இயற்கையின் தூரிகை வங்கக்கடலில் தீட்டிய ஓவியமாய் 8000 சதுர கி.மீ பரப்பளவில், 500-க்கும் மேற்பட்ட தீவுக் கூட்டங்களை கொண்ட அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் சொர்க்கமாகவே திகழ்ந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள 7 யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர் ஆகும்.
இப்பகுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக மொத்தம் 572 தீவுகள் உள்ளபோதும், அவற்றில் 36 தீவுகளைல்தான் மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்தத் தீவுகளில் அரிய வகை கடல் உயிரினங்கள், தென்னை மரம் சூழ்ந்த கடற்கரைகள், பவளப் பாறைகள், பசுமைக் காடுகள், அருவிகள் என இயற்கை அழகு அளவில்லாமல் கொட்டிக்கிடப்பதால் உலகம் முழுவதுமிருந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

குரங்குமுகம் கொண்ட மக்கள் வசித்த தீவு?!
அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பெயர் வந்தது குறித்து பல கதைகள் சொல்லப்படுகின்றன. அதாவது முன்பொருமுறை கடல் வழி பயணித்த தமிழக வணிகர்கள் 'அந்தோ மான் நிக்குது பார்' என்று கூறிய வார்த்தைகளிலிருந்து அந்தமான் நிக்கோபார் பெயர் வந்ததாக ஒரு கதை சொல்லப்படுகிறது. அதேபோல தங்கள் தொழிலுக்கு ஆள் பிடிக்க வந்த சீன மற்றும் மலேய வணிகர்களும், சில கடற்கொள்ளையர்களும் இந்தத் தீவின் மக்களை பார்த்து 'குரங்கு முகம் கொண்ட மக்களைக்கொண்ட தீவு' என்ற அர்த்தத்தில் 'ஹண்டுமான்' (அனுமான்) என இத்தீவுகளுக்கு பெயரிட்டதாக ஒரு கதை சொல்கிறது.
படம் : Shimjithsr

அம்மணத் தீவு
அந்தமான் நிக்கோபார் தீவுகள் தஞ்சைக்கல்வெட்டுகளிலும், மலேய நாட்டு கல்வெட்டுகளிலும் 'நக்காவரம்' என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது நக்காவரம் என்பது நக்கம் எனும் சொல்லிலிருந்து பிறந்ததாகவும், நக்கம் என்றால் 'அம்மணம்' என்றும் பொருள். இங்கு முன்பு வாழ்ந்து வந்த பழங்குடி மக்கள் அம்மணமாக (நிர்வாணமாக) வந்து வந்ததால் இந்தத் தீவுக்கூட்டம் நக்காவரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறது.
படம் : Shimjithsr

சோழர்களின் தீவு
கி.பி.11-ஆம் நூற்றாண்டில் இத்தீவுகள் முழுவதுமே சோழப்பேரரசின் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டன என்றும், பெரிய நிக்கோபார்த்தீவருகில் புலிக்கொடி பொறித்த கல்வெட்டு இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதோடு கார் நிக்கோபார், பெரிய நிக்கோபார் (கிரேட் நிக்கோபார்) ஆகிய தீவுகளை சோழர்கள்,'கார்த்தீபம், நாகதீபம்' என்று அழைத்திருக்கின்றனர். மேலும் சோழர்களின் வணிகக்கப்பல்களும், போர்க்கப்பல்களும் அந்தமான் நிக்கோபார்த்தீவுகளுக்கு அடிக்கடி வந்து சென்றிருக்கின்றன.
படம் : Venkatesh K

புகழ்பெற்ற ஷூட்டிங் ஸ்பாட்!!!
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 1977-ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த அந்தமான் காதலி முதல், 2009-ல் நமீதா நடித்த ஜெகன் மோகினி வரை நிறையத் தமிழ்த் திரைப்படங்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மோகன்லால் மற்றும் பிரபு நடித்த சிறைச்சாலை மிகவும் பிரபலம்.
படம் : Shimjithsr

அந்தமானின் பவழப்பாறைகள்
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பவழப்பாறைகளை ரசிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் போவதுகூட தெரியாது. அதிலும் குறிப்பாக ஜாலி பாய் தீவில் சிறிய படகுகளில் பயணம் செய்து இந்தப் பவழப்பாறைகள் கண்டு ரசிக்க முடியும். இந்த சிறு படகுகளின் அடிப்பாகம் ஃபைபர் கண்ணாடியால் ஆனவை என்பதால் நீருக்கு அடியில் காணப்படும் பவளப்பாறை வளர்ச்சிகளை பயணிகள் தெளிவாக பார்க்கலாம்.
படம் : Ritiks

