சவாய் மாதோபூர் நகரத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்று சௌத் மாதா கோயில் ஆகும். பெயருக்கேற்ப இது சௌத் மாதா எனும் தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது.இப்பிரதேசத்தை ஆண்ட மன்னர்களின் முக்கியமான தெய்வங்களில் ஒன்றாக இந்த சௌத் மாதா தெய்வம் கருதப்படுகிறது.
பல்வேறு முக்கிய நாட்களில் இங்கு பக்தர்கள் திரளாக விஜயம் செய்கின்றனர்.நகரத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் ஒரு மலையுச்சியின் மீது அமைந்துள்ள இந்த கோயில் ராஜஸ்தானில் ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாகவே பிரசித்தி பெற்றுள்ளது.
பசுமையான சூழல் மற்றும் புல்வெளிகள் நிறைந்த பிரதேசத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெண்பளிங்குக்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அற்புதமான கோயில் அக்காலத்திய ராஜபுத்திர கட்டிடக்கலை மேன்மைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இதன் சுவர்களிலும் மேற்கூரைகளிலும் நுணுக்கமான கல்வெட்டு குறிப்புகள் காணப்படுவது மற்றொரு சுவாரசியமான அம்சமாகும்.
இந்தக்கோயிலுக்கு செல்வதற்கு சிரமமான படிகளை ஏறி செல்ல வேண்டியுள்ளது. மஹாராஜா பீம் சிங் என்பவர் அருகிலுள்ள பஞ்சாலா எனும் கிராமத்திலிருந்து சௌத் மாதா விக்கிரகத்தை கொண்டுவந்து இந்த கோயிலை எழுப்பியுள்ளார். மூல விக்கிரகத்தை தவிர்த்து இங்கு கணேஷக்கடவுள் மற்றும் பைரவர் ஆகியோரின் சிலைகளும் காணப்படுகின்றன.