ராஜஸ்தானின் புவியியல், வானிலை, கலாச்சாரம் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளும் அதேவேளையில், இந்த மாநிலத்தில் எங்கெங்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பதை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். ராஜஸ்தானின் ஒவ்வொரு இடமுமே எழிலாகவும், வளமிக்கதாகவும், சுற்றுலாவுக்கு ஏற்றதாகவுமே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதைப்பூர், ஜெய்சல்மேர் போன்ற நகரங்கள் நாடு முழுவதும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள். ஆனால் இந்தியர்கள் பலருக்கே அறியாத இந்த ஐந்து நகரங்களைப் பற்றி நாம் பார்க்கவிருக்கிறோம்.
பன்ஸ்வாரா நகரம்
பன்ஸ்வாரா நகரம் ராஜஸ்தான் மாநிலத்தின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது. 5,307 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள பன்ஸ்வாரா மாவட்டத்தின் தலைநகரமாகவும் இது செயல்படுகிறது. சராசரியாக 302 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பன்ஸ்வாரா நகரம் ஒரு காலத்தில் மஹரவால் வம்சத்தை சேர்ந்த ஜக்மல் சிங் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட ராஜ்ஜியமாகவும் இருந்துள்ளது. இதன் பெயரிலுள்ள ‘பன்ஸ்' எனும் சொல் இப்பிரதேசத்தில் அதிகமாக காணப்படும் மூங்கில் காடுகளின் காரணமாக பிறந்துள்ளது.
பன்ஸ்வாரா மாவட்டத்தில் பாயும் மாஹி ஆற்றில் ஏராளமான தீவுகள் அமைந்திருப்பதால் இது நூறு தீவுகளின் நகரம் என்றும் பிரசித்தமாக அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் ராஜ சமஸ்தானமாக விளங்கியுள்ள இந்த பன்ஸ்வாரா மாவட்டம் மஹரவால் வம்சத்தாரால் ஆளப்பட்டிருக்கிறது. வகாத் அல்லது வக்வார் என்றழைக்கப்பட்ட கிழக்குப்பகுதியாக இது திகழ்ந்திருக்கிறது.
இப்பகுதியை ஆண்ட பீல் வம்ச மன்னரான பன்சியா என்பவரே இந்த பிரதேசத்திற்கு பன்ஸ்வாரா என்று பெயரிட்டதாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. பின்னாளில் அவரை தோற்கடித்து கொன்ற ஜக்மல் சிங் இப்பகுதியில் மஹரவால் வம்சத்தின் ஆட்சியை நிறுவியதாக இந்தக்கதைகள் தெரிவிக்கின்றன.
Vedpriyaa
சுற்றுலாத் தளங்கள்
திரிபுர சுந்தரி, மாஹி தாம், காக்டி பிக்னிக் ஸ்தலம் மற்றும் மாடரேஷ்வர் சிவன் கோயில் போன்றவை இங்குள்ள சில முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களாகும். அப்துல்லா பிர், ஆனந்த் சாஹர் ஏரி, பீம் குண்ட், அண்டேஷ்வர் ஜெயின் கோயில் மற்றும் சீஞ்ச் பிரம்மா கோயில் போன்றவையும் இதர் முக்கியமான விசேஷ ஸ்தலங்களாக அறியப்படுகின்றன.
Abhas Pandya
கோட்டா நகரம்
ராஜஸ்தான் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற நகரங்களில் ஒன்றான கோட்டா நகரம் சம்பல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மின்னுற்பத்தி நிலையங்கள் மற்றும் பலவிதமான தொழிற்சாலைகளை கொண்டிருப்பதால் இது ராஜஸ்தான் மாநிலத்தின் ‘தொழில் தலைநகரம்' என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய உரத்தொழிற்சாலை கோட்டாவில் அமைந்துள்ளது. குஜராத் மற்றும் டெல்லி இவற்றுக்கிடையேயான வணிகக்கேந்திரமாகவும் இது விளங்குகிறது
Rajatsh5
வரலாற்றுச் சின்னங்கள்
ராஜஸ்தான் பிரதெசத்தில் அமைந்திருப்பதால் இது இயல்பாகவே பல ஹவேலிகள், அரண்மனைகள், கோட்டைகள் மற்றும் இதர வரலாற்றுச் சின்னங்களை தன்னுள் கொண்டுள்ளது. இவை தவிர எண்ணற்ற ஆன்மீகத்தலங்களும் இங்கு காணப்படுகின்றன. குருத்வாரா அஸாம்கர் சாஹீப், கோதாவரி தாம் கோயில், கரடியா மஹாதேவ் கோயில் மற்றும் மதுரதீஷ் மந்திர் ஆகியன இங்குள்ள புகழ் வாய்ந்த ஆன்மீகத்தலங்களாகும். அஸாம்கர் சாஹீப் குருத்வாரா கோட்டா நகரத்தில் உள்ள மிக முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். இது சீக்கியர்களின் 10வது குருவான குருநானக் அவர்களின் பாதக்குறடுகள் மற்றும் வாளினை கொண்டிருப்பதால் விசேஷமாக கருதப்படுகிறது. மேலும் இந்த நகரம் புகழ் பெற்ற கவிஞரான அயோத்யா சிங் ஹரியவுத் பிறந்த இடமாகவும் சிறப்பு பெற்றுள்ளது.
wiki
பரத்பூர் நகரம்
ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு வாசலாக பிரபலமாக அறியப்படும் பரத்பூர் நகரம் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த தொன்னலம் வாய்ந்த நகரம் சுராஜ் மால் மகாராஜவால் 1733-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.
பரத்பூர் நகரம் ராமபிரானின் சகோதரரான பரதரின் பெயராலேயே பரத்பூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பரத்பூர் நகர மக்கள் ராமரின் மற்றொரு தம்பியான லக்ஷ்மணனையும் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
அதோடு 'லோஹாகர்' என்றும் அறியப்படும் பரத்பூர் நகரம் ஜெய்ப்பூர், உதைப்பூர், ஜெய்சல்மேர் மற்றும் ஜோத்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வழியாகவும் இருந்து வருகிறது. மேலும் ஹரியானா, உத்தர்பிரதேஷ், தோல்பூர், கராவ்லி, ஜெய்ப்பூர் மற்றும் அல்வார் நகரங்களுடன் பரத்பூர் நகரம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.
Anupom sarmah
நினைவுச் சின்னங்கள்
பரத்பூரில் உள்ள நினைவுச் சின்னங்கள் ஒவ்வொன்றும் ராஜ்புட், முகல் மற்றும் பிரிட்டிஷ் கட்டிடக்கலை பாணிகளில் உருவானவைகள். அதிலும் குறிப்பாக லோஹாகர் கோட்டையின் வடிவமைப்பு நேர்த்தி கட்டிடக் கலையின் உச்சம். அதோடு தீக் கோட்டை, பரத்பூர் அரண்மனை, கோபால் பவன், அரசு அருங்காட்சியகம் போன்ற இடங்களிலும் பயணிகளை அதிக அளவில் பார்க்கலாம்.மேலும் பாங்கேபிஹாரி கோயில், கங்கா கோயில், லக்ஷ்மன் கோயில் போன்ற ஆலயங்கள் பரத்பூரின் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களாகும்.
Anupom sarmah
பூந்தி
பூந்தி கலாச்சாரத்தில் இசை மற்றும் ஓவியம் ஆகிய இரண்டும் பிரதான அம்சங்களாக திகழ்வது குறிப்பிடத்தக்கது. ஆகவே அதிக அளவில் இசைப்பாடகர்களையும் இசைக்கலைஞர்களையும் இம்மாவட்டம் கொண்டுள்ளது. இங்குள்ள பூந்தி ஓவியக்கல்லூரியில் முகலாய மற்றும் ராகமாலா பாணி ஓவியப்பாரம்பரியத்தை ஆதாரமாக கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. இங்கு தாராகர் கோட்டை, பூந்தி அரண்மனை, ராணிஜி- கி - பாவ்ரி மற்றும் நவால் சாஹர் போன்ற பிரசித்தமான சுற்றுலா அம்சங்கள் அமைந்துள்ளன. இவை தவிர சுக் மஹால், சௌராஸி கம்போன் கி சாத்ரி, ஜெயித் சாஹர் ஏரி மற்றும் ஃப்பூல் சாஹர் போன்ற இதர சுற்றுலா அம்சங்களையும் இங்கு காணலாம்.
Rakshat Hooja
சரிஸ்கா
ஏராளமான கோட்டைகள், கோயில்கள் மற்றும் ஏரிகள் போன்றவற்றையும் சரிஸ்கா சுற்றுலாத்தலம் பெற்றுள்ளது. இங்குள்ள கனக்வாரி கோட்டை 17ம் நூற்றாண்டில் இரண்டாம் ஜெய்சிங் மன்னரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது தவிர பன்கர் கோட்டை, பிரதாப்கர் கோட்டை மற்றும் அஜப்கர் கோட்டை ஆகிய் முக்கியமான வரலாற்றுச்சின்னங்களும் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன பண்டுபோல் எனுமிடத்திலுள்ள ஹனுமான் கோயில், நீலகண்ட மஹாதேவ் கோயில் மற்றும் பர்த்ரிஹரி கோயில் ஆகியவை இங்குள்ள முக்கியமான கோயில்களாகும். இவை நாடெங்கிலிருந்தும் பக்தி யாத்ரீகர்களை கவர்ந்திழுக்கின்றன.
Corey Theiss