கேரளாவின் புகழ்பெற்ற கடற்கரைகளில் ஒன்றான பய்யோலி பீச் அமைதியான சுற்றுச் சூழலை கொண்டிருப்பதால் பிரபலமான சுற்றுலா மையமாக திகழ்ந்து வருகிறது. இந்தப் பகுதிகளில் கடல் ஆழமற்று காணப்படுவதால் நீங்கள் பல்வேறு நீர் விளையாட்டுகளில் ஆனந்தமாக ஈடுபடுவதோடு, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கடலில் நீந்தித் திளைக்கலாம். இப்பகுதிகளின் விருந்தோம்பல் பண்பும், உணவு வகைகளும் உங்களை இந்த இடத்தின் அடிமையாகவே மாற்றி விடும்.
பய்யோலி பீச்சில் நீங்கள் ஆலிவ் ரிட்லி ஆமைகள் போன்ற அரிய வகை உயிரினங்களை பார்த்து ரசிக்கலாம். அதிலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முட்டையிட்டு அடை காப்பதற்காக இந்த வகை ஆமைகள் நூற்றுக் கணக்கில் பய்யோலி கடற்கரைக்கு வரும். இதனால் ஒரு வனவிலங்கு சரணாலயத்தில் காணும் அரிய காட்சி போன்று நீங்கள் பய்யோலி கடற்கரையிலேயே வெகு அருகில் பார்த்து ரசிக்க முடியும்.
பய்யோலி பீச்சுக்கு வரும் போது பய்யோலி கோழி பரிச்சாட்டு என்று அழைக்கப்படும் பய்யோலி சிக்கன் ஃபிரையினை சுவைக்க மறக்காதீர்கள். இந்த வகை சிக்கன் ஃபிரையை சிவப்பு மிளகாய் மற்றும் பலதரப்பட்ட மசாலா வகைகளை கொண்டு வித்தியாசமான முறையில் பய்யோலி நகரவாசிகள் அவர்களுக்கே உரிய பாணியில் தயார் செய்வார்கள். இதைப் போன்ற ஒரு சுவைமிகுந்த கோழி உணவு வகையை நீங்கள் இதற்கு முன்பு சுவைத்திருக்க முடியாது.
பய்யோலி பீச் அருகில் உள்ள வெல்லியம்கல்லு எனும் மிகப்பெரிய பாறை வடிவம் பழங்காலத்தில் கடல் மாலுமிகளுக்கு பெரும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தது. இந்தப் பாறையில் இயற்கையாக அமைந்திருக்கும் சில செதுக்கல்கள் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
அதோடு இந்தப் பகுதி ஒரு சில புலம்பெயர் பறவையினங்களுக்கு புகலிடமாகவும் விளங்கி வருகிறது.மேலும் பய்யோலி பீச்சிலிருந்து இந்த பாறைகளுக்கு செல்ல படகுகளும் இயக்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications