உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 144 வருடங்களுக்கு பிறகு நடக்கிறது என்பதால் இதில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஏராளமானவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் மகா கும்பளேமாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களை கவருவதற்காக நாட்டின் பல முக்கிய கோவில்கள் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் பிரயாக்ராஜில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் மாதிரி வடிவம் பிரயாக்ராஜில் நிறுவப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலை போலவே உருவாக்கப்பட்டுள்ள இந்த கோவிலில் திருப்பதி ஏழுமலையானை வட மாநில பக்தர்களும் தரிசிப்பதற்காக ஏழு அடி உயரத்தில் ஏழமலையான் சிலை நிறுவப்பட்டு, அங்கு தினசரி பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதோடு சேர்த்து தற்போது 12 ஜோதிர்லிங்கங்களையும் ஒரே இடத்தில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவ பெருமான் ஜோதி வடிவமாக காட்சி அளித்த 12 இடங்களில் சிவலிங்கங்கள் நிறுவப்பட்டு பக்தர்களால் வழிபடப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு ஜோதிர்லிங்கங்கள் என்று பெயர். இவைகள் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளன. இந்த 12 லிங்கங்களையும் தரிசனம் செய்வதால் சிவ பெருமானின் அருளை பெற்று, முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் சிவ பக்தர்கள் பலரும் இந்த 12 கோவில்களுக்கும் புனித யாத்திரை மேற்கொள்வது உண்டு.

12 ஜோதிர்லிங்க தலங்கள் :
1. சோம்நாத் கோவில் (குஜராத்)
2. மல்லிகார்ஜூன சுவாமி கோவில் (ஆந்திரா)
3. மகாகாலேஸ்வர் கோவில் (மத்திய பிரதேசம்)
4. ஓம்காரேஸ்வர் கோவில் (மத்திய பிரதேசம்)
5. பைதியநாத் கோவில் (ஜார்கண்ட்)
6. பீமாஷங்கள் கோவில் (மகாராஷ்டிரா)
7. ராமநாத சாமி கோவில் (தமிழ்நாடு)
8. நாகேஸ்வர் கோவில் (குஜராத்)
9. காசி விஸ்வநாதர் கோவில் (உத்திர பிரதேசம்)
10. திரியம்பகேஸ்வரர் கோவில் (மகாராஷ்டிரா)
11. கேதார்நாத் கோவில் (உத்திரகாண்ட்)
12. கிரிஷ்னேஸ்வர் கோவில் (மகாராஷ்டிரா)
இந்த 12 கோவில்களையும் பக்தர்கள் பல விதமான மாநிலங்களுக்கு அலைந்து திரிந்த தரிசிக்க முடியாது என்பதால் இவை அனைத்தையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வகையில் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிவாலயா பார்க் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 12 ஜோதிர்லிங்க தலங்களுடன், மேலும் புகழ்பெற்ற 5 சிவாலயங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. மகா கும்பமேளா செல்பவர்கள் மறக்காமல் இந்த சிவாலயத்திற்கும் ஒரு முறை சென்று தரிசித்து விட்டு வரலாம்.
12 ஜோதிர்லிங்க தலங்களுக்குடன்,
1.பைஜ்நாத் கோவில் (இமாச்சல பிரதேசம்)
2. பசுபதிநாத் கோவில் (நேபாளம்)
3. லிங்கராஜ் கோவில் (ஒடிசா)
4. வீரபத்ர ஆலயம் (ஆந்திரா)
5. கடற்கரை கோவில் (தமிழ்நாடு)
ஆகிய 5 புகழ்பெற்ற சிவன் கோவில்களின் மாதிரி வடிவங்களையும் தரிசித்து விட்டு வர முடியும்.
சிறப்பு அம்சங்கள் :
திரிவேணி சங்கமத்திற்கு அருகில் 11 ஏக்கரில் ஆரையல் என்ற பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 400 டன் மறுசுழற்சி செய்யப்பட்ட இரும்புகளைக் கொண்டு, "Waste to Wonder" என்பதை கருப் பொருளாகக் கொண்டு அச்சு அசல் நிஜமான ஜோதிர்லிங்க கோவில்களை போலவே இவை தனித்தனி கோவில்களாகவே அமைக்கப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற சிவன் கோவில்களின் மாதிரிகளை பார்த்து தரிசிப்பதுடன், இங்கு வரும் பக்தர்கள் படகு சவாரியும் செய்யலாம். இந்த பார்க்கை சுற்றி அமைந்துள்ள நதியில் படகில் சென்று சுற்றி பார்க்கலாம்.
இந்த ஜோதிர்லிங்க பார்க்கில் பக்தர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் விஷயம் என்னவென்றால், இங்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள சமுத்திர மந்தன் காட்சி தான். புராண கதைகளில், தேவர்களும்-அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைந்ததாக சொல்லப்படும் காட்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. பார்க்கிற்குள் நுழையும் போதே பிரம்மாண்டமான வாசுகி பாம்பை கயிறாக்கி தேவர்கள் ஒரு பக்கமும், அசுரர்கள் ஒரு பக்கமும் பிடித்து பாற்கடலை கடையும் காட்சியை காண முடியும்.
அதோடு மிகப் பெரிய நந்தி சிலை, திரிசூலம் ஆகியவற்றின் பிரம்மாண்ட உருவங்கள் இந்த பூங்காவின் பிரம்மாண்டத்திற்கு மேலும் பிரம்மாண்டத்தை கூட்டுகின்றன. திரிவேணி சங்கமத்தில் கூட்டத்தில் சிக்கிய பக்தர்கள் இந்த பார்க்கில் குடும்பம், குழந்தைகளுடன் அமைதியான ஒரு சூழலை அனுபவிக்க முடியும். இங்குள்ள துளசி வனம், சஞ்ஜீவினி வனம் ஆகியவை தெய்வீக தன்மையையும், மனதிற்கு ஆனந்தத்தையும் தருவதாக இருக்கின்றன.
வேறு என்னவெல்லாம் இருக்கு ?
இந்த பார்கிற்கு வரும் பக்தர்கள் மனதிற்கு பிடித்த உணவுகளை சுவைத்து பார்க்க ஃபுட் கோர்ட், பல விதமான உணவகங்கள் பார்க் வளாகத்திற்குள்ளாகவே அமைக்கப்பட்டுள்ளன. பார்க்கிற்கு வெளியில் சாலையோர உணவுக் கடைகளும் வரிசையாக உள்ளன. இந்த பார்க்கை சுற்றி பார்ப்பதற்கு ஒரு நபருக்கு வார நாட்களில் ரூ.50 ம், வார இறுதி நாட்களில் ரூ.100 ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது கிடையாது. தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த பார்க் திறந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications



