அழகான இடங்களுக்கு மட்டுமல்ல தனித்துவமான, அதே சமயம் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளுக்கும் பெயர் பெற்ற மாநிலம் கேரளா. இயற்கையான தேங்காய் மணம், சுவை நிறைந்து இருக்கும் உணவுகள் இதுவரை எங்குமே அறியாத சுவையில் இருக்கும். கேரளா பாரம்பரிய உணவுகள் என்றால் அவியல், புளிசேரி, புட்டு-கடலைக்கறி, மீன் பிரியாணி, கச்ச பிரதமன், அடை பிரதமன் என எத்தனையோ உணவுகள் உள்ளன.

அது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் கேரளாவில் மலைப் பிரதேசங்களில் கிடைக்கும் உணவுகள் தனித்துவமானவை. இவைகள் இதுவரை பெரும்பாலானவர்கள் கேள்விப்படாத ஒன்றாக இருக்கும். கேரளாவின் மலைப் பிரதேசங்களுக்கு சென்றால் அவசியம் இந்த உணவுகளை ருசிக்க மறந்துடாதீங்க. காரணம், இவைகள் தான் அசல் கேரளாவின் மண் மணம், பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிப்பதாக இருக்கும்.
கேரளாவின் மலைப் பகுதி உணவுகள் :
கேரளா சாட்யா :
இது சைவ உணவுகளின் ராஜா. திருவோணம், விஷு போன்ற பண்டிகைகளில் உணர்வோடு பரிமாறப்படும் சாட்யா, 20க்கும் மேற்பட்ட பொருட்கள் கொண்டிருக்கும். சாதம், சம்பார், ரசம், அவியல், தோரன், ஓலன், இஞ்சிசாறு, பப்படம், மற்றும் மூன்று வகை பாயசம் இதில் இடம்பெறும். வாழை இலையில் பரிமாறப்படுவதால் தனி வாசனை, சுவை தருகிறது. மூணாறு, தேக்கடி போன்ற மலை ஊர்களில் உள்ள பாரம்பரிய உணவகங்களில் சாட்யாவை அனுபவிக்கலாம்.

மீன் பொரிச்சது :
கரிமீன் அல்லது நெய்மீனை மசாலாவில் ஊற வைத்து, வாழை இலையில் மடக்கி வதக்கப்படும் இந்த டிஷ், தாளிக்கும் போது கிளம்பும் வாசனையால் சுற்றுலாப் பயணிகளை இழுக்கும். வெளி பகுதி கிரிஸ்பியாக, உள்ளே மென்மையாக இருக்கும். தண்ணீர் சாறு இல்லாததால் டிரை ஃபிஷ் வகையில் சேரும். கோவளத்தில் இருந்து வாகமனுக்கு செல்லும் வழியில் உள்ள கடைகளில் இந்த உணவு பிரபலமானது. வழக்கமாக நம்ம ஊர் மீன் பொரியல் போல் மிகவும் க்ரிஸ்பியாக இல்லாமல் மசாலா தூக்கலாக, லேசான க்ரிஸ்பினஸ் உடன் இருக்கும்.
கேரள சிக்கன் கிரேவி :
வெந்த தேங்காய், மிளகு, சோம்பு, கிராம்பு, இஞ்சி, பூண்டு உள்ளிட்ட சுவை மசாலா சேர்த்து சிக்கனை மிதமான தீயில் சமைக்கும் கிரேவி. தேங்காய்ப் பால் அதிகம் சேர்த்திருப்பதால், இது மென்மையானாலும் காரம் சரியாக இருக்கும். ஆப்பம், இடியப்பம், நீர்சாதம், சோறு என எதற்கும் ஏற்ற சைட் டிஷ்ஷாக இருக்கும். குமுளி பகுதிகளில் உள்ள ஹோம்ஸ்டே கிச்சன்களில் இங்கே தாய்மார்கள் சமைக்கும் சுவை தனி லெவல்!

