மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா நகரமாக இந்த பாங்குரா நகரம் பிரசித்தமடைந்து வருகிறது. அளவில் சிறியதாக இருந்தாலும் இந்நகரத்தின் தனித்தன்மையான அம்சங்கள் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.
மஹாபாரத காவியத்தில்கூட இந்த நகரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கலாச்சார பாரம்பரிய அம்சங்கள் நிரம்பிய இந்நகரத்தில் சுமார் 1,50, 000 மக்கள் வசிக்கின்றனர். சீன வரலாற்று நூல்களிலும் இந்த நகரம் பற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாங்குரா – சுற்றுலா அம்சங்கள்
பாங்குரா நகரை சுற்றிலும் பல்வேறு முக்கியமான சுற்றுலா அம்சங்கள் உள்ளன. இந்த நகரத்திற்கு மேற்கில் 50 கி.மீ தூரத்தில் சுசியானா மலை எனும் இடத்தில் ஒரு வெந்நீர் ஊற்று அமைந்திருக்கிறது.
இது தவிர பாங்குரா மாவட்டத்திலேயே மிக உயரமான பெஹரிநாத் மலை முக்கியமான ஜைன வழிபாட்டுத்தலமாக புகழ் பெற்றுள்ளது. பாங்குரா நகரிலிருந்து 55 கி.மீ தூரத்தில் முக்திமாண்பூர் எனும் இடத்தில் உள்ள அணைப்பகுதி இந்நகரத்தின் பிரதான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த அணை இந்தியாவிலுள்ள மண் தடுப்பு அணைகளில் இரண்டாவது பெரிய அணையாக அறியப்படுகிறது. இவை தவிர வரலாற்று பின்னணியை கொண்ட பல கோயில்கள் மற்றும் மசூதிகள் போன்றவையும் பாங்குரா நகரத்தில் அமைந்துள்ளன.
கலை மற்றும் இசை
பெங்காளி பாணி ஓவியங்கள், இசை மற்றும் நாட்டுப்புற கலை மரபு போன்றவற்றுக்கு இந்த பாங்குரா நகரம் பிரசித்தி பெற்றுள்ளது. சுடுமண் படைப்புகள் இங்கு பிரதான கலையம்சமாக விளங்குகின்றன.
இந்த நகரத்தில் உருவாகியுள்ள சில இசைக்குழுக்கள் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபல்யமடைந்துள்ளன. இவை தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியில் பயிலும் இளைய தலைமுறையினரால் துவங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.