இன்று காலை திருவண்ணாமலையில் "அண்ணாமலையாருக்கு அரோகரா, அண்ணாமலையாருக்கு அரோகரா" எனும் கோஷம் விண்ணைப் பிளந்தது. திருகார்த்திகை தீபத் திருவிழா 2024 ஐ முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு உண்ணாமலை அம்மனுடன் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைப்பெற்றது! இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்!

திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2024
ஒவ்வொரு வருட கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை மலையின் உச்சியில் ஏற்றப்படுகிற மகாதீபத்தைக் காண உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள். மலையையே சிவனாக வழிபடுகிற திருவண்ணாமலையில், வரும் டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறையின் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று காலை கொடியேற்றம்
இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1 ஆம் தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து பிடாரி அம்மன், விநாயகர் உற்சவம் நடந்தது. இன்று காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் கார்த்திகை தீப திருவிழாவிற்காக அண்ணாமலையார் சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
திரளான பக்தர்கள் பங்கேற்பு
அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 6.25 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் பவனி நடைபெற்றது. இதில் பல்லாயிரகணக்கான பக்கத்தர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
13 ஆம் தேதி மகா தீபம்
மேலும், அதைப்போலவே வருகின்ற டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறையின் முன்பு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது. அதற்கு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, தெலுங்கானா என வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
திருவிழா நிச்சயம் நடைபெறும்
இந்த ஆண்டு மகாதீபத்திருவிழா இன்று (டிச.04) தொடங்கி 13ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. சமீபத்தில் திருவண்ணாமலை மகாதீப மலையில் ஏற்பட்ட கனமழை, நிலச்சரிவு காரணமாக தீபத்திருவிழா திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி இருந்த நிலையில், திருவிழா திட்டமிட்டபடி நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்தார். மொத்தமாக 10 நாட்கள் இந்த திருவிழாவானது நடைபெறும். விழாவின் இறுதியாக வரும் டிசம்பர் 15-ஆம் தேதி இரவு 9 மணிக்கு தெப்பல் உற்சவத்தில் பராசக்தி அம்மன் உற்சவம் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2024 மகா தீபத்தின் முக்கிய திருவிழாக்கள் எப்போது
· 01.12.2024: துர்க்கை அம்மன் சன்னதியில் தீபம் ஏற்றுதல்.
· 02.12.2024: பிடாரி அம்மன் சன்னதியில் தீபம் ஏற்றுதல். 03.12.2024: விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதிகளில் தீபம் ஏற்றுதல்.
· 04.12.2024: கோ-பூஜை, வெள்ளி ரதத்தின் ஊர்வலம் மற்றும் சிம்மம் வாகனம்.
· 05.12.2024: தங்க ரிஷப தேர் மற்றும் தங்க இந்திர விமானம் ஊர்வலம்.
· 06.12.2024: தங்க சிம்ம வாகனம் மற்றும் வெள்ளித் தேர் ஊர்வலம்.
· 07.12.2024: தங்க காமதேனு வாகனத்தின் ஊர்வலம். 08.12.2024: தங்க ரிஷப வாகனம் ஊர்வலம்.
· 09.12.2024: வெள்ளி ரதம் ஊர்வலம்.
· 10.12.2024: மஹா ரதம்
· 11.12.2024: பிச்சாண்டவர் சன்னதியில் தீபம் ஏற்றுதல், குதிரை வாகனம் ஊர்வலம்.
· 12.12.2024: கலச வாகனம் மற்றும் காமதேனு வாகனம் ஊர்வலம்.
· 13.12.2024: பரணி தீபம் மற்றும் மகா தீபம் - அருணாச்சல மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும்.
· 14.12.2024: நெபல் சன்னதி மற்றும் சண்டிகேஸ்வராவில் தீபம் ஏற்றுதல்.
· 15.12.2024: நெபல் சன்னதி மற்றும் அண்ணாமலையில் தீபம் ஏற்றுதல்.
· 16.12.2024: நெபல் சன்னதி மற்றும் சப்த்திரிஷியில் தீபம் ஏற்றுதல்.
· 17.12.2024: சண்டிகேஸ்வரருக்கு தீபம் ஏற்றுதல்.



Click it and Unblock the Notifications



