அருகில் மனித நடமாட்டமே இல்லாத ஒரு அமைதி சூழலில், கடற்கரை ஓரத்தில் இயற்கையோடு தனித்திருக்க நீங்கள் விரும்பியதுண்டா? எனில் நீங்கள் வரவேண்டிய இடம் தாஜ்பூர் கடற்கரை அன்றி வேறில்லை. இந்த தாஜ்பூர் சுற்றுலாத்தலம் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவிலிருந்து சிறிது நேர பயண தூரத்திலேயே அமைந்துள்ளது.
கடற்கரை எழில்
இந்த தாஜ்பூர் கடற்கரையில் வித்தியாசமான அம்சங்கள் பயணிகளுக்காக காத்திருக்கின்றன. கரைப்பகுதியை நோக்கி குவிந்த பிறைபோன்ற அமைப்பில் அல்லாமல் கடலை நோக்கி குவிந்த கரையமைப்புடன் காட்சியமைப்பதால் கடலின் அழகும் தொலைதூர தொடுவானமும் மயக்கும் எழிலுடன் பார்வையாளர்களை வசப்படுத்துகின்றன.
அதுமட்டுமல்லாமல் இந்த கடற்கரையை சுற்றி பசுமையான வனப்பகுதி சூழ்ந்திருப்பது மற்றொரு தனித்தன்மையான அம்சமாகும். கடற்கரை மணலில் ஆயிரக்கணக்கான சிவப்பு நண்டுகள் ஒளிந்து வசிப்பதால் ரத்தச்சிவப்பு நிறத்தில் கடற்கரைப்பகுதி ஒளிர்வதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள முகத்துவாரத்தீவுப்பகுதியில் மீனவர் குடியிருப்புப்பகுதி ஒன்றும் உள்ளது. மீனவர் வாழ்க்கை முறையை நேரில் பார்க்க விரும்பும் பயணிகள் இந்த இடத்துக்கும் விஜயம் செய்யலாம்.
நேச்சர் கேம்ப்
நேச்சர் கேம்ப் எனப்படும் இந்த சுற்றுலா வளாகம் தாஜ்பூர் கடற்கரையை நோக்கியவாறு அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பயணிகள் வசதிக்காக பூங்காக்கள், ஊஞ்சல் இருக்கைகள், உணவு வசதிகள் மற்றும் உற்சாக பான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
சவுக்கு மரங்களும் யூகலிப்டஸ் மரங்களும் சூழ அமைந்திருக்கும் இந்த நேச்சர் கேம்ப் வளாகத்தில் பாதுகாப்பான வசதியான பொழுதுபோக்கை பயணிகள் அனுபவிக்கலாம்.
சாகச விளையாட்டு அம்சங்கள்
சாகச விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்களுக்காக இந்த கடற்கரைப்பகுதியில் பாராகிளைடிங், ஆற்றுமிதவைப்படகு சவாரி, பனானா ரைட் மற்றும் பாறை ஏற்றம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் காத்திருக்கின்றன.
இந்த கடற்கரையில் அதிகமான வழிகாட்டிகள் திரிவதால் அவர்கள் உங்களை தொந்தரவு செய்ய அனுமதிக்காமல் கவனமாக இருப்பதும் அவசியம்.
எப்படி செல்வது?
தாஜ்பூர் சுற்றுலாத்தலத்துக்கு சாலை மார்க்கம், ரயில், விமானம் போன்ற மூவகை போக்குவரத்து வசதிகள் மூலமாகவும் பயணம் மேற்கொள்ளலாம்.