தமிழகத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் என்று பார்த்தால் ஆன்மிக தலங்கள், பாரம்பரிய சின்னங்கள் என காஞ்சிபுரம், ராமேஸ்வரம், மதுரை, மகாபலிபுரம் என பல இடங்களில் பல விஷயங்கள் உள்ளன. இவற்றை ஒரே வாரத்தில் சுற்றி பார்க்க இதோ சூப்பரான டூர் பிளான் உங்களுக்காக...

மொத்தம் 6 இரவுகள் 7 பகல் கொண்ட இந்த சுற்றுலா பயணத்தை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்தே துவங்கலாம். நீங்கள் தமிழகத்தின் எந்த பகுதியில் வசித்தாலும் சென்னைக்கு வந்து இறங்கி விடுங்கள்.
முதல் நாள்
சென்னையில் நல்ல ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து குளித்து, தயாரானால் முதலில் வடபழனி, கபாலீஸ்வரர் கோவில், அஷ்டலட்சுமி கோவில் சென்று விட்டு மதிய உணவிற்கு பிறகு ஓய்வு எடுத்து விட்டு, மாலையில் பீச்சுக்கு சென்று அங்குள்ள தலைவர்கள் நினைவிடம் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்து விட்டு, இரவு ஓட்டல் அறைக்கு வந்து தங்கலாம்.

இரண்டாம் நாள்
இரண்டாம் நாள் காலை உணவை முடித்துக் கொண்டு மகாபலிபுரம் சென்றால் முதலை பண்ணை, தக்ஷிணசித்ரா எனப்படும் கைவினை பொருட்களுக்கான இடம், மாமல்லபுரம் கடற்கரை கோவில், அதை சுற்றி உள்ள பஞ்சரதம், வராக குகை கோவில், புலி குகை, கிருஷ்ண மண்டபம், அர்ஜூனன் தவம் செய்த இடம் உள்ளிட்ட 1 முதல் 2 கி.மீ., சுற்றளவில் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்து விட்டு, இரவு மகாபலிபுரத்திலேயே தங்கலாம்.
மூன்றாம் நாள்
மூன்றாம் நாள் காலை உணவை முடித்து விட்டு தஞ்சாவூர் புறப்பட்டு சென்று, ஓட்டலுக்கு சென்று தயாராகி விட்டு புறப்பட்டால் பிரகதீஸ்வரர் கோவில், நந்தி கோவில், பிரம்மாண்ட அரண்மனை வளாகம் உள்ளிட்ட தஞ்சாவூரில் பார்க்க வேண்டிய இடங்களை பார்த்து விடலாம்.

நான்காம் நாள்
நான்காம் நாளில் தஞ்சையில் இருந்து மதுரை வரும் வழியில் திருச்சியில் மலைக்கோட்டை கோவில், ஜம்புகேஸ்வரர் கோவில், ஸ்ரீரங்கம் ஆகியவற்றை பார்த்து விட்டு மதுரை சென்று சேர்ந்து விடலாம். மதுரையில் பார்க்க வேண்டிய கோவில்களும், இடங்களும் நிறைய உள்ளன, புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில், காந்தி மியூசியம், திருமலை நாயக்கர் மகால் ஆகியவற்றை பார்த்து விட்டு மதுரையில் ஓட்டலுக்கு சென்று இரவு தங்கிக் கொள்ளலாம்.
ஐந்தாம் நாள்
ஐந்தாம் நாள் காலை உணவை முடித்துக் கொண்டு புறப்பட்டு ராமேஸ்வரம் சென்று விடலாம். அங்கு புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலில் சென்று தீர்த்தங்களில் புனித நீராடலாம். ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான இக்கோவிலை தரிசித்து விட்டு புறப்பட்டால் ராமர் பாதம், கோதண்டராம சுவாமி கோவில், தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களை பார்த்து விட்டு, இரவு ராமேஸ்வரத்தில் தங்கலாம்.
ஆறாம் நாள்
ஆறாம் நாள் காலை உணவை சாப்பிட்டு விட்டு புறப்பட்டால் கன்னியாகுமரியை அடைந்து விடலாம். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், காந்தி மண்டபம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கி விடலாம்.
ஏழாம் நாள்
ஏழாம் நாளில் காலை கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை ரசித்து விட்டு, காலை உணவை சாப்பிட்டு முடித்து விட்டு, திற்பரப்பு அருவியில் குளித்து விட்டு, நெல்லை வந்து அங்குள்ள அணைகள், நெல்லையப்பர் கோவில் ஆகியவற்றை சுற்றி பார்த்து விட்டு அப்படியே ரயில் அல்லது பஸ்சை பிடித்து ஊர் வந்த சேர்ந்து விடலாம்.
இந்த ஏழு நாள் தமிழ்நாடு சுற்றலா பயணத்தை சொந்த வாகனங்களிலும் மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் இதற்கென டூர் பேக்கேஜ்களும் உள்ளன. இதன் மூலமும் புக் செய்து சென்று வரலாம். இவற்றில் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப நாட்கள் மற்றும் இடங்களையும் குறைத்துக் கொள்ளலாம். நாம் விரும்பும் நாட்கள் அல்லது ஊர்களுக்கு ஏற்ப டூர் பேக்கேஜிற்கான கட்டணங்களும் மாறுபடும். அதே போல் பெரியவர்கள், சிறுவர்கள் என்பதற்கும் ஏற்கனவும் கட்டண தொகை மாறுபடும்.



Click it and Unblock the Notifications



