இரண்டாயிரம் அடி உயரத்தில் விமானம் நிலை நிறுத்தப்பட்டிருக்க அதிலிருந்து முதுகில் பாராசூட் உதவியுடன் குதித்து வானத்தில் மிதக்கும் 'எளிமையான' சாகசம் தான் இந்த ஸ்கை டைவிங். ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் இந்தியில் வெளியான 'ஜிந்திகி நா மேலேகி தொபரா' படத்தில் ஹிருத்திக் ரோஷனும் அவரது நண்பர்களும் ஸ்பெயின் நாட்டில் இந்த ஸ்கை டைவிங் செய்வது போன்ற அற்புதமான காட்சி இடம்பெற்றிருக்கும். நிறைய தைரியமும், பாதுகாப்பு அம்சங்களும், பயிற்சியும் தேவைப்படும் இந்த சாகச விளையாட்டு தற்போது இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைந்து வருகிறது. வாருங்கள் இந்தியாவில் ஸ்கை டைவிங் செய்ய சிறந்த இடங்கள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
மைசூர்:
Photo: wales_gibbons
மைசூரில் இருக்கும் சாமுண்டி மலையில் 'டிராப் ஜோன்' என்ற தனியார் நிறுவனத்தால் ஸ்கை டைவிங் ஏற்பாடு செய்யப்படுகிறது. மூன்று விதமான ஸ்கை டைவிங் முறைகளில் நாம் ஒன்றை தேர்ந்தெடுத்து அப்படிப்பட்ட முறையில் ஸ்கை டிவிங் செய்யலாம். முதலாவது வகை 'ஸ்டேடிக் ஜம்ப்' எனப்படும் வழக்கமான ஸ்கை டைவிங் ஆகும். இதில் தனியாக ஒருவர் வானத்தில் சிறிது நேரம் மிதந்துவிட்டு பின் பாராசூட் மூலம் தரையிறங்குவது ஆகும். இரண்டாவது 'டெண்டம் ஜம்ப்' எனப்படும் பயற்சியாளர் ஒருவருடன் சேர்ந்து குதிப்பது ஆகும். தனியாக குதிக்க பயப்படுபவர்கள் இம்முறைப்படி குதிக்கலாம். மூன்றாவது வேகமாக தரையிறங்கும் முறையாகும். இம்மூன்று முறைகளில் எதோ ஒரு வகையில் நாம் குதிக்கலாம்.
தானா:
Photo: Morgan Sherwood
மத்தியப்பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 200 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது தானா என்னும் சிறிய நகரம். சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இல்லா விட்டாலும் இந்தியாவின் ஸ்கை டைவிங்கின் தலைநகர் என்று சொல்லக்கூடிய அளவு ஸ்கை டைவிங் சாகச பிரியர்களிடையே இந்நகரம் பிரபலமாகும். 4,000 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் போது ஏற்ப்படும் இதயத்தை உறைய வைக்கும் அனுபவம் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாததாய் இருக்கும்.
தீசா:
Photo: Philip Leara
இந்தியாவில் முதன் முதலாக ஸ்கை டைவிங் துவங்கப்பட்ட இடம் குஜராத் மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த தீசா என்ற இடமாகும். ஏரி ஒன்றின் ஓரத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஸ்கை டைவிங் செய்ய வருகின்றனர். ஸ்கை டைவிங் செய்யும் முன்பு முறையான பயிற்சியும் இங்கே அளிக்கப்படுகிறது. குஜராத் செல்கையில் தவறாமல் இங்க சென்று வாருங்கள்.
அம்பி பள்ளத்தாக்கு:
Photo: Philip Leara
மும்பையில் இருந்து இரண்டு மணி நேர சாலைப்பயணத்தில் வருகிறது இந்த அம்பி பள்ளத்தாக்கு. இந்தியாவில் ஸ்கை டைவிங் சிறந்த இடம் என இது வர்ணிக்கப்படுகிறது. காரணம் என்னவெனில் இங்கு மட்டும் தான் 10,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்ய ஏற்ற வகையில் புவியியல் அமைப்பு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அத்தனை அடி உயரத்தில் இருந்து குதிக்கையில் அற்புதமான இயற்கை காட்சிகளையும் நாம் இங்கே காண முடியும். மூச்சுத்திணறல் அல்லது முதுகுத்தண்டு பிரச்சனை இருப்போர் ஸ்கை டைவிங்கை தவிர்ப்பது நல்லது.
பாண்டிச்சேரி:
Photo: Philip Leara
நம்ப முடியவில்லை அல்லவா?. நம்மூர் பாடிசெரியிலும் இப்போது காகினி என்னும் தனியார் நிறுவனத்தால் ஸ்கை டைவிங் ஆரம்பிக்கப்படுள்ளது. வார விடுமுறையை கொண்டாட பாண்டிச்சேரி செல்பவராக இருந்தால் இந்த சாகசத்தையும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். அழகு நிறைந்த பாண்டிச்சேரியை வானத்தில் இருந்த ரசிப்பது எத்தனை ஆனந்தமாக இருக்கும். நிச்சயம் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.