அரண்மனைகள் என்பன முற்காலத்தில் மன்னர்கள் வாழ்ந்துவந்த இடமாகும். அவற்றில் சில பெரிய செல்வந்தர்கள் இன்றளவும் வாழும் இடமாக இருக்கும். அரண்மனையில் இல்லாத வசதி என்பது எதுவுமே இருக்காது. எல்லாமே கிடைக்கும் நந்தவனத்தைப் போல நல்ல அருமையான இடம் தான் அரண்மனை. இந்தியாவைப் பொறுத்தவரையில் இங்கு இல்லாத மன்னர்கள் இல்லை. ஒவ்வொரு முறை படையெடுப்பின் போது மற்ற நாட்டின் மன்னர்கள் வாழும் பகுதியான அரண்மனைகளை அழித்துவிட்ட தங்கள் ரசனைக்கு ஏற்ப பல அரிய பெருமைகளை நீண்ட நாள்கள் நிலைத்து நிற்கச் செய்யும் அளவுக்கு சிறப்பாக கட்டுவார்கள் அரண்மனைகளை. மேலும் எதிரி நாட்டவரிடமிருந்து தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக, மிகுந்த பாதுகாப்பு அம்சங்களோடு சிறப்பாக கட்டப்படுவது அரண்மனையாகும். இப்படிப்பட்ட அரண்மனைகள் இந்தியாவெங்கும் நிறைய காணப்படுகின்றன. அவற்றில் கேரள மாநிலத்தில் இருக்கும் 8 அட்டகாசமான அரண்மனைகள் குறித்து இந்த பதிவில் காண்போமா...
பூஞ்ஜார் அரண்மனை
கோட்டயத்திலிருந்து பலா-ஈராட்டுப்பட்டா செல்லும் வழியில் பூஞ்ஜார் எனும் இடத்தில் இந்த பூஞ்ஜார் அரண்மனை அமைந்துள்ளது. பலவித ராஜவம்ச நினைவுப்பொருட்கள், அழகிய சிலைகள் மற்றும் பாறைகளில் வடிக்கப்பட்ட விளக்குகள் போன்றவற்றை இந்த அரண்மனையில் காணலாம். இங்கு அழகான இருக்கைகள் மற்றும் துரோனி எனப்படும் ‘சிகிச்சை படுக்கை' மற்றும் ஒரு பல்லக்கு போன்றவற்றையும் பார்க்கலாம். விசேஷமான துரோனி படுக்கை அமைப்பு ஒரே மரத்துண்டில் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவை தவிர கலையம்சம் பொருந்திய சரவிளக்குகள், ஆபரணப்பெட்டிகள், தானிய அளவை மரக்கால்கள் மற்றும் பனையோலை எழுத்துப்பிரட்திகள் போன்றவற்றையும் இந்த அரண்மனையில் பார்க்கலாம். கலையம்சத்துடன் வடிக்கப்பட்டிருக்கும் நடராஜர் சிலை மற்றும் சில பழமையான போர்க்கருவிகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
சடங்குகளின்போது பயன்படுத்தப்படும் ஒரு அபூர்வமான சங்கு அவசியம் பார்க்க வேண்டிய ஒரு அம்சமாகும். பூஞ்ஜார் அரண்மனைக்கு அருகிலேயே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சிறு நகல் வடிவம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் அதிசய காட்சியை காணலாம். இந்த கோயிலின் சுவர்களில் புராணக்கதைகளை சித்தரிக்கும் சிற்பவடிப்புகள் காட்சியளிக்கின்றன. பாறைகளில் வடிக்கப்பட்டிருக்கும் சுட்டுவிளக்கு எனப்படும் விளக்கு அமைப்பு இந்த கோயிலின் சிறப்பம்சமாகும்.
keralatourism.org
ஷக்தன் தம்புரான் அரண்மனை
ஒரு காலத்தில் ‘வடகேச்சிர கோவிலாகம்' என்று அழைக்கப்பட்ட இந்த ஷக்தன் தம்புரான் அரண்மனையானது திரிசூர் நகரத்தை உருவாக்கிய அப்பன் தம்புரான் வாழ்ந்த அரண்மனையாகும்.
