாலும், மற்ற நாடுகள் தங்கள் குடிமக்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளன. இந்தோனேசியாவிற்கு பயணம் செய்ய வேண்டாம் என ஆஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த குற்றவியல் சட்டத்தை அமெரிக்கா கூட உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பிரச்சனை காரணமாக பிரிட்டிஷ் பயணிகள் தங்களது பயண திட்டங்களை ரத்து செய்து வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாலிக்கு பயணம் செய்வது பற்றி இருமுறை யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே உங்களது பாய் பெஸ்டி, கேர்ள் பெஸ்டியுடன் பாலி செல்ல திட்டமிட்டிருந்தால் நன்கு யோசிக்கவும். ஏனெனில் நீங்கள் சட்டங்களை மீறியதற்காக சிறையில் அடைக்கப்படலாம். யோசித்து இந்தோனேசியாவிற்கு திட்டமிடுங்கள்!



Click it and Unblock the Notifications



