டிராக்கோல் கோட்டை சாவாந்த்வாடியை ஆண்ட கேம் சாவந்த் போன்ஸ்லே மன்னரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு வெகு நாள் வரை அவருடைய ஆளுமையின் கீழேயே இருந்து வந்தது.
அதன்பிறகு 1746-ஆம் ஆண்டு கோட்டை போர்த்துகீசியர்கள் வசம் செல்லும் வரை பல்வேறு கொடிகள் இந்தக் கோட்டையில் பறந்தன. இறுதியாக கோவா 1961-ஆம் ஆண்டு விடுதலை அடையும் வரை இந்தக் கோட்டையை சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களுக்கான முகாமாக பயன்படுத்தி வந்தனர்.
டிராக்கோல் கோட்டை மற்ற கோவா பகுதிகளை போல அல்லாமல் வணிகமயமாக்களின் பிடியிலிருந்து எப்போதும் விலகியே இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாகவே இதன் இயற்கை அழகை ரசிப்பதற்காக இங்கு வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இந்தக் கோட்டை குன்றின் உச்சியில், டிராக்கோல் நதியின் முகத்துவாரத்தில் அமைந்திருக்கும் பேரழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மேலும் இந்தக் கோட்டையின் எழிலை பரிபூரணமாக பார்த்து ரசிக்க நீங்கள் கோடை காலத்தில் இங்கு சுற்றுலா வருவதுதான் சிறப்பாக இருக்கும்.
தெற்கு கோவா பகுதிகளான பனாஜி, வாஸ்கோ போன்ற நகரங்களிலிருந்து டிராக்கோல் கோட்டைக்கு வருவது சற்று நீண்ட பயணமாக உங்களுக்கு தோன்றும். எனினும் வாடகை கார்களின் மூலம் கோட்டையை சுலபமாக அடைய முடியும்.
இதுதவிர கேண்டலிம், பாகா, கலங்கூட் உள்ளிட்ட வடக்கு கோவா பகுதிகளிலிருந்து வருபவர்கள், பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கோட்டைக்கு வந்து சேரலாம்.
ஆனால் இந்த பைக் பயணம் எவ்வளவுக்கு எவ்வளவு சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை கொடுக்குமோ அவ்வளவுக்கு அவ்வளவு குன்றுகள் நிறைந்த இந்த பாதைகளில் ஆபத்தும் உள்ளது. எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.



Click it and Unblock the Notifications