கொச்சி ராஜவம்சத்துக்கு சொந்தமாக இருந்த இந்த அரண்மனையை 1795ம் ஆண்டில் ஷக்தன் தம்புரான் கேரள-டச்சு பாணியில் புதுப்பித்துள்ளார். 2005ம் ஆண்டில் இந்த அரண்மனையானது ஒரு அருங்காட்சியகம் போன்று மாற்றப்பட்டுள்ளது.
இங்கு தம்புரான் காலத்திய பல நினைவுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. திப்பு சுல்தான் போன்ற பிரபல வரலாற்று ஆளுமைகள் இந்த அரண்மனைக்கு விஜயம் செய்ததற்கான ஆதாரங்களும் இங்கு காணப்படுகின்றன.
இங்குள்ள காட்சிக்கூடத்தில் பல செப்புச்சிலைகள், பளிங்குச்சிலைகள், புராதன நாணயங்கள் மற்றும் கொச்சி ராஜவம்சத்தை சேர்ந்த சில அரிய ஆவணங்கள் போன்றவற்றைப்பார்க்கலாம்.
மேலும், அரண்மனைக்கு வெளியில் உள்ள ஒரு பாரம்பரிய தோட்டப்பூங்காவில் அரிதான கேரளவகை மூலிகைச்செடிகளையும், மரங்களையும் காணலாம்.
Sibyav
கிருஷ்ணாபுரம் அரண்மனை
கிருஷ்ணாபுரம் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளதால் ‘கிருஷ்ணாபுரம் அரண்மனை' என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை பல நூற்றாண்டுகளாக பல மாற்றங்களை தன்னுள்ளும், தன் சூழலிலும் கண்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் அன்றைய திருவாங்கூர் மஹாராஜாவான அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா இங்கிருந்த பழைய அரண்மனையை தரை மட்டமாக்கிவிட்டு ஒரே ஒரு தளத்தை மட்டுமே கொண்ட ஒரு எளிமையான அரண்மனை மாளிகையை உருவாக்கியுள்ளார். கேரள மண்ணின் பாரம்பரிய மரபுப்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிதைவடையத் தொடங்கியிருந்த இந்த மாளிகையை கேரள தொல்லியல் துறை தன் பொறுப்பில் கொண்டு வந்து 1950ம் ஆண்டில் செப்பனிட்டு இப்போதுள்ள தோற்றத்துக்கு கொண்டுவந்துள்ளது. தற்சமயம் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ள இந்த அரண்மனையின் வளாகத்தில் இதர கட்டிடங்களும் இடம் பெற்றுள்ளன. இவை மேற்கத்திய மற்றும் கிழக்குத்தேச கட்டிடக்கலை மரபுகள் கலந்து காட்சியளிக்கின்றன.
ஒரு மலையின் உச்சியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அரண்மனையை சுற்றி புல்வெளிகள், நீரூற்றுகள் மற்றும் குளங்கள் ஆகியவை காணப்படுகின்றன. கேரள ராஜ பரம்பரையினரின் ரசனை, கலாச்சாரம் போன்றவற்றை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சுவரோவியங்கள், நாணயங்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவற்றிலிருந்து தெரிந்துகொள்ளலாம்
Sreejithk2000
கனககுண்ணு அரண்மனை
அற்புதமான அலங்கார மரக்குடைவு வேலைப்பாடுகளுடன் மற்றும் கேரள மண்ணின் பாரம்பரிய தோற்றத்துடன் வீற்றிருக்கும் கனககுண்ணு அரண்மனையானது கலையம்சம் நிறைந்த ஒரு முக்கியமான மாளிகையாகும்.
அரசர்கள் ஆண்ட காலத்தில் மஹோன்னதமாக விளங்கிய கேரளத்தின் கலைப்பாரம்பரிய சித்தரிப்பாகவும் இது காட்சியளிக்கிறது. கனககுண்ணு அரண்மனையானது திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சியின்போது கட்டப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமான சடங்குகள், விருந்துகள் மற்றும் ராஜ வம்ச நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்காகவே பிரத்யேகமாக இந்த அரண்மனை உருவாக்கப்பட்டிருக்கிறது.
