மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் நிறைந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்று தான் தெமங்லாங் மலைப் பிரதேசம். மலை முகடுகளும், பள்ளத்தாக்குகளும் சூழ்ந்த அழகிய பகுதியானது அசாமின் எல்லைப் பகுதிகளும் சூழ வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, ஒரே நதியில் கொட்டும் ஏழு அருவிகளுக்காக இப்பகுதி நாடறிந்த சுறுலாத் தலமாக திகழ்கிறது. சரி வாருங்கள், தெமங்லாங் பகுதியில் என்னவெல்லாம் உள்ளது என பார்க்கலாம்.
தெமங்லாங்
மணிப்பூர் என்றாலே இயற்கை அம்சங்கள் நிறைந்த மாநிலம் என்பதை ஓரளவிற்கு நம்மாள் ஊகிக்க முடியும். அதற்கு சிறந்த சான்று தான் தெமங்லாங் பிரதேசம். இங்கே உள்ள பாரக் நதி, ஏழு நீர்வீழ்ச்சிகள், குகைகள், ஏரி, புல்வெளி மட்டுமே நிறைந்த மலைவாசத்தலம் என சுற்றிலும் கண்டு ரசிப்பதற்கு ஏற்ற தலங்களைக் கொண்டுள்ளது இப்பகுதி.
உயிரினங்களின் புகழிடம்
நாடு முழுவதும் காணக்கிடைக்காத சில அரிய விலங்கினங்களைக் கூட தெமங்லாங் பகுதிகள் காண முடியும் என்பது தனிச்சிறப்பு. செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் வெளிநாட்டில் இருந்த இடம் பெயரும் பறவைகளுக்கு புகுவிடமாகவும் இப்பகுதி உள்ளது. இப்பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் அரிய விலங்கினமான ஹாக் இன மான்கள், வித்யாசத் தோற்றம் கொண்ட காட்டு நாய்கள், கழுதைப்புலிகள் உள்ளிட்டவற்றை காணும் வாய்ப்புகள் கட்டாயம் கிடைக்கும்.
புனிங் புல் பிரதேசம்
புனிங் புல்வெளி நிறைந்த பள்ளத்தாக்கு தெமங்லாங் மாவட்டத்தின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. மேடு பள்ளமான சிறு சிறு குன்றுகள் தொடர்ச்சியாக இருக்கும் காட்சியைக் காண கண்கள் இரண்டு போதாது. இதில் சிறப்பு என்னவென்றால் சீசன் காலங்களில் புற்களின் இடையே பூத்துக் குலுங்கும் ஆர்கிட் மலர்களை கண்டு ரசிப்பதற்கும், புகைப்படங்கள் எடுத்துச் செல்வதற்கும் என்பதற்காகவே லட்சக் கணக்கான பயணிகள் இங்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஏழு நீர்வீழ்ச்சிகள்
தெமங்லாங்கில் சுற்றுலாப் பயணிகளால் அதிகளவில் பயணிக்கக் கூடிய தலம் பாரக் நதியும், அதன் அருகேயே உள்ள ஏழு நீர்வீழ்ச்சிகளும் தான். அடுத்தடுத்து கொட்டித் தீர்க்கும் இந்த ஏழு நீர்வீழ்ச்சிகளும் இத்தலத்தை அழகுடன் காட்சியளிக்கிறது. தெமங்லாங் பயணிக்கும் யாரும் தவறவிடக் கூடாத பகுதி இந்த நீர்வீழ்ச்சி தான்.
தரோன் குகை
தெமங்லாங்கின் வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று தரோன் குகைகள். தரோன் குகைகளுக்கு மொத்தம் 30க்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளதான ஆய்வாலர்கள் கூறுகின்றனர். இங்கு நடத்தப்பட்ட அகழ்வாய்வில் வடக்கு வியட்நாமைச் சேர்ந்த ஹோபினியன் கலாச்சாரம் பல நாட்களுக்கு இங்கே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருப்பது வியப்பளிக்கக் கூடியதாகும்.