சீனா என்றதுமே உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? பழங்கால சந்தைகள், கண்கவர் கண்காட்சி அரங்குகள், வசீகரிக்கும் இயற்கை காட்சிகள் மற்றும் அழகிய மடாலயங்கள் போன்றவற்றை கண்டு வியக்க சீனா உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. ஏகப்பட்ட இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட அதிசயங்களால் சீனா நிறைந்துள்ளது. அழகிய சீனாவை சுற்றிப்பார்க்கும் விதமாக இப்போது சீனா தனது கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதனைப் பற்றிய முக்கிய தகவல்கள் இதோ!

அழகிய சீன சுற்றுலாத் தலங்கள்
சீனாவின் சுற்றுலாத் தலங்கள், சுற்றுலாப் பயணிகளை நாட்டின் கலாச்சார மற்றும் பாரம்பரிய வேர்களுக்கு மீண்டும் அழைத்துச் செல்லும் ஒரு பெரும் சாகசத்தை வழங்குகின்றன. பயணிகள் மர்மமான இடங்களுக்குச் செல்லவும், மனிதகுலத்தின் பழமையான பொக்கிஷங்களின் காட்சிகளைப் கண்டு களிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. சீனாவின் பெருஞ்சுவர், போர்பிட்டன் சிட்டி, இம்பீரியல் அரண்மனை, தி டெரகோட்டா இராணுவம், கோடைகால அரண்மனை, லி ரிவர், குய்லின், செங்டு ரிசர்ச் பேஸ் ஆஃப் ஜெயண்ட் பாண்டா இனப்பெருக்கம், யாங்சே நதி மற்றும் பல துடிப்பான நகரங்கள் ஆகியவை இங்கே நீங்கள் கட்டாயம் சுற்றிபார்க்க வேண்டிய இடங்களாகும்.

நலிவடைந்த சுற்றுலாத் துறை
சீனாவில் சுற்றுலாத் தொழில் சீனப் பொருளாதாரத்தின் ஒரு வளர்ந்து வரும் மற்றும் குறிப்பிடத்தக்க பகுதியாக செயல்படுகிறது. ஆனால் 2019 ஆண்டின் இறுதியில் கொரோனாவிற்கு பிறகு சீனாவிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. அதனால், COVID-19 தொற்றுநோய் மற்றும் கட்டுப்பாடுகள் சீனாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுக்குப் பிறகு, பல நாடுகள் சர்வதேச சுற்றுலாவுக்காக தங்கள் எல்லைகளைத் திறந்தன. சீனாவும் அதையே இப்போது செய்துள்ளது. நவம்பர் 11 அன்று, சீனா புதிய கோவிட்-19 பயணக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியது. அதனால் சீனாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதிய பயணக் கொள்கை
டெல்லியில் உள்ள சீன தூதரகம், சீனாவிற்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை குறைத்து புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. சீனாவுக்குச் செல்லும் பயணிகள், விமானம் ஏறுவதற்கு 48 மணி நேரத்திற்குள் இரண்டு RT-PCR சோதனைகளுக்குப் பதிலாக ஒருமுறை மட்டுமே எடுக்க வேண்டும்.
மேலும், பயணிகள் கொரோனா நெகடிவ் சான்றிதழுடன் பசுமை சுகாதார குறியீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும், நிரந்தர சீன முகவரிகளைக் கொண்ட சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலம் ஐந்து நாட்களில் இருந்து மூன்று நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிரந்தர முகவரி இல்லாதவர்கள் எட்டு நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதற்கு முன் இவர்கள் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று இருந்தது.
WHO ஆல் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்த சமரசமும் செய்யக்கூடாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இனி நீங்கள் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளுகிறீர்கள் என்றால் இதனைக் கவனத்தில் வைத்துக்கொண்டு திட்டமிடவும்!



Click it and Unblock the Notifications



