கடற்கரை அழகை ரசிக்க, இனிமையாக பொழுதை கழிக்க புதுமண தம்பதிகள், நண்பர்கள் என பலரும் விரும்பும் இடம் கோவா தான். ஆனால் அதிகம் செலவு செய்து கோவா வரை அனைவராலும் செல்ல முடியாது. கோவாவிற்கு போகாமலேயே அதே கடற்கரையின் அற்புத அனுபவத்தை பெறுவதற்கு தென்னிந்தியாவிலேயே பல கடற்கரைகள் உள்ளன. அப்படி கடற்கரை பிரியர்களை மனதை கொள்ளை கொள்ளும் அழகிய கடற்கரைகள் பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம்.

லட்சத்தீவு
கேரளாவிற்கு அருகே அமைந்துள்ள லட்சத்தீவில் மொத்தம் 36 பவளப் பாறைகள், பனை மணல் நிறைந்த கடற்கரைகள் மற்றும் தீவுகள் உள்ளன. இது சுற்றுலா தலமாக மட்டுமின்றி நீர் விளையாட்டுக்கு பெயர் பெற்ற இடமாகவும் விளங்குகிறது. இந்தியாவின் தூய்மையான கடற்கரைகளில் ஒன்றாக இது விளங்குகிறது. தனிமையை விரும்பும் கடற்கரை பிரியர்களுக்கு ஏற்ற இடமாக இந்த கடற்கரை உள்ளது. அரபிக் கடலின் அழகு, சிலிர்ப்பை ஏற்படுத்தும் சாகச அனுபவங்களை பெற வேண்டும் என்பவர்களும், கடற்கரையில் விடுமுறையை அனுபவிக்க விரும்புபவர்களும் அவசியம் செல்ல வேண்டிய இடம் லட்சத்தீவு.
புதுச்சேரி
இந்தியாவில் பிரெஞ்சு கலாச்சாரம் அதிகம் நிறைந்த பகுதியாக இருக்கும் புதுச்சேரியில் அமைந்துள்ள கடற்கரைகள் அழகை ரசிக்க, இளைஞர்கள் பார்ட்டி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அனுபவிக்க ஏற்ற இடமாகவும் உள்ளது. சுன்னம்பார் கடற்கரை, இங்குள்ள படகு இல்லம், நீர் விளையாட்டு மையம் ஆகியன கடற்கரையின் அழகை பருக மட்டுமின்றி அமைதியாக ஓய்வெடுக்க, சாகச விளையாட்டுக்களை அனுபவிக்க என பலவிதமான அனுபவங்களை தருகிறது. பேக்வாட்டர் முகத்துவாரத்தில் உள்ள கடற்கரை, பாரடைஸ் பீச் ஆகியவை அமைதியும், அழகும் நிறைந்த இடங்களாகும். புதுச்சேரி சென்றால் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

