ஹரப்பா கலாச்சாரத்தின் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தின் தாயகமாக ஹரியானா மாற உள்ளது. சுமார் 5,000 ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி கலைப்பொருட்களை காட்சிப்படுத்தி ராக்கிகர்கியில் உலகின் மிகப்பெரிய ஹரப்பா கலாச்சார அருங்காட்சியகம் உருவாகவுள்ளது.
ஹரியானாவில் மறைந்திருக்கும் கடந்த காலம்
டெல்லியில் இருந்து சுமார் 150 கிமீ தொலைவில் ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த ராக்கிகர்ஹி கிராமம்.இந்த கிராமம் சிந்து சமவெளி நாகரிக காலத்தின் புகழ்பெற்ற தொல்லியல் தளமாகும்.
அது மட்டுமின்றி, இந்த இடம் காகர்-ஹக்ரா நதி சமவெளியில் அமைந்துள்ள பண்டைய நாகரிகத்தின் மிகப்பெரிய குடியிருப்புகளில் ஒன்றாகும். இருப்பினும் இந்த இடம் பல காலம் அகழ்வாராய்ச்சி செய்யப்படாமல் இருந்தது.
1963 இல் துவங்கிய அகழ்வாராய்ச்சி
1963 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் இந்திய தொல்லியல் துறை இங்கு அகழ்வாராய்ச்சி செய்யத் துவங்கியது. 1998 ஆம் ஆண்டு ஐம்பத்தாறு எலும்புக்கூடுகள் ராக்கிகர்ஹியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 36 எலும்புக்கூடுகள் ஷிண்டே மற்றும் அவரது குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டன. குன்று எண் 7 இன் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் எலும்புக்கூடுகள் சுமார் 7,000 ஆண்டுகள் பழமையானவை.
இரண்டு எலும்புக்கூடுகளின் கைகளிலும் ஷெல் வளையல்கள், செப்புக் கண்ணாடி மற்றும் அரை விலையுயர்ந்த கல் மணிகள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஷெல் வளையல்களின் இருப்பு ராக்கிகர்ஹி மக்கள் தொலைதூர இடங்களுடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்ததைக் குறிக்கிறது.
ஹரப்பா மற்றும் மொஹெஞ்சதாரோவை விட பழமையான நகரம்
ராக்கிகர்ஹியில் கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகம் கிமு 5,000 முதல் 5,500 காலத்திற்கு முந்தையது எனவும், 1920 களில் நிறுவப்பட்ட ஹரப்பா கிமு 4,000 ஆண்டுகள் பழமையான பெருநகரம்என்றும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து லோதல், தோலாவிரா, மொஹெஞ்சதாரோ மற்றும் காளிபங்கன் போன்ற பல நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் செம்பு, கார்னிலியன், அகேட், தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்களை உருக்கி,அவற்றிலிருந்து மணிகளால் மாலைகளைச் செய்து வந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.
மொஹெஞ்சதாரோ பரப்பளவு சுமார் 300 ஹெக்டேர் ஆகும், அதே சமயம் ராக்கிகர்ஹி 550 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் பரவியுள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆகவே ராக்கிகர்ஹி அனைத்திலும் பழமையான நகரமாக விளங்கி உலகத்தின் கவனத்தை ஈர்க்கப் போகிறது.
உலக மக்களின் கவனத்தைப் பெறப் போகும் அருங்காட்சியகம்
பழங்கால நாகரிகத்தின் ஆதாரங்களைப் பாதுகாக்கும் ராக்கிகர்ஹியில் காணப்படும் சான்றுகள், வர்த்தக பரிமாற்றத்தின் அடிப்படையில் ஹரப்பா மற்றும் மொஹெஞ்சதாரோவை விட இந்த இடம் மிகவும் செழிப்பானதாக இருந்தது என்பதைக் குறிக்கிறது.
ராக்கிகர்ஹியில் வரவிருக்கும் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் குறித்து மகிழ்ச்சியடைந்த உள்ளூர்வாசி அசோக், இந்தப் பகுதியை மேம்படுத்துவது, இது ஒரு விருப்பமான சுற்றுலாத் தலமாக மாறுவது மட்டுமல்லாமல், கிராம மக்களுக்கு வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என்று கூறினார்.
விரைவாகப் பணிகளை முடிக்கும்படி உத்தரவிட்ட முதல்வர்
அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை பார்வையிட்ட முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், பாதுகாக்கப்பட்ட இடத்தின் அகழ்வாராய்ச்சிப் பணிகளை விரைவாக முடிக்குமாறு இந்திய தொல்லியல் துறையின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் பட்டியலைத் தயாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.
மேலும், கிராமங்களில் இதுபோன்ற கலைப்பொருட்கள் இருந்தால், அவற்றின் பட்டியலையும் தயாரிக்க வேண்டும் என்றும், கிராம மக்களிடம் பேசி அவர்களிடம் இருக்கும் கலைப்பொருட்களை வாங்கி அவர்களின் பெயர்களோடு காட்சிக்கு வைக்கப்படும் என உறுதி அளித்து அருங்காட்சியகத்தில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
ஆகவே மிக விரைவில் நாம், உலக மக்களின் கவனத்தை ஈர்க்கப் போகிறோம். இந்த அருங்காட்சியகம் முழுமையாக நிறைவடைந்தவுடன் நாமும் கட்டாயம் இதைப் பார்வையிட வேண்டும்!