திரிபுரா மன்னர்களின் ராஜ இருப்பிடமாக விளங்கிய இந்த நீர்மஹால் மாளிகை திரிபுராவில் உள்ள அழகிய அரண்மனைகளில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. இது 6ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள ருத்ரசாகர் ஏரியின் நடுவே கட்டப்பட்டிருக்கிறது. அழகிய தோற்றம் மட்டுமல்லாமல் கட்டிடக்கலை நுணுக்கத்திற்காகவும் இது மிக உயர்வாக கருதப்படுகிறது.
கட்டிடக்கலை
பெயரிலேயே பொருள் விளங்கும்படியாக நீரின் நடுவே கட்டப்பட்டிருக்கும் இந்த அரண்மனை 1930ம் ஆண்டு பீர் பிக்ரம் கிஷோர் தெப்பர்மன் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. இந்த அரண்மனையின் கட்டுமான அமைப்பு ஹிந்து மற்றும் இஸ்லாமிய பாணி வடிவமைப்பு அம்சங்களை கலந்து மணற்பாறை மற்றும் வெண்சலவைக்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது.
Soman
அமைப்பு
இதில் பல கோபுரங்கள், பலகணிகள், பாலங்கள், மாடங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன. நீரின் நடுவே கட்டப்பட்டிருந்தாலும் அரண்மனையை சுற்றி அழகிய தோட்டப்பூங்காக்கள் எப்போதும் பூத்துகுலுங்கும் வண்ணமலர்ச்செடி கொடிகளுடன் காணப்படுகின்றன. அகர்தலா நகரத்திற்கு மிக அருகிலேயே அமைந்துள்ள நீர்மஹால் அரண்மனை திரிபுரா மாநிலத்தில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விஜயம் செய்யப்படும் இடமாக பிரசித்தி பெற்றிருக்கிறது.
Soman
உஜ்ஜயந்தா அரண்மனை
தற்போது மாநில சட்டப்பேரவையாக இயங்கும் உஜ்ஜயந்தா அரண்மனை அகர்தலா நகரத்தின் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை அடையாளமாகும். இந்தோ கிரேக்க பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகை மஹாராஜா ராதாகிஷோர் மாணிக்யா என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. இது 1899 - 1901ம் ஆண்டுகளில் மெசர்ஸ் மார்ட்டின் & கோ எனும் நிறுவனத்தின் சார்பாக சர் அலெக்ஸாண்டர் மார்ட்டின் என்பவரால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உஜ்ஜயந்தா அரண்மனை எனும் பெயர் நோபல் விருது பெற்ற இந்திய கவிஞரான ரவிந்திரநாத் தாகூரால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அரண்மனையில் அரியணை அறை, தர்பார் கூடம், வரவேற்பறை மற்றும் ஒரு நூலகம் ஆகியவற்றோடு சுற்றிலும் பல தோட்டப்பூங்காக்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. 800 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இந்த பூங்காவில் ஜகந்நாத் கோயில் மற்றும் உமாமஹேஷ்வர் கோயில் எனப்படும் இரண்டு கோயில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
Soman
மலாஞ்சியா நிவாஸ்
நோபல் விருது பெற்ற பிரபல இந்திய கவிஞரான ரவிந்திரநாத் தாகூர் 1919ம் ஆண்டில் அகர்தலா வந்தபோது இந்த இல்லத்தில்தான் தங்கியுள்ளார். அப்போதைய திரிபுரா மன்னர் தாகூருடன் நெருங்கிய நட்புறவை கொண்டிந்தார். அவரின் அழைப்பின் பேரில் தாகூர் அடிக்கடி அகர்தலாவிற்கு விஜயம் செய்துள்ளார். 1919ம் ஆண்டில் அவர் அகர்தலா வந்தபோது இந்த மலாஞ்சியா நிவாஸ் இருந்த இடத்தில் ஒரு பழைய மண்வீடு இருந்தது. மன்னருக்கு சொந்தமான இந்த வீட்டில்தான் தாகூர் தங்கியிருந்தார். மஹாராஜா பிரேந்திர கிஷோர் மாணிக்யாவின் தனி வசிப்பிடமாக இந்த வீடு இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்த மண்வீடு காபிகுரு விருந்தினர் இல்லமாக பயன்பட்டு வந்தது. இன்று அந்த மண்வீடு இடிக்கப்பட்டு இரண்டு அடுக்கு கொண்ட கான்க்ரீட் கட்டிடம் கட்டப்பட்டு மலாஞ்சியா நிவாஸ் என்ற பெயரில் ஒரு ஞாபகார்த்த இல்லமாக அழைக்கப்படுகிறது. குஞ்சாபன் அரண்மனையை நோக்கியவாறு ஒரு மலையின்மீது இந்த மலாஞ்சியா நிவாஸ் அமைந்திருக்கிறது.
Koshy Koshy
திரிபுரா ஸ்டேட் மியூசியம்
திரிபுரா ஸ்டேட் மியூசியம் எனப்படும் இந்த அருங்காட்சியகம் 1970ம் ஆண்டு துவங்கப்பட்டிருக்கிறது. இது அகர்தலா நகரத்தின் மையப்பகுதியில் HGB சாலையில் அமைந்துள்ளது. திரிபுரா மாநிலத்தின் செழுமையான வரலாற்றை பிரதிபலிக்கும் பல அரும்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பல அரிய கருங்கற்சிற்பங்கள், கல்வெட்டுக்குறிப்புகள் மற்றும் பழங்கால நாணயங்கள் போன்றவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான தொல் பொருட்கள் திரிபுரா மாநிலம் மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டவையாகும். பிலாக் வரலாற்றுத்தலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பௌத்த சிலைகள் மற்றும் பெங்கால் கந்தா எம்பிராய்டரி கைவினைக்கலை தொடர்பான காட்சிப்பொருட்கள் இங்கு பிரதான முக்கியத்துவத்தை பெற்றிருக்கின்றன. இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களும் திரிபுரா மக்களின் நாகரிகம், மதநம்பிக்கை மற்றும் கலாச்சாரம் குறித்த சரியான புரிதலுக்கு உதவுகின்றன. திங்கள் முதல் வெள்ளி வரையில் காலை 10 மணி முதல் 5 மணி வரை இந்த அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது.
tripura.nic.in