பரபரப்பாக இயங்கும் பெங்களூரு நகரில் இயந்திரம் போல் வேலை செய்து களைத்து விட்டீர்களா? டிராபிக், வாகன இரைச்சல், டென்ஷன் என எதுவும் இல்லாமல் எங்காவது அமைதியாக, ஜாலியாக இருந்து விட்டு வர வேண்டும், மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என்றால் பெங்களூருவை சுற்றி இருக்கும் நீர்வீழ்ச்சிகளுக்கு ஒரு ட்ரிப் சென்று விட்டு வாருங்கள். கார்டன் சிட்டியான பெங்களூருவை சுற்றி கிட்டதட்ட 30 நீர்வீழ்ச்சிகள் உள்ளது. அதுவும் 50 முதல் 300 கி.மீ., தூரத்திற்குள் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை தாங்க. வாங்க, அவற்றில் சிலவற்றை உங்களுக்கு காட்டுகிறோம்.

பெங்களூருவிற்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சிகள் :
1. தொட்டிகல்லு நீர்வீழ்ச்சி :
பெங்களூருவில் இருந்து 32 கி.மீ., தூரத்தில், மைசூரு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கனகபுரா சாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியை சொர்ணமுகி நீர்வீழ்ச்சி என்றும் அழைப்பார்கள். டிரக்கிங், போட்டோ, சாகச பிரியர்கள் அனைவருக்கும் ஏற்ற இடம் இந்த தொட்டிகல்லு நீர்வீழ்ச்சி.
2. முத்தியாலா மடவு நீர்வீழ்ச்சி :
பெங்களூருவில் இருந்து 40 கி.மீ., தொலைவில் ஓசூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இயற்கை அழகை ரசிக்க, டிரக்கிங் செல்ல, போட்டோ எடுத்து மகிழ, வித்தியாசமான பறவைகளை ரசித்து மகிழ ஏற்ற இடம் இதுவாகும். அதிலும் காலை நேரத்தில் இந்த நீர்வீழ்ச்சியை கண்டு ரசிப்பதே தனி சுகம் தான். இதற்கு அருகில் அடர்ந்த காடுகளுக்கு அருகில் தட்டேகெரே ஏரியும் அமைந்துள்ளது.
3. சுஞ்சி நீர்வீழ்ச்சி :
பெங்களூருவில் இருந்து கனகபுரா செல்லும் சாலையில் 90 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழி எங்கும் பச்சை பசேல் என பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். மூன்று நதிகள் சங்கமிக்கும் இந்த நீர்வீழ்ச்சியின் அழகில் மயங்காதவர்கள் இருக்கவே முடியாது. குடும்பத்துடன், நண்பர்களுடன் என ஜாலியாக சென்று வர ஏற்ற சுற்றுலா தலம் இதுவாகும்.

4. மேகதாது நீர்வீழ்ச்சி :
மற்றொரு நதிகள் சங்கமிக்கும் நீர்வீழ்ச்சி இதுவாகும். பெங்களூருவில் இருந்து கனகபுரா சாலையில் 90 கி.மீ., தூரம் பயணித்தால் இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம். பெரிய பாறைகள், வ்யூ பாயிண்ட்கள் என பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். பாறைகள் வழுக்கும் தன்மை கொண்டவை என்பதால் மழைக்காலங்களில் இங்கு செல்வதை தவிர்த்து, மற்ற காலங்களில் செல்லலாம். காடுகள், மலைகள் என பார்ப்பதற்கே வித்தியாசமான அனுபவத்தை தரக் கூடியதாகும்.
5. ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி :
பெங்களூருவில் இருந்து 126 கி.மீ., பயணம் செய்து வந்தால் இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம். மிக பிரபலமான இந்த நீர்வீழ்ச்சியில் படகு சவாரி செய்வதற்கும் வசதி உண்டு. சூப்பரான அருவி குளியல், நாவில் எச்சில் ஊற வைக்கும் சுடசுட மணக்கும் மீன் சாப்பாடு ஆகியன சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்து வருகிறது. இந்தியாவின் நயாகரா அருவி என்று கூட இதை சொல்லலாம்.
6. சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி :
பெங்களூருவில் இருந்து 140 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாகவே பரசுக்கி நீர்வீழ்ச்சி, ககனசுக்கி நீர்வீழ்ச்சி ஆகியவற்றையும் அடைய முடியும். அணைகள், நீர்தேக்கங்கள், ஆற்று படுகை என ஒரு நாள் முழுவதையும் இயற்கையுடன் இணைந்து கழித்து மகிழ ஏற்ற இடம்.
7. கைகால் நீர்வீழ்ச்சி :
பெங்களூருவில் இருந்து 120 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்டு அமைந்துள்ள இந்த அழகிய நீர்வீழ்ச்சி டுமுக்குரல்லு நீர்வீழ்ச்சி என்றும் உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் திறந்த வெளியில் அமைந்தள்ள அழகிய சிவலிங்கத்தை வழிபட சிவராத்திரி போன்ற காலங்களில் அதிகமான பக்தர்கள் வருகிறார்கள்.
8. கல்யாண் ரேவு நீர்வீழ்ச்சி :
பெங்களூருவில் இருந்து 123 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி கெளடின்யா வனவிலங்குகள் சரணாயத்தில் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் ஒரு அழகிய நீர்வீழ்ச்சி ஆகும். விதவிதமான பறவைகள், வனவிலங்குகள் ஆகியவற்றையும் இங்கு ரசித்து மகிழ முடியும்.

9. இருப்பு நீர்வீழ்ச்சி :
பெங்களூருவில் இருந்து மைசூரு தலசேரி சாலையில் 250 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. இங்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.50 வசூலிக்கப்படுகிறது. ராமேஸ்வரா கோவிலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கு வராமல் செல்வது கிடையாது.
10. அபே நீர்வீழ்ச்சி :
பெங்களூருவில் இருந்து 270 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கூர்க் பகுதியில் இருந்து இங்கு செல்வது எளிது. காபி எஸ்டேட்டிற்கு நடுவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. தொங்கு பாலத்தில் நடந்து சென்றும் இந்த நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்க முடியும். நேரம் போவதே தெரியாமல் பொழுதை கழிக்க ஏற்ற இடம். ஆனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இங்கு செல்ல அனுமதி உண்டு. நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.15 வாங்குகிறார்கள்.



Click it and Unblock the Notifications



