ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற மௌண்ட் அபு மலைப் பிரதேசம் உலகளவில் பிரசித்தமான சுற்றுலாத் தலமாக அறியப்படுகிறது. இயற்கை அம்சங்களும், இனிமையான கால நிலையும், பசுமைச் சூழலும் இப்பகுதி அனைத்துத் தரப்பினராலும் விரும்பி பயணம் செய்யக் கூடியதாக உள்ளது. குறிப்பாக இம்மலைத் தொடரிலேயே அமைந்துள்ள கோவில் பல வரலாற்றுச் சிறப்புகளுடனும், கட்டிட அமைப்பும் புதிதாகக் காண்போரை சற்றே திகைத்திடச் செய்திடும்.
ஜெயின் வழிபாட்டுத் தலம்
இந்தியாவில் ஒருசில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே ஜெயின் கோவிலைக் காண முடியும். அந்த வகையில் அபு மலைப் பிரதேசத்தில் உள்ள ஜெயின் கோவில் பிற மதத்தினராலும் விரும்பி பயணிக்கக் கூடிய தலமாக உள்ளது. இதற்குக் காரணம், கோவில் முழுவதும் பளிச்சிடும் பளிங்குக் கற்கலால் வடிவமைக்கப்பட்டதே ஆகும்.
தில்வாரா கோவில்
மவுன்ட் அபுவில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தில்வாரா ஜெயின் கோவில். கி.பி 11 முதல் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தில்வாரா கோவில் தலத்தில் ஐந்து கோவில்கள் உள்ளடங்கி உள்ளன. தில்வாரா கோவில் ஜைனர்களின் புனிதத் தலமாகும்.
தூணில் மிளிரும் கைவண்ணம்
நாட்டில் ஜெயின் கோவில்கள் பல காணப்பட்டாலும் அபுவில் உள்ள இந்த தில்வாரா கோவில் தனித்துவம் பெறக் காரணம் பளிங்குக் கற்கலால் செதுக்கப்பட்டதே. இத்தலத்தில் உள்ள தூண்கள், மாடங்கள், கூரைகள், கதவுகள் என ஒவ்வொன்றும் அழகுடன், பிரம்மிப்பூட்டும் கலைநயத்தை உள்ளடக்கியுள்ளது.
பளிச்சிடும் பளிங்குக் கல்
தில்வாரா கோவிலில் பளிங்கிலேயே ரசனை மிகு நயத்துடனும், நுணுக்கத்துடனும் வடிவமைக்கப்பட்டிருப்பது மிகக் கடினமானது என்றும் இந்தியாவில் வேறெங்கும் இதுபோன்ற கோவில் இல்லை என்றும் கூறுகின்றனர் வல்லுநர்கள். அலங்காரத் தூண்கள், மேற்கூரைகள் என ஒவ்வொன்றும் வியப்பூட்டுகின்றன.
ஐந்து கோவில்கள்
இத்தலத்தில் உள்ள ஐந்து கோவில்களில் விமல் வாசாஹி, லூனா வாசாஹி என்ற கோவில்கள்தான் பிரம்மாண்டமான அழகைக் கொண்டுள்ளது. உலகிலேயே மிக அழகான மற்றும் நுணுக்கமான பளிங்கு சிற்பங்கள் இங்கு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
விமல் வாசாஹி
முதலாம் பீம் தேவ் என்ற மன்னனிடம் அமைச்சராக இருந்த விமல் ஷா 1031-ல் கட்டிய கோவில் தான் விமர் வாசாஹி. ஆதிநாத் என்ற முதல் தீர்த்தங்கரருக்கான கோவிலும் இதுதான். இதனை வடிவமைத்த சிற்பிகளுக்கு தங்கமும், வைரமுமாக பரிசுகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் பிரபலமானது ரங்க மண்டபம். கர்ப்பகிரகத்தின் நேர் எதிரே உள்ள இந்த மண்டபம் 12 தூண்களைக் கொண்டுள்ளது.
லூனா வாசாஹி
22-வது தீர்த்தங்கரரான நேமிநாதருக்கு லூனா வாசாஹி கோவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நேமிநாதர் அழகிய கதவுகள் வழியாக தரிசனம் தருகிறார். அடுத்ததாக நம் கண்ணில் தென்படுவது புரவலர்களின் அரங்கம். இந்த நீளமான அறையில் கருப்பு சலவைக் கல்லில் யானைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விலை உயர்ந்த மேற்கூரை
இக்கோவிலில் இருக்கும் மத்திய மண்டபத்தின் மேற்கூரையில் பளிங்கு கற்களில் குடையப்பட்ட கல் ஆபரணங்கள் காண்போரை நிச்சயம் பிரம்மிப்பில் ஆழ்த்திவிடும். மேலும், தில்வாரா கோவிலில் பளிங்கு கல்லினால் குடையப்பட்ட 72 ஜைன மத தீர்த்தங்கர்களின் சிற்பங்கள் மற்றும் ஹச்திசாலா என்ற மண்டபத்தில் அவ்வளவு உயிர்ப்புடன் வடிக்கப்பட்ட 12 யானைகளின் சிற்பங்கள் போன்றவை உள்ளன.
மவுன்ட் அபு
மவுன்ட் அபுவில் உள்ள இக்கோவிலைத் தவிர்த்து அருகில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலம் வனவிலங்கு சரணாலயம். சுமார் 290 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்துவிரிந்திருக்கும் இச்சரணாலயத்தில் அரிய விலங்குகள் உள்ளிட்டு பல வகையான விலங்குகளும், பறவையினங்களும் காணப்படுகின்றன. பருவ மழைக் காலங்களில் இச்சரணாலயத்திற்கு பயணிப்பது ரம்மியமான அனுபவத்தை அளிக்கும்.
இதர சுற்றுலா அம்சங்கள்
மவுன்ட் மலைத் தொடர் முழுவதுமே பல விதமான சுற்றுலா அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. அவற்றுள் சன்செட் பாயிண்ட், டோட் ராக், ஆச்சால்கர் கோட்டை, குரு ஷிகார் பீக், தூத் பாவ்ரி போன்ற தலங்கள் கட்டாயம் பயணிக்க வேண்டியவை ஆகும்.