எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டு துவங்கினால் அந்தக் காரியம் வெற்றி பெரும் என்று நம்பப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஏதேனும் ஒன்றை எழுதத்துவங்கும் முன் தமிழ் எழுத்து 'உ'-வை எழுதி தொடங்குவது வழக்கம். இந்த உகரமே (உ) பிள்ளையார் சுழியாக கருதப்படுகிறது.
இப்படியாக முழுமுதல் கடவுளான விநாயகருக்கு இன்று மூலைக்கு மூலை கோயில்கள் காணப்படுகின்றன.
ஆனால் எவ்வளவு பிள்ளையார் கோயில்கள் இருந்தாலும் ஒரு சில கோயில்கள் பக்தர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று திகழ்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோயில்களை பற்றி பார்ப்போம் வாருங்கள்!

சாசிவேகாலு கணேசா கோயில்
கர்நாடகாவின் சரித்திர புகழ் வாய்ந்த ஹம்பி நகரத்தில் ஹேமகூட மலையடிவாரத்தில் சாசிவேகாலு கணேசா கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகர் சிலை கடுகுகளினால் பூசப்பட்டது போல் தோன்றுவதால் கடுகு கணேசா (சாசிவேகாலு கணேசா) என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் அதிகம் உணவை உண்டு விட்ட விநாயகர் தன் வயிறு வெடித்துவிடாமல் இருக்க ஒரு பாம்பை எடுத்து தன் வயிற்றில் கட்டிக்கொண்டதாக ஐதீகக் கதைகள் கூறப்படுகின்றன. அதன் காரணமாக இந்த விநாயகர் சிலையின் வயிற்றில் ஒரு பாம்பை சுற்றியிருப்பது போன்று சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. 8 அடி உயரமுள்ள இந்த விநாயகர் சிலை ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டுள்ளது.
படம் : Jean-Pierre Dalbéra

தக்டுசேட் கணபதி, புனே
மகாராஷ்டிராவின் மிகவும் புகழ்பெற்ற விநாயகர் கோயில்களில் ஒன்றாக அறியப்படும் தக்டுசேட் கணபதி கோயில் புனேவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் இந்தியாவின் பணக்கார கோயில்களில் ஒன்றாக கருதப்படுவதுடன், இக்கோயிலின் விநாயகர் சிலை ரூபாய் 1 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
படம் : Niraj Suryawanshi

சித்தி விநாயக் மந்திர், மும்பை
மும்பையின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான சித்தி விநாயக் மந்திர் 1801-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோயில் முன்பு சிறிய செங்கல் கட்டிடமாக காட்சியளித்துக்கொண்டிருந்தாலும், இன்று மும்பையின் செல்வச் செழிப்பான கோயிலாக திகழ்ந்து வருகிறது.
படம் : Darwininan

சுயம்பு கணபதி கோயில், கணபதிபுலே
மகாராஷ்டிராவின் கணபதிபுலே நகரில் கரீபியன் கடற்கரை என்று அழைக்கப்படும் கணபதிபுலே கடற்கரையில் சுயம்பு கணபதி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் விசேஷமான அம்சம் என்னவெனில் இங்குள்ள கணபதி சிலை மணற்பாறையில் தானே உருவானதாக சொல்லப்படுவதாகும். சிங்கத்தின் மீது அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் கணபதியின் தாமிரச்சிலையும் இங்குள்ளது. இது கர்ப்பகிருகத்தில் காணப்படுகிறது.
படம் : Kprateek88