இறைச்சி வறுத்தரச்ச குழம்பு :
வறுத்த தேங்காயுடன், பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் இந்த நாட்டு ஸ்டைல் குழம்பு, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி அல்லது பீஃப்புடன் சமைக்கப்படும். சுவையில் ஆழமும், வாசனையில் வலிமையும் இருக்கும். இந்த உணவு மலை பிரதேச வீடுகளில் காலை, மாலை இரண்டு வேளைகளும் பாரம்பரியமாக தயாரிக்கப்படும். அடுத்த முறை கேரளா சென்றால் இதை ஒருமுறை ருசித்து பாருங்க.
மலபார் பரோட்டா மற்றும் கிரேவி :
லேயர்ஸ் பரோட்டா - மென்மையானதும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். முட்டை, சிக்கன், பீஃப், காட்டு இறைச்சி குழம்புகளுடன் பரிமாறப்படும் இந்த உணவுக் கூட்டணி வேற லெவலில் இருக்கும். வயநாடு, மஞ்சேரி போன்ற இடங்களில் தெருவோர உணவகங்களில் சிறந்த பரோட்டா கிடைக்கும். மலபார் பரோட்டா மிகவும் பிரபலமாக இருப்பதற்கு காரணமே லேயர் லேயராக இருக்கும் அமைப்பு தான். கேரளாவின் கிராமப் புறங்களில் துவங்கி, பெரிய ஸ்டார் ஓட்டல் வரை இந்த மலபார் பரோட்டா கிடைக்கும்.
கப்பா மற்றும் மீன் குழம்பு :
மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து, வெறும் உப்பு, பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்துத் தாளிக்கிறார்கள். இதற்கு இணையாக, காரமான வெந்த மசாலா மீன் குழம்பு, முக்கியமாக சாம்பல் வண்ணா மீன், பரிமாறப்படும். ருசியும், நிறமும் அட்டகாசம். கிராமப் புறங்களில் வீடுகளிலும், ஓட்டல்களிலும் கிடைக்கும். இது நாள்தோறும் பரிமாறப்படும். மரவள்ளிக்கிழங்கை பயன்படுத்தி செய்யப்படும் உணவுகள் தான் கேரளாவின் பாரம்பரிய உணவுகளில் மிகவும் பிரதானமானவை. இதனால் இன்றும் இந்த உணவுகளை பலரும் விரும்பி சுவைக்கிறார்கள்.
கஞ்சி மற்றும் பயறு :
பச்சரிசியால் செய்யப்பட்ட கஞ்சி மற்றும் பச்சைப்பயறை வெந்து, பச்சை மிளகாயுடன் சேர்த்து சமைக்கப்படும் தொக்குடன் சூடாக பரிமாறப்படும். அத்துடன் உப்பு, நெய், சிறிது எண்ணெயில் வறுத்த உளுத்தம் பருப்பு சேர்த்தால் சத்தும் ருசியும் கூடும். மலைவாசிகள் இதை தினமும் இரவு உணவாக உண்பது சாதாரணமே. இவை எளிமையான, எளிதில் ஜீரணமாகக் கூடிய, அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியமும், இரவில் நிம்மதியான தூக்கமும் தரக் கூடியவை ஆகும்.
காட்டு காளான் பொரியல்:
மலைக்காடுகளில் இயற்கையாக வளரும் காட்டு காளான் தேங்காயும் மிளகாயும் சேர்த்து வறுக்கப்படுகிறது. நுணுக்கமான வாசனை, மென்மையான டெக்ஸ்ச்சர், மிகச் சிறிய காரம், சுத்த சுகமானது. சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு புதிய அனுபவத்தை தரும். இந்த காளான்கள் இயற்கையாக, ஃபிரஷாக தயாரித்த மசாலாக்களை பயன்படுத்தி செய்யப்படுவதால் இதன் சுவையே தனித்துவமாக இருக்கும். காட்டு காளான் பொரியல், அசைவ-சைவ என இரு வகையான உணவுப் பிரியர்களையும் கவர்ந்து இழுப்பதாக உள்ளன.
மூங்கில் அரிசி பாயசம் :
மூங்கிலின் விதைகள் இயற்கையில் அரிதாகக் கிடைக்கும். இது தேன், தேங்காய்ப்பால், நெய் மற்றும் ஏலக்காய் சேர்த்து சமைக்கப்படுகிறது. பழங்குடியினர் கொண்டாடும் பண்டிகைகளின் போது முக்கியமான உணவாக இருக்கிறது. மூணாறு மற்றும் வயநாடு பகுதியில் சில ஹெரிடேஜ் உணவகங்களில் இப்போது பரிமாறப்படத் தொடங்கியுள்ளது.
உள்ளூர் ஊறுகாய் மற்றும் சட்னிகள் :
காட்டு நெல்லிக்காய், பச்சை மாங்காய், பலாப்பழம், மூலிகை இலைகள், பெருங்காயம், தேங்காய் இவையெல்லாம் சேர்த்து தயாரிக்கப்படும் ஊறுகாய் மற்றும் சட்னிகள், முக்கிய உணவுகளுக்கு பக்கவாட்டாக நன்கு பொருந்தும். இந்த சுவைகள், சுத்த பசுமையும், உள்ளூர் பாரம்பரியத்தையும் உணர்த்தும். சந்தைகளில் கூட இது பாட்டில்களில் கிடைக்கும்.
இவை அனைத்தும் ஹோட்டல்களில் மட்டுமல்ல, ஹோம்ஸ்டே, லோக்கல் வீட்டுப் பேக், பண்ணை விடுதிகளில் இன்னும் ருசிகரமாகச் சமைக்கப்படும். உணவின் நேர்த்தியும், சேவையின் மனதார உணர்வும் மலைப் பிரதேச உணவுப் பயணத்தையே அழகாக்கும். கேரள படகு இடங்களில் நீங்கள் தங்கினாலும் இந்த உணவுகளை அவசியம் கேட்டு வாங்கி சுவைக்க மறந்துடாதீங்க. இந்த உணவுகளை ஒருமுறை சாப்பிட்டால் பிறகு, உங்கள் நாவில் கேரள உணவுகளின் ருசி அப்படியே ஒட்டிக் கொள்ளும்.



Click it and Unblock the Notifications






