இயற்கை எழில் கொஞ்சும் அழகும் மேற்கு தொடர்ச்சி மலையின் ரம்மியமும் இணைந்து ரப்பர் தோட்டங்களும், என்றுமே வற்றாத நதியான தாமிரபரணியும், அதன் கிளை ஆறுகளும் என்றுமே குன்றாத மீன் வளத்தை கொடுக்கும் முக்கடலும் என இயற்கை அன்னையின் அருளை ஒருங்கே பெற்றது கன்னியாகுமரி மாவட்டம். இதன் சிறப்புகளை தெரிந்து கொள்ள இந்த ஒரு கட்டுரை போதாது. எனினும் இதன் அழகை முடிந்த வரையில் சுருக்கித் தருகிறோம்.
மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்கள் பற்றி பார்ப்பதற்கு முன் இன்று நாம் காண இருப்பது குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோயில்.
நாகர்கோயில்

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் இதுவாகும். அன்றைய நாஞ்சில் நாட்டில் பெரிய நகரமாக இருந்த நாகர்கோவில் மாவட்டத்தின் மத்தியில் இருப்பதால் இந்த இடம் குமரி மாவட்டத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. அருள்மிகு நாகராஜா திருக்கோவில் அமைந்திருப்பதால் இவ்வூர் நாகர்கோவில் என்ற பெருமையுடன் மாவட்டத்தின் தலைநகராக விளங்குகிறது.
இவ்வூருக்கு நாஞ்சில் நாடு என்றும் பெயருண்டு.
வரலாறு
ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல நினைவுச் சின்னங்களும், வரலாற்று சுவடுகளும் நாகர்கோயிலில் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் வரலாற்றில் இந்த பகுதிகளை திருவிதாங்கூர் சமாஸ்தான மன்னர்கள் மாறி மாறி ஆட்சி செய்தது பல கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.
சுற்றுலா
நாகர்கோயிலில் சுற்றுலாவுக்கென பல இடங்கள் உள்ளன. அவற்றில் கோயில்கள் மிக முக்கிய அம்சமாகும்.
நாகராஜா கோயில்

கன்னியாகுமரியிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில், நாகர்கோயிலின் மையத்தில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் ஆவணித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தை உற்சவம் தேர்த்திருவிழா என விழாக்கள் கலைகட்டும். அந்நாள்களில் நகரமே கலைகட்டும்.
அழகம்மன் கோயில்
ஆடிமாத கடைசி செவ்வாய் அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கும். மேலும் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். ஆடி மாத விழாக்களில் சிறப்பாக இருக்கும் ஒரு கோயில்தான் அழகம்மன் கோயில்.
மேலும் அற்புத விநாயகர் கோயில் மற்றும் கிருஷ்ணன் கோயில் ஆகிய கோயில்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
புனித சவேரியார் பேராலயம்

புனித சவேரியார் பேராலயம் குமரி மாவட்டத்தில் உள்ள முதன்மை கத்தோலிக்க ஆலயமாகும். கோட்டாறு மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாக இது விளங்குகின்றது. 1544 இல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறித்தவ மதத்தை பரப்ப வந்த புனித சவேரியாரால் இந்த ஆலயம் சிறிப அளவில் நிறுவப்பட்டது. இன்று இது விரிவடைந்து பேராலய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஊரில் பெண்கள் கிறித்துவ கல்லூரி, இந்து கல்லூரி என்ற இரண்டு பெரிய கல்லூரிகளும், சில தனியார் கல்லூரிகளும் உள்ளன.
இவ்வூரிலிருந்து வெளியூர் செல்ல
இந்த ஊரில் குறிப்பிடும்படியாக இரண்டு பெரிய பேருந்து நிலையங்கள் உள்ளன.
அண்ணா பேருந்து நிலையம், மீனாட்சிபுரம்
குமரி மாவட்டத்திற்குள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் சில கிராமங்களுக்கும் இப்பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
வடசேரி பேருந்து நிலையம்

பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கும், மாவட்டத்திற்குள்ளும் இப்பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
இரயில் நிலையங்கள்
இங்கு சந்திப்பு ரயில் நிலையம் முதன்மை நிலையமாகும். நகர ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் வழியாக செல்லும் ரயில்கள் சென்று வருகின்றன.



Click it and Unblock the Notifications