கற்பக விநாயகர் கோயில், திருப்பத்தூர்
கற்பக விநாயகர் கோயில் அல்லது பிள்ளையார்பட்டி கோயில் என்று அறியப்படும் தமிழ்நாட்டின் மிகப்புகழ்பெற்ற விநாயகர் கோயில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது. இந்தப் பாறைக்குடைவு கோயிலில் கண்டறியப்பட்ட ஆகம குறிப்புகளிலிருந்து இது கி.பி 1091-மற்றும் 1238-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தொட்ட கணபதி கோயில், பெங்களூர்
பெங்களூரில் உள்ள பசவனகுடி எனும் பகுதியில், புகழ்பெற்ற காளைக்கோயிலுக்கு வெகு அருகில் தொட்ட கணபதி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் விநாயகர் சிலை ஒற்றைப் பாறாங்கல்லை குடைந்து உருவாக்கப்பட்டதாகும். இது 18 அடி உயரத்துடனும், 16 அடி அகலத்துடனும் வெகு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாகவே தொட்ட (மிகப்பெரிய) என்று கன்னடத்தில் பொருள்படும்படி இந்தக் கோயில் தொட்ட கணபதி கோயில் என்று அழைக்கப்படுகிறது.

கொட்டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோயில், கொட்டாரக்கரா
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான கொட்டாரக்கராவில் ஸ்ரீ மஹாகணபதி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் அதன் முதன்மை தெய்வமான சிவனின் பெயரால் கிழக்கேகரா சிவன் கோயில் என்ற பெயரில்தான் முதலில் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் நாளைடைவில் இந்தக் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதியின் புகழ் காரணமாக விநாயகர் கோயில் என்ற அளவிலே பிரபலமாக தொடங்கியது. இங்கு சிவன், விநாயகரை தவிர பார்வதி, முருகன் மற்றும் ஐயப்பாவின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

உச்சிப்பிள்ளையார் கோயில், திருச்சி
திருச்சியில் உள்ள மலைகோட்டை 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மலைகோட்டையின் உச்சியில் அமைந்துள்ள பழமையான விநாயகர் கோயிலான உச்சிப்பிள்ளையார் கோயில் பல்லவர்களால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு பின்பு 7-ஆம் நோற்றாண்டில் மதுரை நாயக்கர்களால் கட்டி முடிக்கப்பட்டது. தரைமட்டத்திலிருந்து 273 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலை அடைய 437 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
படம் : Neilsatyam

மணக்குள விநாயகர் கோயில், பாண்டிச்சேரி
பாண்டிச்சேரியில் பிரெஞ்சு கம்பெனி கால் பதிப்பதற்கு முன்பே 1666-ஆம் ஆண்டு மணக்குள விநாயகர் கோயில் கட்டப்பட்டுவிட்டது. இந்த கோயில் அமைந்திருக்கும் பகுதியில் முன்பு எங்கும் மணல் பரந்து கிடந்ததோடு, அருகே ஒரு குளமும் இருந்ததால் இது மணக்குள விநாயகர் என்ற பெயரை பெற்றது. எங்கு பார்த்தாலும் சலமற்ற அமைதி நிரம்பியிருக்கும் இந்த கோயிலை நீங்கள் பாண்டிச்சேரி வரும்போது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

கணேஷ் மந்திர், ஜான்ஸி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்ஸி நகரில் கணேஷ் மந்திர் அமைந்துள்ளது. இந்த நகரை ஆண்ட காரணத்தால் 'ஜான்ஸி ராணி' என அறியப்பட்ட ராணி லக்ஷ்மிபாயின் வீர பூமி இது.
படம் : Prasann kanade

லக்ஷ்மிபூர் கணபதி கோயில்
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள வடக்கு லக்ஷ்மிபூர் நகரில் லக்ஷ்மிபூர் கணபதி கோயில் அமைந்துள்ளது.
படம் : rajkumar1220

காணிப்பாக்கம் விநாயகர் கோயில், சித்தூர்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் எனும் கிராமத்தில் காணிப்பாக்கம் விநாயகர் கோயில் அமைத்துள்ளது. இந்தக் கோயில் 11-அம நூற்றாண்டின் முற்பகுதியில் சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது.
படம் : Surendarj

