தஞ்சாவூர் நகரத்திலிருந்து 65கி.மீ தூரத்தில் பட்டுக்கோட்டை நகரத்திற்கு அருகே இந்த மனோரா கோட்டை அமைந்திருக்கிறது. இது 1815ம் ஆண்டில் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது.
ஆங்கிலேயர்கள் நெப்போலியனின் ஃப்ரெஞ்சுப்படையை அடக்கிய வாட்டர்லூ போரின் வெற்றிச்சின்னமாக இது எழுப்பப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே சரபோஜி மன்னர் ஆங்கிலேயருடன் கொண்டிருந்த இணக்கத்தை தெரிந்துகொள்ள முடிகிறது.
எட்டு அடுக்குகளைக்கொண்டதாக எண்முக வடிவத்தில் 23 மீட்டர் உயரத்தை கொண்ட இந்த கோபுர அமைப்பு வித்தியாசமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. மினாரெட் எனும் சொல்லிலிருந்தே ‘மனோரா’ என்ற இந்த கோட்டையின் பெயர் பிறந்துள்ளது.
2004ம் வருடம் ஏற்பட்ட சுனாமி பேரலையின்போது இந்த கோட்டை சற்றே சேதமடைந்தாலும் உடனேயே புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பயணிகள் ஓய்வுக்கூடம் குழந்தைகள் பூங்கா போன்றவையும் இந்த கோட்டை ஸ்தலத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இந்த கோட்டையிலிருந்து இலங்கையை பார்க்க முடியும் என்றும் இக்கோட்டைப்பகுதி கப்பற்துறைமுகமாக பயன்பட்டது என்றும் ஆதாரமற்ற கதைகள் சொல்லப்படுகின்றன.
இங்கிருந்த சுரங்கப்பாதைகளில் மன்னரால் புதையல் பதுக்கப்பட்டிருந்தது என்றும் நம்பிக்கைகள் உள்ளன. இதன் காரணமாக சில புதையல் தேடிகள் இக்கோட்டைப்பகுதிக்கு சேதத்தையும் விளைவித்துள்ளனர். தற்சமயம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை இந்த வரலாற்றுச்சின்னத்தை பாதுகாக்க முயற்சிகள் எடுத்து வருகிறது.