மஹாராஷ்டிரா மாநிலத்தில் அஹமத்நகர் மாவட்டத்தில் அஹமத்நகர் எனும் இந்த நகரம் அமைந்துள்ளது. சினா ஆற்றின் மேற்குக்கரையில் அமைந்துள்ள அஹ்மத்நகர் மாவட்டம் மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே பெரிய மாவட்டமாகும். அஹமத்நகர் நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மையத்தில் அமைந்துள்ளதால் மும்பை மற்றும் புனே போன்ற பெருநகரங்களிலிருந்து சமதூரத்தில் உள்ளது. இதற்கு வடதிசையில் ஔரங்காபாத் மற்றும் நாசிக் நகரங்கள் அமைந்துள்ளன. தென்திசையில் புனே நகரம் மற்றும் சோலாபூர் மாவட்டம் அமைந்துள்ளன. இதுதவிர கிழக்கில் பீட் நகரம் மற்றும் ஓஸ்மானாபாத் மாவட்டவும் மேற்கில் தானே பகுதியும் அஹமத்நகரை சுற்றி அமைந்துள்ளன. அஹமத் நகர் மிகவும் அழகிய, வரலாற்று சிறப்புமிக்க பல சுற்றுலாத் தளங்களைக் கொண்டது. வாருங்கள் சென்று வருவோம்.
அஹமத்நகர் கோட்டை
அஹமத் நகரின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்று இங்குள்ள அஹமத்நகர் கோட்டையாகும். தௌலாபாத் கோட்டையை அஹ்மத் நிஜாம் ஷா வெற்றிகரமாக கைப்பற்றியதை அடையாளப்படுத்தும் விதத்தில் இந்த கோட்டை உள்ளது. சுதந்திர போராட்ட வீரர்கள் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்த பெருமையையும் இந்தக் கோட்டை கொண்டுள்ளது.
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது இங்கு ஜஹவர்லால் போன்ற முக்கிய தலைவர்கள் இந்த கோட்டைக்குள் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
மற்ற இடங்கள்
சலாபத் கான் சமாதி, ரௌஸா பாக் மற்றும் கோட் பாஹா நிஜாம் போன்ற இடங்களும் அஹமத்நகரில் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
ஆன்மீக தலம்
அஹமத்நகர் ஒரு ஆன்மீக சுற்றுலா தலமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது. மொஹதா தேவி கோயில் , சித்தேஸ்வரர் கோயில், விஷால் கணபதி கோயில் மற்றும் யோகி தியானேஷ்வர் கோயில் போன்றவை இங்குள்ள ஆன்மீக திருத்தலங்களாகும்.
ஷீரடி
அருகிலுள்ள ஷானி ஷிங்கானாபூர் கிராமமும் ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாகும். இக்கிராமத்திற்கு அருகில் ஆன்மீக குரு சாய்பாபா வசித்த இடமான ஷிர்டி சில கிலோ மீட்டர்கள் தூரத்தில் அமைந்துள்ளது.
கட்டிடக்கலையில் ஆர்வம் உள்ள பயணிகளுக்கு பிடிக்கும் விதத்தில் இங்கு வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் ஆய்வு மையம் உள்ளது.
அருங்காட்சியகம்
இவை தவிர ஒரு டாங்க் அருங்காட்சியகமும் முக்கியமான சுற்றுலா அம்சமாக இங்கு அமைந்துள்ளது. இங்கு உலக வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றுள்ள முக்கிய போர்களில் பயன்படுத்தப்பட்ட பலவகை டாங்க்'குகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
குடும்பத்துடன் செல்ல
இயற்கை ரசிகர்களுக்கு ஏற்ற இடங்களாக முல்லா அணை மற்றும் பந்தர்தாரா அணை போன்றவையும் இங்கு உள்ளன. எழில் நிறைந்து காணப்படும் இந்த சிற்றுலா ஸ்தலங்கள் நமக்கு உவகை தரும் பொழுதுபோக்கு ஸ்தலமாக விளங்குகின்றன.
குடும்பத்தோடு அல்லது தனிமையில் அமைதியாக இயற்கையை ரசிக்க உகந்த இடமாக இந்த இரண்டு அணைப்பகுதிகளும் உள்ளன.
ஆனந்த் தாம்
1992ம் ஆண்டு மறைந்த ஷீ ஆனந்த் ரிஷிஜி மஹாராஜ் அவர்கள் ஞாபகார்த்தமாக இந்த ஆனந்த் தாம் கட்டப்பட்டுள்ளது. ஷிரல் சிச்சொண்டி எனும் இடத்தில் பிறந்த இந்த யோகி தனது 13ம் வயதில் ஷீ ரத்தன் ரிஷிஜி மஹாராஜ் மூலம் ஆன்மீக தத்துவங்களும் போதனைகளும் கிடைக்கப்பெற்றார்.
சமுதாய மேம்பாட்டுக்காக ஷீ ஆனந்த் ரிஷிஜி மஹாராஜ் அவர்கள் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆன்மீக மையங்களை அஹமத்நகரில் நிறுவியுள்ளார். அன்பு, சகிப்புத்தன்மை, நேர்மை போன்ற கருத்துக்களை பரப்பிய இவர் பிணியில் வாடியோர்க்கும் வறியோர்க்கும் உதவிகளை அளித்து வாழ்ந்துள்ளார்.
கோட் பாக் நிஜாம்
அஹமத்நகரிலுள்ள முக்கியமாக சுற்றுலா ஸ்தலங்களில் இந்த கோட் பாக் நிஜாம் என்றழைக்கப்படும் பூங்காத்தோட்டமும் ஒன்று. வெற்றித்தோட்டம் என்றழைக்கப்படும் இந்த பூங்காத்தோட்டம் 1499ம் ஆண்டு மாலிக் அஹமத் என்ற பெயரின் மூலமாகவும் அறியப்படும் அஹமத் நிஜாம் ஷாவினால் கட்டப்பட்டுள்ளது. பாமனி அரசர்களை வெற்றிகொண்டதன் ஞாபகார்த்தமாக அவர் இந்த பூங்காத்தோட்டத்தை நிர்மாணித்துள்ளார்.
கல்சுபாய் ஹரிஷ்சந்திரகாட் காட்டுயிர் சரணாலயம்
கல்சுபாய் ஹரிஷ்சந்திரகாட் காட்டுயிர் சரணாலயம் சஹயாத்திரி மலைகள் சூழ அமைந்துள்ளது. அஹமதுநகர் மாவட்டத்தில் அகோலே தாலுக்காவில் இந்த காட்டுயிர் சரணாலயம் உள்ளது. பலவகையான தாவரங்கள் மரங்கள் மற்றும் காட்டு உயிரினங்கள் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன. சண்டாவா, பெஹேடா, ஆவலி, குல்ச்சாவி, கார்வெல், சிரஸ், ஆஷிந்த், பர்ஜாம்புவல், ஹிர்டா போன்ற மரங்கள் இந்த காட்டில் உள்ளன.
முல்லா அணை
தியானேஷ்வர் என்று பிரசித்தமாக அறியப்படும் இந்த அணை முல்லா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அஹமது மாவட்டத்துக்கு அருகில் ராஹுரி தாலுக்காவில் இது உள்ளது. அஹமதுநகர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கும் இந்த அணை 26 டி.எம்.சி நீரை தேக்கி வைக்கும் கொள்ளளவைக் கொண்டுள்ளது. பத்தார்டி, நேவாசா, ஷேவ்காவ்ன் மற்றும் ராகுரி தாலுக்காக்களுக்கு விவசாயப்பாசனத்துக்கு இது உதவுகிறது.