அஷ்டவிநாயக்
அஷ்டவிநாயக் என்பது மகாராஷ்டிர மாநிலம் புனேவை சுற்றி அமைந்துள்ள எட்டு (அஷ்ட) விநாயகர் கோயில்களை குறிக்கிறது. இந்த எட்டு கோயில்களின் பெயர்களும் அவை அமைந்திருக்கும் இடங்களும் பின்வருமாறு : 1) மயூரேஷ்வர் - மோர்காவ்ன், 2) சித்திவிநாயக் - சித்ததேக், 3) பல்லாலேஷ்வர் - பாலி, 4) கிரிஜாத்மக் - லென்யாத்ரி, 5) சிந்தாமணி - தேவூர், 6) விக்னேஷ்வர் - ஒஸார், 7) மஹாகணபதி - ரஞ்சன்காவ்ன் மற்றும் 8) வரத்விநாயக் - மஹாத். பல சுற்றுலாப் பேருந்து நிறுவனங்கள் இந்த எட்டு விநாயகக் கோயில்களுக்குமான ஒருங்கிணைந்த சுற்றுலாவை மூன்று நாட்கள் கொண்டதாக ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றன.
மேலும் தகவலுக்கு

ரெடி கணபதி கோயில்
மகாராஷ்டிராவின் ரெடி நகரில் அமைந்துள்ள ரெடி கணபதி கோயில் குறித்து பல சுவையான கதைகள் சொல்லப்படுகின்றன. ரெடி கிராமம் வழியாக 1976-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி அன்று தன்னுடைய சுமையுந்தில் சென்றுகொண்டிருந்த சதானந் நாகேஷ் கம்பாலி என்ற ஓட்டுனர் ஓய்வு எடுப்பதற்காக ரெடியில் வண்டியை நிறுத்திவிட்டு அதனுள்ளே உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அவர் கனவில் தெய்வ வடிவாய் தோன்றிய கணபதி பெருமான், ரெடியின் ஒவ்வொரு பகுதியையும் தோண்டிப் பார்த்து தன் சிலையை கண்டேடுக்குமாறு கூறியிருக்கிறார். அந்த கனவை பூரணமாக நம்பிய தீவிர கணபதி பக்தரான சதானந் கம்பாலி, ரெடியை சேர்ந்த பனி ஆட்களை வைத்துக்கொண்டு தோண்டிப் பார்த்ததில், கடற்கரை ஓரமாக ஒரு விநாயகர் சிலை கிடைத்திருக்கிறது. அதுவே தற்போதுள்ள ரெடி கணபதி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கணபதி சிலை. இந்த சிலை 6 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டது.
படம் : Nilesh2 str

பிக்காவோலு மஹாகணபதி கோயில்
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிக்காவோலு கிராமத்தில் இந்த பிக்காவோலு மஹாகணபதி கோயில் அமைந்துள்ளது.
படம் : Adityamadhav83

அனந்தேஸ்வரா விநாயகர் கோயில்
கேரளாவின் காசர்கோட் மாவட்டத்தில் காசர்கோட் நகரத்துக்கு வெகு அருகில் மதூர் கிராமத்தில் அனந்தேஸ்வரா விநாயகர் கோயில் அமைந்துள்ளது.
படம் : Vinayaraj

மஹாகணபதி மஹமாய கோயில்
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஷிராலி நகரில் மஹாகணபதி மஹமாய கோயில் அமைந்துள்ளது.
படம் : Premkudva

பழவங்காடி கணபதி கோயில்
கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பழவங்காடி கணபதி கோயில் கேரளாவின் பிரசித்திபெற்ற விநாயகர் கோயில்களில் ஒன்றாகும்.
படம் : Jithindop

கர்ஜானா கணேஷ் கோயில்
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் கர்ஜானா கணேஷ் கோயில் அமைந்துள்ளது.
படம் : Ssanjayjain

ஸ்ரீ விநாயக தேவரு கோயில், இடகுஞ்சி
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள இடகுஞ்சி நகரத்தில் ஸ்ரீ விநாயக தேவரு கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications



