தாராபீத் எனும் இந்த கோயில் நகரம் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது. இது இங்குள்ள தாரா கோயிலுக்கு புகழ் பெற்றிருக்கிறது. தாரா எனும் தெய்வம் சக்தியின் ஒரு ரூபமாகும். ‘தாராபீத்’ எனும் பெயருக்கு ‘தாரா தேவி வீற்றிருக்கும் பீடம்’ என்பது பொருளாகும். இந்தியாவில் சக்தி பீடங்களில் ஒன்றாக இந்த ‘தாரா மா’ கோயில் வணங்கப்படுகிறது.
தாராபீத் நகர் மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்
முக்கிய ஆன்மீக நகராக விளங்கும் தாராபீத் நகரத்தில் பீர்சந்த்ராபூர் கோயில், நல்ஹடேஷ்வரி கோயில், மல்லார்பூர் ஷிவ் கோயில், லக்ஷ்மி கோயில், மாலுடி கோயில் ஆகியை அமைந்துள்ளன.
தாராபீத் நகரின் புராணிக முக்கியத்துவம்
அழிப்புக்கடவுளான சிவனின் மனைவியான சதி அவளது தந்தையால் அவமதிக்கப்பட்டு யோக குண்டத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் விரக்தியடைந்துபோன சிவன் உக்கிர நடனத்தை ஆட ஆரம்பித்துள்ளார்.
சிவனின் ருத்திர தாண்டவத்தால் உலகம் அழியும் அபாயம் ஏற்படுவதை கண்ட விஷ்ணுக்கடவுள் தனது சுதர்சன சக்கரத்தை பயன்படுத்தி சதியின் உடலை பல துண்டுகளாக்கி பூமியில் வந்து விழும்படி செய்தார்.
அப்படி விழுந்த உடற்பாகங்களில் சதியின் கண் இந்த தாராபீத் ஸ்தலத்தில் வந்து விழுந்தது. எனவே இந்த இடம் ‘தாராபீத்’ என்றழைக்கப்பட ஆரம்பித்தது. தாரா எனும் சொல் ‘கண்’ மற்றும் நட்சத்திரத்தை குறிப்பதாகும். அதற்கு முன்பு இந்த இடம் சண்டிபூர் என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
சக்திக்கடவுளின் மற்றொரு ரூபமாகிய சதி எனும் அவதாரத்தோடு தொடர்புடைய புராணிக பின்னணியை கொண்டிருக்கும் இந்த தாராபீத் நகரம் தற்போது ஒரு முக்கியமான தாந்த்ரீக வழிபாட்டுத்தலமாக புகழ் பெற்றுள்ளது.
தாரா கோயில்
பெரியதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் இந்த தாரா மா கோயில் காட்சியளிக்கிறது. ‘டோச்சலா’ எனும் வளைவான கூரையு அமைப்பு மற்றும் சலவைக்கல் சுவர்களால் இது எழுப்பப்பட்டிருக்கிறது.
இந்த கோயிலின் முன்புற அமைப்பு சுடுமண் அமைப்பினால் அலங்காரப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பில் சக்தி, காளி மற்றும் துர்க்கை அவதாரங்களோடு தொடர்புடைய சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
உள் கர்ப்பக்கிருகத்துக்கு செல்லும் எல்லா கதவுகளும் மலர்த்தோரண அலங்கார நுணுக்கங்களை கொண்டுள்ளன. இவற்றில் சிவன் மற்றும் உபதெய்வங்களின் உருவங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன.
கருவறையின் உள்ளிருக்கும் விக்கிரகமானது வெள்ளியால் உருவாக்கப்பட்ட முகத்துடன் விரிவான அலங்காரங்களை கொண்டதாகவும், மூன்று கண்களுடன் குங்குமம் பூசப்பட்டும் காட்சியளிக்கிறது.
தாரா மா தெய்வத்தின் பெயரால் வழங்கப்படும் பிரசாத நீரில் தண்ணீர், குங்கமம் மற்றும் சிறிது மது ஆகியவை கலந்து அளிக்கப்படுகிறது. இது இந்த தெய்வத்தின் அபிஷேக நீராகவே குறிப்பிடப்படுகிறது.
சிவன் மற்றும் தாந்த்ரீக யோகிகளுக்கு மது மிகவும் பிடித்தமானது என்பதால் பக்தர்கள் இந்த தாரா மா தெய்வத்திற்கு மது பானத்தையே படையலாக அளிக்கின்றனர்.
தந்த்ரிக் மயான பூமி
கோயிலுக்கு அருகேயே அமைந்திருக்கும் மயான பூமியானது தந்த்ரிக் சடங்குகள் நடைபெறும் மயானமாக இருந்து வருகிறது. மஹாசமாஷனா என்று அழைக்கப்படும் இந்த மயானபூமி ‘தாரா மா’ தெய்வம் உலவும் இடமாக நம்பப்படுகிறது. மேலும், இத்தெய்வத்தின் உக்கிரத்தை தணிவிக்கும் பொருட்டு இந்த மயானபூமியில் தினமும் மிருகபலியும் நிறைவேற்றப்படுகிறது.
எனவே இந்த மஹாசமாஷனா மயான பூமிக்கு தந்த்ரிக் யோகிகள் மற்றும் சாதுக்கள் அதிக எண்ணிக்கையில் விஜயம் செய்கின்றனர். பலர் இங்கேயே வசித்து பல்வேறு சடங்குகள் மற்றும் தியானத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
யோகி பாமகேபா
தாராபீத் நகரில் பிரபல்யமான ஒரு யோகியாக இந்த பாமகேபா பிரசித்தமாக அறியப்படுகிறார். இவர் ‘பித்து’ யோகி என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளார். ஷீ ஷீ பாம்தேவ் ஸ்மிருதி மந்திர் எனப்படும் கோயில் ஒன்று அவர் ஞாபகார்த்தமாக இந்நகரில் கட்டப்பட்டிருக்கிறது.
இது இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. தனது தெய்வீகம் கலந்த ‘பித்து’ சுபாவத்தின் மூலம் இவர் பக்தர்களை வெகுவாக தனது வாழ்நாளில் கவர்ந்துள்ளார். இவரது சிவப்பு நிற சமாதியை மஹாசமாஷனா மயான பூமியின் வாசலுக்கருகே பார்க்கலாம். யாத்ரீகர்கள் இவரது சமாதியை வழிபட்டு அஞ்சலி செலுத்தும் வழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.
எப்படி செல்வது?
தாராபீத் நகரை விமானம், ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து மூலமாக எளிதில் சென்றடையலாம்.