கேரளாவின் இரண்டாவது மிகப்பெரிய நதியாக திகழ்ந்து வரும் பாரதப்புழா நதி, நிலா என்ற மற்றொரு பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த நதி மலபார் மாவட்டத்தின் தனித்துவமான கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு பல ஆண்டுகளாக முக்கிய பங்காற்றி வருகிறது. இதைப்பற்றி பிராந்திய எழுத்தாளர்கள் நிறைய இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.
பொன்னனி நகரில் பாரதப்புழா நதியும், திரூர் ஆறும் பிரம்மாண்டமான அரபிக் கடலில் கலப்பதற்கு முன் சங்கமாகும் அலைவாயில் ஒன்று உள்ளது. இந்த இடம் ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகளுக்கு தற்காலிக புகலிடமாக விளங்கி வருகிறது. எனவே எண்ணற்ற பறவையினங்களை கண்டு ரசிக்க இங்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
209 கிலோமீட்டர் நீளம் நீண்டு செல்லும் பாரதப்புழா நதி வெறும் நீரை மட்டும் கடத்திச் செல்லவில்லை, கலாச்சாரத்தையும், பார்மபரியத்தையும் சுமந்து செல்கிறது. இதன் நீர்ப்பிரவாகம் கோடையில் வற்றிப் போனாலும், மழைக் காலத்தில் நதியோரத்தில் பசுமை படர்ந்திருக்க வெள்ளமென பாரதப்புழா நதி சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும். இருந்தாலும் பாரதப்புழா நதியின் பேரழகை ரசிப்பதற்கு மழை, வெயில் என்று எந்த பாரபட்சமும் கிடையாது.