சுற்றுலாத் தலங்கள்
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முக்கிய மற்றும் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக ஹேவ்லாக் தீவு , கிரேட் நிக்கோபார், தில்லன்சாங், போர்ட் பிளேர், ஜாலி பாய், ராஸ் தீவு, வைப்பர் தீவு, பேரன் தீவு ஆகியவை அறியப்படுகின்றன.
படம் : Jpatokal

ஹேவ்லாக் தீவு
அடர்ந்த மழைக்காடுகள் போர்த்திய மலைகள், கடலோரம் வரை நீரைத் தொட்டுக்கொண்டு நிற்கும் நெடிதுயர்ந்த மரங்கள் என ஆழமற்ற மரகதப்பச்சை நிற கடலால் சூழப்பட்டது ஹேவ்லாக் தீவு. இந்த தீவில் கோவிந்தா நகர், ராதா நகர், பிஜோய் நகர், ஷ்யாம் நகர் மற்றும் கிருஷ்ணா நகர் என ஐந்து அழகிய கடற்கரைப்பகுதிகள் அமைந்துள்ளன. இவற்றில் ராதா நகர் கடற்கரையை ‘ஆசியாவிலேயே மிகச்சிறந்த அழகான கடற்கரை' என்று பிரபலமான ‘டைம்' பத்திரிகை 2004-ஆம் ஆண்டில் தேர்வு செய்தது. மேலும் போர்ட் பிளேர் நகரத்திலிருந்து வடகிழக்கே 55 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த ஹேவ்லாக் தீவுக்கு ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை ‘ஃபெர்ரி' சொகுசு படகுகள் இயக்கப்படுகின்றன.
படம் : Shimjithsr

கிரேட் நிக்கோபார்
கிரேட் நிக்கோபார் என்று அழைக்கப்படும் இந்த பெருந்தீவு நிகோபார் தீவுக்கூட்டங்களில் உள்ள மிகப்பெரிய தீவாகும். போர்ட் பிளேர் நகரத்திலிருந்து ஹெலிபாக்டர் சேவைகள் மற்றும் சொகுசுப்படகு (ஃபெர்ரி) மூலமாக பயணிகள் இந்த கிரேட் நிக்கோபார் தீவிற்கு வரலாம். அப்படி படகு மூலம் செல்லும்போது வழியில் லிட்டில் நிக்கோபார், நான்கௌரி மற்றும் கார் நிக்கோபார் என்று அழைக்கப்படும் வடக்கு நிகோபார் தீவுக்கூட்டங்கள் ஆகியவற்றை ரசித்தபடியே பயணிக்கலாம். இந்தத் தீவுப்பகுதியில் காணப்படும் நிக்கோபார் ஸ்க்ரப் பவுல் மற்றும் மெகாபாட் என்ற இரண்டு அரிய காட்டு கோழியினங்களை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
படம் : Scheherezade Duniyadar

போர்ட் பிளேர்
அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகரமான போர்ட் பிளேர் நகரம் தெற்கு அந்தமான் பகுதியில் அமைந்துள்ளது. இந்த போர்ட் பிளேர் நகரத்துக்கு வெகு அருகில் ராஸ் தீவு, வைப்பர் தீவு, உள்ளிட்ட சுற்றுலாத் தளங்கள் இருப்பதோடு, போர்ட் பிளேரிலும் எண்ணற்ற போழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. மேலும் சென்னை, கொல்கத்தா மற்றும் புவனேஸ்வர் நகரங்களிலிருந்து போர்ட் பிளேர் வீர சாவர்க்கர் விமான நிலையத்துக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர இந்திய கப்பல் துறை நிறுவனம் பலவிதமான சொகுசு பயணக்கப்பல்களையும் போர்ட் பிளேர் நகருக்கு இயக்கி வருகிறது.

ராஸ் தீவு
போர்ட் பிளேர் நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் கிழக்கே அமைந்துள்ள ராஸ் தீவில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சில கட்டிட அமைப்புகளின் சிதிலங்கள் காணப்படுகின்றன. இங்கு 1857-ஆம் ஆண்டில் முதல் சுதந்திர போராட்டம் வெடித்த பின்னர் ஆங்கிலேயெ அரசாங்கம் இந்த தீவுப்பகுதியை அதிதீவிர சிறை வளாகமாக மாற்றி இங்கு முக்கியமான அரசியல் கைதிகளை அடைத்துவைக்க திட்டமிட்டது. இதற்கான கட்டமைப்பு ஏற்பாடுகள் ஏறக்குறை 80 வருடங்களுக்கு மேற்கொள்ளப்பட்டன. இப்படி ஏற்படுத்தப்பட்ட கட்டுமானங்கள் யாவும் இன்று சிதிலங்களாக காட்சியளிப்பதுதான் இந்த ராஸ் தீவின் பிரதான சுற்றுலா அம்சமாக அறியப்படுகிறது.
படம் : Shimjithsr

வைப்பர் தீவு
1906-ஆம் ஆண்டில் அந்தமான் செல்லுலர் ஜெயில் கட்டப்படுவதற்கு முன்பு வைப்பர் தீவு ஒரு முக்கிய சிறைச்சாலைப்பகுதியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. போர்ட் பிளேர் நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் வடமேற்கே அமைந்துள்ள இந்த தீவுக்கு ஃபெர்ரி மூலமாக சென்றடையலாம். இந்தத் தீவில் ‘வைப்பர்' எனப்படும் கொடிய விஷம் கொண்ட ‘கண்ணாடி விரியன் பாம்புகள்' நிறைந்திருந்ததால் வைப்பர் தீவு என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
படம் : Biswarup Ganguly

ஜாலி பாய்
‘மஹாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க்' அல்லது ‘வாண்டூர் நேஷனல் பார்க்' எனப்படும் கடல்சார் தேசியப்பூங்காவின் ஒரு அங்கமாக வீற்றுள்ளது ஜாலி பாய் தீவுப்பகுதியில் சில அரிய வகை பவளப்பாறை வளர்ச்சிகளை பயணிகள் கண்டு களிக்கலாம். இந்த ஜாலி பாய் தீவை நோக்கி பயணிக்கும் அனுபவமே உங்களை மெய்மறக்க வைத்துவிடும். அதாவது போர்ட் பிளேருக்கு மிக அருகிலேயே உள்ள ஜாலி பாய் தீவுக்கு பல அழகிய தீவுகளின் வழியாக, நீலப்பச்சை நீர்ப்பரப்பின் ஊடே நீளும் ஃபெர்ரி பயணத்தில் கூடவே வரும் வழிகாட்டிகள் ஆங்காங்கு காணப்படும் எழில் அம்சங்கள், தாவரங்கள் மற்றும் கடல் உயிரினங்களை சுட்டிக்காட்டி விளக்குகின்றனர்.
படம் : MGA73bot2

நீல் தீவு
போர்ட் பிளேர் பகுதியிலிருந்து 40 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள அழகிய தீவான நீல் தீவு 19 சதுர கி.மீ நீளம் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்தத் தீவு ஹேவ்லாக் தீவைப்போல் பரபரப்பின்றி காணப்படுவதால், அமைதி விரும்பிகள் கட்டாயம் இங்கு வரலாம். இத்தீவை போர்ட் பிளேரிலிருந்து அடைவதற்கு நாள் ஒன்றுக்கு 2 படகுகள் இயக்கப்படுவதோடு, 2 மணிநேரத்தில் நீல் தேவை இந்தப் படகுப் போக்குவரத்தில் அடைந்துவிட முடியும். இங்கு சீதாநகர், ராம்நகர், லக்ஷ்மண்பூர் என 3 கவின் கொஞ்சும் கடற்கரைகள் அமையப்பெற்றுள்ளன.
படம் : Dastra

அந்தமான் சிறைச்சாலை
காலா பாணி என்று பிரபலமாக அறியப்படும் அந்தமான் சிறைச்சாலை 1906 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதாகும். இந்தச் சிறை 7 பக்கப்பகுதிகாளாக ஒவ்வொன்றும் 3 அடுக்குகள் கொண்டாதாக படுக்கைகளற்ற 698 சிறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனால் 1942-ஆம் ஆண்டு இந்த சிறையை கைப்பற்றிய ஜப்பானியர் 7 சிறைப் பக்கப் பிரிவுகளுள் 2-ஐ இடித்து தகர்த்தனர். அதுமட்டுமல்லாமல் இந்திய விடுதலைக்குப்பின்னர் மீதமுள்ள சிறைப்பகுதிகளின் 2 மீண்டும் இடிக்கப்பட்டன. எனினும் பழைய விடுதலைப் போராட்ட வீரர்களின் நிர்பந்தத்தால் மேலும் இடிக்கப்படாமல் அவர்களின் நினைவாக, நினைவுச்சின்னமாக விட்டுவைக்கப்பட்டது.
படம் : Biswarup Ganguly



Click it and Unblock the Notifications