கோகர்ணா
அழகிய கடற்கரைகளின் தாயகமாக விளங்கும் கோகர்ணா கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இது கோவா, மங்களூரு, ஹூப்ளி போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. கோகர்ணாவில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தலமாக இருப்பது ஓம் பீச் தான். இது ஓம் வடிவத்தில் இருப்பதால் இந்த பெயரால் அழைக்கப்படுகிறது. சன்செட்டின் அற்புத அழகை ரசிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இது ஏற்ற இடமாக இருக்கும். இங்கு நீர் விளையாட்டுக்களும் மிக பிரபலம். அதே போல் இந்த கடற்கரையை சுற்றி நிறைய மலைகளும் இருப்பதால் இங்கு வ்யூ பாயிண்டுகளும் அதிகம். அமைதியான பாறைகளில் இருந்து ஓம் பீச்சின் மொத்த அழகையும் கண்டு ரசிக்க முடியும்.
அலிபாக்
அலிச்சி பாக் என்று அழைக்கப்படும் அலிபாக், மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான கடற்கரையாகும். இங்கு வரிசையாக அமைந்துள்ள சவுக்கு மரங்கள், வியக்க வைக்கும் காட்சிகள், பிரமிப்பான அழகு ஆகியவை புதிய அனுபவத்தை தரும். இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளையும் அதிகம் ஈர்க்கும் சுற்றுலா தலமாக இது இருந்து வருகிறது. ஜெட் ஸ்கைஸ், மீன்படி பயணங்கள், பாரா மோட்டார் சவாரிகள் ஆகியவை இங்கு பிரபலமானதாக இருந்து வருகிறது. சன் செட்டின் அழகை ரசித்து விட்டு அரபிக் கடலின் கரையில் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க சிறந்த இடமாக இது உள்ளது. வீக் எண்டை கழிக்கவும் இது ஏற்ற இடமாக உள்ளது.
ஹேவ்லாக் தீவு
ஸ்வராஜ் தீவு என அழைக்கப்படும் ஹேவ்லாக் தீவு அந்தமானில் உள்ள ரிச்சியின் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியாகும். வெள்ளை மணல் கடற்கரைகள், கண்கவர் பவளப்பாறைகள் நிறைந்த இடம். ஸ்நோர்கெல்லிங், கயாக்கிங் போன்ற நீர் விளையாட்டுக்களுக்கு ஏற்ற இடம் ஆகும். இங்கு கலாபதர் கடற்கரை மிக பிரபலமானதாகும். கடலுக்கு அடியில் சென்று அரிய வகை மீன்களை அருகில் கண்டு ரசித்து, வித்தியாசமான முறையில் நேரத்தை செலவிட ஏற்ற இடம்.
வர்கலா
கேரளாவின் ஆஸ்க்கான கடற்கரைகளில் ஒன்றான வர்கலா, ஒரு புறம் மலையையும், மறுபுறம் மலையையும் கொண்டிருக்கும். அதிகம் அறியப்படாத ஆனால் சொர்க்கம் போன்ற இடமாகும்.திருவனந்தபுரத்தில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. தங்க மணல், பூத்துக் குலுங்கும் பசுமையான தோட்டங்களால் சூழப்பட்ட கடற்கரையாகும். சன் பாத், படகு சவாரி, நீச்சல், சாகச விளையாட்டுகள், ஆயுர்வேத சிகிச்சை ஆகிய பல அம்சங்களை இந்த கடற்கரை கொண்டுள்ளது. இது சுற்றுலா தலமாக மட்டுமின்றி ஆன்மிக தலமாக உள்ளது. இதை பாபநாசம் கடற்கரை என்றும் அழைக்கிறார்கள்.
கோவளம்
தெற்கின் சொர்க்கம் என அன்புடன் அழைக்கப்படும் கோவளம் கடற்கரை, அரபிக் கடலின் அழகிய கடற்கரையோரங்களில் அமைந்த ஒரு அழகான கடற்கரை ஆகும். கடற்கரையில் இருக்கும் பெரிய பாறை கடல்முனை கடற்குளியலுக்கு ஏற்ற அமைதியான இடமாக உள்ளது. சன் பாத், நீச்சல், மூலிகை மசாஜ், சிறப்பு கலாச்சார நிகழ்ச்சிகள், கட்டுமர பயணம் போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு உள்ளன. பிற்பகல் துவங்கி, இரவு வரை இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். திருவனந்தபுரத்தில் இருந்து 16 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. கான்டினென்டல் முதல் தென்னிந்திய உணவு வகைகள் வரை இங்குள்ள உணவகங்களில் கிடைக்கும்.
பூரி
ஆன்மீகத்தோடு அழகிய கடற்கரைகளையும் காண செல்ல வேண்டிய நகரம் பூரி. மெல்லிய தென்றல், மென்மையான அலைகள், சூரியனின் அழகு என தனித்துவமான அழகை ரசிக்க ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரைக்கு செல்லலாம். கோல்டன் பீச் என்றே இந்த கடற்கரை அழைக்கப்படுகிறது. இது ஆன்மிக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் உள்ளது. சுத்தமான, ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கக் கூடியதாகும். கடைகள், உணவகங்கள் என பலவும் கடற்கரையை சுற்றியே அமைந்துள்ளதால் இங்கிருந்து மற்ற இடங்களுக்கு செல்வதும் எளிது. உள்ளூர்வாசிகளின் மிகப் பெரிய பொழுது போக்கு இடமாகவும் இந்த கோல்டன் பீச் உள்ளது.
டாமன் மற்றும் டையூ
இந்தியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரையாகும். கோடை, குளிர் என எந்த காலம் ஆனாலும் கொண்டாட்டத்திற்கு ஏற்ற சூழலை தரும் இடமாக திகழ்கிறது இந்த கடற்கரை. இந்தியா மட்டுமின்றி உலக சுற்றுலா பயணிகளையும் அதிகம் ஈர்க்கும் இடமாக உள்ளது. பழமையான கடற்கரைகள், அழகிய கிராமங்கள், நினைவுச் சின்னங்கள் இங்கு அதிகம். கொண்டாட்டம், பார்ட்டி கொண்டாட வேண்டும் என்பவர்கள் இங்கு அதிகம் வருவதுண்டு. தேவ்கா கடற்கரை இங்கு மிகவும் பிரபலமானதாகும்.



Click it and Unblock the Notifications






