ஷோகி எனும் இந்த சிறு நகரம் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 5700 மீ உயரத்தில் அமைந்துள்ளது. சிம்லா மாவட்ட மையத்திலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நகரம் ஹிமாச்சல் மாநிலத்தின் முக்கியமான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாக புகழ்பெற்றுள்ளது. ஓக் மரங்களும், அலிஞ்சி எனப்படும் ஒருவகை மலைச்செம்பருத்தி மலர்த்தாவரங்களும் (பலவண்ணங்களில்) இப்பகுதியில் அடர்ந்து காணப்படுகின்றன. இங்கு விளையும் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகள், ஜெல்லிகள், சிரப்கள் மற்றும் ஊறுகாய்களுக்கு ஷோகி மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.
ஷோகி நகரத்தின் வரலாறு 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேய-கூர்க்கா சண்டைகள் நடந்த காலகட்டம் வரை நீள்கிறது. 1815ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி மலாவ்ன் எனும் இடத்தில் நடந்த சண்டையில் கூர்க்கா இனத்தார் ஜமீன் பிரபுக்களிடம் தோற்றனர்.
பின்னர் ஆங்கிலேயர்களும் ஜமீன் பிரபுக்களும் சேர்ந்து கூர்க்கா இனத்தாரிடம் சஞ்ஜௌலி ஒப்பந்தம் எனும் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டனர். இதன்படி கூர்க்கா ஆட்சியில் இருந்த பகுதிகள் பழைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.
பின்னாளில் இந்த ஒட்டுமொத்த பகுதியும் - சிம்லா உட்பட - பாடியாலா மஹாராஜாவிடம் ஆங்கிலேயர்களால் அவரது விசுவாசத்திற்கு பரிசாக தரப்பட்டது.
ஷோகி நகரம் ஏராளமான கோயில்களை கொண்டிருப்பதால் கோயில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட ஹனுமான் கோயில், காளி கோயில் மற்றும் தாரா தேவி கோயில் போன்றவை இவற்றில் ஆன்மீக முக்கியத்துவம் கொண்டவையாக அறியப்படுகின்றன.
ஷோகி நகரத்திற்கு வருகை தரும் பயணிகள் அருகிலுள்ள ஜாக்கூ மலைக்கும் விஜயம் செய்யலாம். இங்கு சில புராதனமான கோயில்கள் உள்ளன.
ஷோகி நகரமானது விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் போன்ற போக்குவரத்து வசதிகள் மூலம் எளிதில் சென்றடையும்படி அமைந்துள்ளது.
சிம்லாவின் ஜுப்பர்ஹட்டி விமான நிலையம் ஷோகி நகரத்துக்கு அருகில் 21 கி.மீ தூரத்தில் உள்ளது. மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு வசதியாக டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமும் உள்ளது.
கல்கா ரயில் நிலையம் ஷோகி நகரத்துக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாகும். இங்கிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இணைப்பு சேவைகள் உள்ளன. ஹிமாசல் பிரதேச மாநிலத்தின் மற்ற நகரங்களிலிருந்து ஷோகி நகரத்துக்கு பேருந்து வசதிகளும் உள்ளன.
ஷோகி பிரதேசத்தின் பருவநிலை வருடம் முழுக்கவும் இனிமையானதாகவே காணப்படுகிறது. எனவே எல்லாப்பருவத்திலும் பயணிகள் இங்கு விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications