கொட்டும் நீர்வீழ்ச்சிகளின் அழகை, பிரம்மாண்டத்தை கண்டு ரசிக்க யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான விஷயம் நீர்வீழ்ச்சி. ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சிகளை பார்த்து, ரசித்து, வாய்ப்பு இருந்தால் சூப்பர் குளியலை போட்டு, போட்டோக்களாக சுட்டு தள்ளாமல் இருந்தால் சுற்றுலா சென்று மனநிறைவு எப்படி கிடைக்கும்? அதுவும் இயற்கை அழகுக்கு பெயர் பெற்ற கேரளாவிற்கு சென்று விட்டு நீர்வீழ்ச்சிகளை பார்க்காமல் வந்தால் எப்படி? வாங்க...கேரளாவின் அழகான நீர்வீழ்ச்சிகளுக்கு ஒரு ரவுண்ட் போகலாம்.

அதிரப்பள்ளி
இந்தியாவின் நயாகரா என வர்ணிக்கப்படும் நீர்வீழ்ச்சி அதிரப்பள்ளி. கேரளாவின் திருச்சூரில் உள்ளது. சாலக்குடி ஆற்றில் வழச்சல் மற்றும் சோலையாறு காட்டுப் பகுதிக்கு அருகில் உள்ளது. 24 மீட்டர் நீளமுடைய இந்த நீர் வீழ்ச்சியை காண இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தமிழ் சினிமாக்கள் பலவற்றில் இந்த அருவியை கண்டு ரசித்திருப்பீர்கள். புன்னகை மன்னன் படத்தில் கமல், ராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய் மலையில் இருந்து குதிப்பார்களே, அது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியே தான்.
வாழச்சல் நீர்வீழ்ச்சி
கேரளாவின் பிரபலமான நீர்வீழ்ச்சிகளில் வாழச்சல் நீர்வீழ்ச்சியும் ஒன்று. இது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. சாலக்குடி ஆற்றிற்கு அருகில் அமைந்துள்ளது. திருச்சூரில் இருந்து 63 கி.மீ., தொலைவில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையே நம்முடைய உற்சாகத்தை அதிகப்படுத்தி விடும். அடர்ந்த வனப்பகுதியில், 80 அடி உயரத்தில் இருந்து கொட்டும் இந்த நீர்வீழ்ச்சி கேரளாவின் உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்று.
மீன்முட்டி நீர்வீழ்ச்சி
அடர்ந்த வனப் பகுதிகளுக்கு பெயர் பெற்ற வயநாட்டில் உள்ளது மீன்முட்டி நீர்வீழ்ச்சி. கேரளாவில் உள்ள மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. 1000 அடி உயரம் கொண்ட மூன்று அடுக்கு நீர்வீழ்ச்சியாகும். சுற்றிலும் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே அமைந்துள்ளது இந்த அற்புத நீர்வீழ்ச்சி. அழகான இந்த நீர்வீழ்ச்சி, மலைக்காலங்களில் ஆபத்தானதாகவும் மாறி விடுகிறது.இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரக் கூடியது இந்த நீர்வீழ்ச்சி.
சூச்சிபாரா நீர்வீழ்ச்சி
வயநாட்டில் வெல்லாரிமலையில் இருக்கும் மற்றொரு அழகான, புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி சூச்சிபாரா நீர்வீழ்ச்சி. தேயிலை தோட்டங்களுக்கு இடையில் மூன்று அடுக்குகளாக அமைந்திருக்கும் நீர்வீழ்ச்சி இதுவாகும். இதை செண்டினல் பாறை நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கிறார்கள். நுழைவு வாயிலில் இருந்து இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும். இந்த அருவியில் குளிக்க பயணச்சீட்டு வாங்க வேண்டும். மலையேற்றத்திற்கு இது ஏற்ற இடம் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள்.
பாலருவி
கேரள மாநிலம் கொல்லத்தில் இருக்கும் மிக அற்புதமான ஒரு அருவி. இந்த அருவியை பார்க்கும் போது பால் கொட்டுவது போல் இருப்பதால் இதனை பாலருவி என அழைக்கிறார்கள். இது கொல்லத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலமாக திகழ்கிறது. 32 அடி உயரம் கொண்ட இந்த அருவி ஆரியங்காவிற்கு அருகில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை காண காட்டுக்குள் பயணம் மேற்கொள்ள வேண்டும். சமீப ஆண்டுகளாக அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வர துவங்கி உள்ளனர்.
துஷாரகிரி நீர்வீழ்ச்சி
கேரளாவின் மிக அழகிய ஊர்களில் ஒன்றான கோழிக்கோட்டில் பனி படர்ந்த மலையில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. டிரெக்கிங் பிரியங்களுக்கு மிகவும் விருப்பமான இடம் இதுவாகும். எரட்டிமுக்கு, மழவில் சாட்டம், தும்பி துள்ளும் பாரா ஆகிய மூன்று நீர்வீழ்ச்சிகளையும் உள்ளடக்கியது இந்த நீர்வீழ்ச்சி. 76 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டும் இந்த நீர்வீழ்ச்சி, கேரளாவில் உள்ள உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.
லக்கிடி நீர்வீழ்ச்சி
வயநாட்டில் அமைந்துள்ள மற்றொரு அற்புதமான நீழ்வீழ்ச்சி இது. லக்கிடி வ்யூ பணின்டிற்கு அருகில் தான் சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சி உள்ளது. லக்கிடி கிராமத்தில் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள், பள்ளத்தாக்குகள், மலைகள் ஆகியவை அதிகம் உள்ளன. இதை வயநாட்டின் நுழைவு வாயில் என்றே சொல்கிறார்கள். பனிமூட்டம் இல்லாத நாட்களில் இங்குள்ள பாறைகள், பள்ளத்தாக்குகளை காண்பதே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
ரெயின்போ நீர்வீழ்ச்சி
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மூணாறில் அமைந்துள்ளது இந்த ரெயின்போ நீர்வீழ்ச்சி. இதை கீழர்குத்து நீர்வீழ்ச்சி என்றும் சொல்லுவது உண்டு. வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி 200 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது. தொடுபுழா நகருக்கு அருகில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி கேரளா வரும் சுற்றுலா பயணிகள் பலரும் அறியாத இடமாகும். மூணாறு வருபவர்கள் இங்கு அவசியம் வந்து விட்டு செல்ல வேண்டும். டிரெக்கிங் செல்ல விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்ற இடமாகும்.
பெருந்தேனருவி
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை போலவே ஆர்ப்பரித்துக் கொட்டும் அழகிய பிரம்மாண்ட அருவி பெருந்தேனருவி ஆகும். நடுதிருவாங்கூரின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. எருமேலியில் இருந்து 10.கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. இது கேரளாவின் மிக பிரபலமான சுற்றுலா தலமாகும். மேற்கு தொடர்ச்சி மலையின் சஹாயத்ரி மலையத்தொடரில் உள்ள இந்த அருவி நீர், பம்பை ஆற்றுடன் சேர்கிறது. இந்த அருவி அழகும், ஆபத்தும் நிறைந்த பகுதியாகும்.
இதுவரை நீங்கள் இந்த இடங்களுக்கு சென்றதில்லை என்றால் அடுத்த முறை கேரளா செல்லும் போது அவசியம் போய் ரசித்து விட்டு வாருங்கள்.



Click it and Unblock the Notifications