கோலாகல நிகழ்ச்சிக்கான மாளிகை என்பதால் அற்புதமான அலங்கார கலையம்சங்களுடன் இது கட்டப்பட்டிருக்கிறது. இன்றும் இந்த அரண்மனையின் பொலிவு சிறிதும் குன்றாமல் ஒளிர்வது பார்வையாளர்களை மலைக்க வைக்கும் காட்சியாகும். இந்த அரண்மனையை ஒட்டியே நேப்பியர் மியூசியம் எனும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. தற்சமயம் கனககுண்ணு அரண்மனை திருவனந்தபுரத்தின் முக்கியமான பாரம்பரிய நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும் பிரத்யேக மையமாக பயன்படுத்தப்படுகிறது.
Augustus Binu
அரக்கல் கெட்டு அரண்மனை
தற்போது ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள இந்த அரக்கல் கெட்டு எனும் அரண்மனை தன் வரலாற்று மற்றும் ராஜரீக அரும் பொருள் சேகரிப்புகள் மூலம் பயணிகளை ஈர்க்கிறது. கண்ணூர் நகரத்திலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த அரண்மனை மொப்பிளா வளைகுடாவுக்கு அருகிலேயே உள்ளது. ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இது கண்ணூர் மற்றும் லட்சத்தீவு பகுதிகளை ஆண்ட அரக்கல் அலி ராஜ வம்சத்தினர் வசித்த மாளிகையாக திகழ்ந்துள்ளது.
லாடரைட் கற்கள் மற்றும் வேலைப்பாட்டு கடைசல்கள் நிரம்பிய மர அமைப்புகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரண்மனையானது கேரளப்பிரதேச மற்றும் பழங்கால ஐரோப்பிய கலையம்சங்களை கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு விசாலமான உள்முற்றம், பல்வேறு உள்கட்டு மாளிகைகள், மசூதிகள், நீளமான கூடங்கள், சபை மண்டபங்கள், மரத்தரைகள் மற்றும் கண்ணாடி அலங்காரங்களை கொண்ட ஜன்னல்கள் ஆகியவை இந்த அரண்மனையின் சிறப்பம்சங்களாக காணப்படுகின்றன. இந்த அரண்மனையின் தர்பார் மண்டபமானது கேரள அரசாங்கத்தால் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஒட்டுமொத்த அரண்மனை வளாகமும் இன்னும் அரக்கல் ராஜவம்சத்தாரின் உரிமை மற்று நிர்வாகத்தின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அரண்மனையை சுற்றிப்பார்ப்பதற்கு ஒரு சிறிய கட்டணமும் அரக்கல் ராஜகுடும்ப அறக்கட்டளையால் வசூலிக்கப்படுகிறது. இங்குள்ள அருங்காட்சியகத்தில் ராஜ குடும்பத்தினர் பயன்படுத்திய பலவிதமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ராஜமுத்திரைகள், தானிய மரக்களஞ்சியங்கள், புனித குரான் நூற்பிரதி, ஒரு புராதன தொலைபேசி, வாள்கள், பித்தளை மற்றும் வெள்ளி பாத்திரங்கள், குறுவாட்கள், இருக்கைகள் மற்றும் ஒரு தொலைநோக்கி ஆகியவை குறிப்பிடத்தக்க பொருட்களாகும்.
Shijaz
பொல்கட்டி அரண்மனை
பொல்கட்டி அரண்மனை கொச்சிக்கு அருகிலுள்ள பொல்கட்டி தீவில் அமைந்துள்ளது. 1744ம் ஆண்டில் டச்சுக்காரர்களால் இது கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனை ஒரு பாரம்பரிய மாளிகை போன்று தோற்றமளிக்கிறது.
பசுமையான தோட்டங்களும் புல்வெளிகளும் பின்னாளில் இந்த மாளிகையை சுற்றிலும் உருவாக்கப்பட்டுள்ளன. துவக்கத்தில் இது மலபார் டச்சு கமாண்டரின் இருப்பிடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் 1909ம் ஆண்டில் டச்சு வணிகர்கள் இம்மாளிகையை ஆங்கிலேயருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர். அதிலிருந்து பல ஆங்கிலேய கவர்னர்கள் இந்த மாளிகையிலிருந்து அழகான தோட்டங்களையும் அரபிக்கடலின் அழகையும் ரசிக்கும் சொகுசு வாழ்க்கையை இந்த மாளிகையில் அனுபவித்துள்ளனர். இந்தியா சுதந்திரமடைந்தபிறகு இது அரசு உடமையாக்கப்பட்டது.
