நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள நகரமான நங்கல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடியிருப்புகளைக் கொண்டு சிறப்பாக பங்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளுடன் காணப்படும் குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்நகரம் நங்கல் நிக்கு, ஹம்பேவால் மற்றும் தொபேட்டா காலனி ஆகிய மூன்று கிராமங்களின் பகுதியாக இருந்துள்ளது.
ஷிவாலிக்குகள் மற்றும் பல்வேறு நதிகளினால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள நங்கலின் இயற்கை அழகு, காண்போரை கட்டிப்போடக்கூடியதாகும். 1955 ஆம் ஆண்டில் சட்லெஜ் நதியின் மேல் பக்ரா நங்கல் அணை கட்டப்பட்ட பின்னர் இந்த இடம் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த அணையிலிருந்து உருவான அழகிய ஏரி இவ்விடத்தின் பிரதான ஈர்ப்பாகத் திகழ்கிறது.
சுற்றுலாப் பயணிகள் ஜுல்ஃபா மாதா கோயில், குருத்வாரா விபௌர் சாஹிப் மற்றும் ஸ்ரீ பாபா உதோ ஜி மஹாராஜின் வரலாற்று சிறப்புமிக்க கோயில் போன்ற பல்வேறு இதர ஸ்தலங்களுக்கும் சென்று வரலாம். ஏராளமான தர்மசாலாக்கள் மற்றும் விடுதிகள் இங்கு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதியைப் பற்று கவலை கொள்ளத் தேவையில்லை. ரூப்நகரின் முக்கிய நகரிலிருந்து சுமார் 63 கி.மீ. தொலைவில் உள்ள நங்கலை சாலை வழியாக எளிதில் சென்று அடையலாம்.
பக்ரா அணை, சட்லெஜ் நதியின் மீது அமைக்கப்பட்டுள்ள பக்ரா-நங்கல் அணையின் ஒரு அங்கமாகும். பிலாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணை பக்ரா கிராமத்தின் பெயரில் இருந்தே தனது பெயரைப் பெற்றுள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய அணையாக அறியப்படும் இது, அதன் அபரிமிதமான நீர் மின் சக்தி ஜெனரேட்டர்களின் மூலம் இது அமைந்துள்ள மாவட்டத்துக்கு மட்டுமின்றி அருகாமையில் உள்ள மாநிலங்களான ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் ஆகியவற்றுக்குமான நீர் மின் சக்தி உற்பத்திக்கு பெருமளவில் உதவி புரிந்து வருகிறது. இப்பகுதியின் மழைக்கால வெள்ளப்பெருக்குகளைக் கட்டுப்படுத்தவும் இந்த அணை உதவுகிறது.
அது மட்டுமின்றி, சிறப்பான நீர்ப்பாசன வசதியை நல்கி, இப்பகுதியின் விவசாய உற்பத்தியை உயர்த்தவும் உதவி வருகிறது. மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பிரபலமான நீர்த்தேக்கமான கோவிந்த் சாகரை தன்னகத்தே கொண்டுள்ள பெருமையையும் பெற்றுள்ளது இந்த அணைக்கட்டு. இதன் தனித்துவமான இயற்கை அழகு மற்றும் பச்சை பசேலென்ற சுற்றுப்புறம் ஆகியன நாடெங்கிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இங்கு ஈர்த்து வருவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.