பீக் ஹவர்களில் தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், வேலைக்கு செல்வோர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆம்புலன்ஸ் வந்தாலும் கூட வழி கிடைப்பது இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்கு உரிய விஷயமாகும். அதனால் தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி, தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்படும்; தாம்பரம் வரை பேருந்துகள் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்ட பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்!
சென்னையின் 3 ஆவது பெரிய பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையத்தினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க வேண்டும் என்பதற்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளை புதிதாக கட்டப்பட்ட வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றியது தமிழக அரசு. அதன்படி சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, கும்பகோணம், நாகர்கோயில், இராமநாதபுரம் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்க ஆரம்பித்தன.

கிளாம்பாக்கம் வரை இயக்கவே உத்தரவு
கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு அனைத்து தென் மாவட்ட பேருந்துகளும் மாற்றி இயக்கப்பட்ட நிலையில், சில போக்குவரத்துக் கழக பேருந்துகள் மட்டும் தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்தது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தபோதும், தாம்பரம் வரை பேருந்துகள் இயக்கப்படுவதால் நெரிசலை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்து வந்தது. இந்நிலையில், பேருந்துகளை கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்க வேண்டும் என போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்
தென் மாவட்டத்திலிருந்து மற்றும் வட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்தன. அதாவது சென்னை நோக்கி வரும்போது தாம்பரம் வரையும், கிளம்பும்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தும் சென்று வந்தன. இதன் காரணமாக பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் பகுதியில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தென் மாவட்ட பேருந்துகள் தாம்பரம் செல்லாது
இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தொடர்ந்து, போக்குவரத்து போலீசார் மற்றும் தாம்பரம் போலீசார் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. இதனைத் தொடர்ந்து தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு கட்டும் சொல்லும் விதமாக, தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளையும் வழங்கியிருந்தது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் தற்போது தென் மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கிளாம்பாக்கத்தில் நிறுத்தப்படும் பேருந்துகள்
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, என்னவென்றால்; தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் போக்குவரத்து காவல்துறை வழங்கியுள்ள பரிந்துரைப்படி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் மார்ச் 4 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கம்
ஏற்கெனவே கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் 3795 பயண நடைகளாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போக்குவரத்துத் துறையின் இந்த முடிவை கருத்தில் கொண்டு, தற்போது பயணிகளின் நலன் கருதி கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயண நடைகளாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.



Click it and Unblock the Notifications