தற்சமயம் இந்த அரண்மனையில் ஒரு பாரம்பரிய சொகுசு ஹோட்டலும், ‘ரிசார்ட் தங்கும் விடுதி'யும் செயல்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த அரண்மனை பகுதிக்கு விஜயம் செய்து இயற்கை எழிலை ரசித்து மகிழ்கின்றனர். ஒரு ஆயுர்வேதிக் மசாஜ் மையம், கோல்ஃப் மைதானம் மற்றும் நீச்சல் குளம் ஆகியவை இங்கு அமைந்துள்ளன.
Renikk
நீலேஷ்வரம் அரண்மனை
நீலேஷ்வரம் மகாராஜாக்களின் அரசாட்சி செயல்பட்டு வந்த இடமான நீலேஷ்வரம், பேக்கல் நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. 'நீலகண்ட' மற்றும் 'ஈஸ்வர்' ஆகிய இரு வார்த்தைகள் சேர்ந்து நீலேஷ்வரம் என்று அறியப்படுகிறது. இந்தப் பகுதி கேரளாவின் முக்கிய கலாச்சார மையமாக திகழ்ந்து வருகிறது. நீலேஷ்வரம் நகரில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற அரண்மனை தொல்பொருள் துறையினரின் நாட்டுப்புறவியல் மையமாக கருதப்படுகிறது. இதுதவிர நீலேஷ்வரம் நகரம் கவுஸ் எனப்படும் பல்வேறு ஆலயங்களுக்க்காகவும் பிரபலம்.
இங்கு உள்ள யோகா மற்றும் கலாச்சார மையங்களில் மூலிகை குளியல், சேற்றுக் குளியல் போன்ற இயற்கை சிகிச்சைகளை மேற்கொள்வதில் பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலேஷ்வரம் நகரின் கிழக்கு எல்லையாக மேற்கு தொடர்ச்சி மலைகளும், மேற்கே லக்ஷ்வதீப்பும், வடக்கே காசர்கோடும், தெற்கு எல்லைகளாக வயநாடு மற்றும் கோழிக்கோடு நகரங்களும் அமைந்திருக்கின்றன. மேலும் நீலேஷ்வரம் நகரின் இயற்கை சூழலும், காயல் நீர்பரப்பின் வசீகரிக்கும் தோற்றமும் உங்களுக்கு மறக்க முடியாத சுற்றுப் பயண அனுபவமாக அமையும்.
Vijayanrajapuram
ஹால்சியோன் கேஸ்சில்
ஹால்சியோன் கேஸ்சில் எனும் இந்த மாளிகை திருவாங்கூர் மஹாராணி சேது லட்சுமி பாயி என்பவருக்காக அவரது கணவர் ஸ்ரீ ராம வர்மா வலியக்கோயில் தம்புரான் என்பவரால் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. 1932ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை அழகம்சங்கள் நிறைந்து கோட்டை போன்று கம்பீரமாக காட்சியளிக்கின்றது. ஒருகாலத்தில் சமஸ்தானமாக விளங்கிய திருவாங்கூர் மண்டலத்தில் இது அமைந்திருக்கிறது. ராஜ குடும்பத்தினருக்கான பிரத்யேக ஓய்வு மாளிகையாக பயன்படுத்துவதற்காக இது அக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும், 1964ம் ஆண்டில் திருவாங்கூர் ராஜ குடும்பத்தாரால் இந்த ஹால்சியோன் கேஸ்சில் மாளிகை கேரள அரசாங்கத்துக்கு விற்கப்பட்டுவிட்டது. தற்சமயம் இந்த மாளிகையானது இப்பகுதியிலுள்ள ஒரே பாரம்பரிய விடுதி எனும் புகழுடன் இயங்கி வருகிறது. கோவளம் அரண்மனை என்ற பெயரில் இந்த மாளிகை ‘கோவளம் இன்டர்நேஷனம் பீச் ரிசார்ட்' வளாகத்திலேயே இடம் பெற்றுள்ளது. இந்த பாரம்பரிய விடுதியை பிரபலமான ‘லீலா குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ்' நிறுவனம் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியாக நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.