கிருஷ்ணப்ப நாயக் எனும் தளபதியால் 11ம் நூற்றான்டில் உருவாக்கப்பட்ட இந்த ஹாசன் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. உள்ளூர் குலதெய்வமான ஹாசனம்பா எனும் தெய்வத்தின் பெயரைக்கொண்டுள்ள இந்த நகரம் கர்நாடக மாநிலத்தின் கட்டிடக்கலைத் தலைநகரமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த மாவட்டம் முழுவதுமே ஹொய்சளர் காலத்து உன்னதங்களையும் சின்னங்களையும் காண முடிகிறது என்பது குறிப்படத்தக்கது. அக்காலத்திய ஹொய்சள சாம்ராஜ்யம் 11 - 14ம் நூற்றாண்டுகளில் துவார சமுத்ரத்தை தலைநகராக கொண்டு ஆளப்பட்டுள்ளது. அந்த நகரின் அடையாளங்களை இன்னமும் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹலேபீடு எனும் இடத்தில் பார்க்க முடிகிறது. அப்போதைய ஹொய்சள ஆட்சியாளர்கள் ஜைனத்தை பின்பற்றிய போதிலும் பல சிவன் கோயில்களை அவர்கள் ஆட்சியில் கட்டியுள்ளனர் என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாகும். ஹாசன் நகரம் மட்டுமல்ல, அந்த மாவட்டமும் மிக அழகான சுற்றுலாத்தளங்களை அதிக அளவில் கொண்டுள்ளது. வாருங்கள் அந்த மாவட்டத்துக்கு ஒரு அமைதியான பயணம் செல்வோம்.
வேகமாக வளர்ந்து வரும் நகரம்
தன் வரலாற்று அடையாளங்களுக்காக பிரசித்தமாக அறியப்படும் இந்த ஹாசன் நகரம் பல துறைகளிலும் படு வேகமாக முன்னேறிவருகிறது. இந்த நகரம் 26.5 ச.கி.மீ பரப்பளவில் அமைந்து 1,57,000 மக்கள் தொகையைக்கொண்டுள்ளது. ஹாசன் நகரம் பற்றிய இதர தகவல்கள் இந்த ஹாசன் நகரம் மலநாட் மற்றும் மைடான் பிரதேசத்தில் புவியியல் ரீதியாக அமைந்துள்ளது. ஆகவே இந்த மாவட்டம் முழுவதுமே அற்புதமான பருவநிலை காணப்படுகிறது. வெப்பமான காலை நேரம் மற்றும் குளுமையான குளிர்ச்சியான மாலை நேரத்தை ஹாசன் நகரம் பெற்றுள்ளது.
Dineshkannambadi
எங்குள்ளது
மாநிலத்தலைநகரமான பெங்களூரிலிருந்து 187 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் 79 % எழுத்தறிவு பெற்ற மக்கள் தொகையை கொண்டுள்ளது. மேலும் இது பெருமைமிக்க சில கல்வி நிறுவனங்களையும் பெற்றிருக்கிறது. மலநாட் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங், ஷீ தர்மஸ்தலா காலேஜ் ஆஃப் ஆயுர்வேதா போன்றவை இவற்றும் குறிப்பிடத்தக்கவை ஆகும். இங்கு பிரதேச மொழி கன்னடமாக இருந்த போதிலும் ஆங்கிலமும் இந்தியும் அதிக அளவில் உபயோகிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமான தொழிலாக விளங்கும் விவசாயம் இந்த பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றது.
Dineshkannambadi
எப்படி அடைவது
சாலை, ரயில் போன்ற போக்குவரத்து மார்க்கங்களின் மூலமாக மாநிலத்தின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் எளிதில் சென்றடையும் வகையில் ஹாசன் நகரம் அமைந்துள்ளது. அருகாமை விமானநிலையங்கள் மங்களூரில் 115 கி.மீ தூரத்திலும், பெங்களூரில் 187 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளன. எனவே இந்த நகருக்கு விஜயம் செய்வது சுலபமாகவே உள்ளது.
Nanda ramesh
ஹாசன் சுற்றுலா அம்சங்கள்
பேலூர், ஹலேபீடு, சிரவணபெலகொலா மற்றும் கோரூர் அணை போன்றவை இங்குள்ள சில பிரசித்தமான சுற்றுலாத்தலங்களாகும். ஹாசன் நகரத்தில் பல வகையான உயர்தர தங்குமிடங்களும் மூன்று நட்சத்திர மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் மிகுந்திருப்பதால் பயணிகளுக்கு வசதிகுறைவு ஏதுமில்லை. கர்நாடக மாநிலத்தின் உன்னதமான வரலாற்றுப்பின்னணி மற்றும் பாரம்பரியம் போன்றவற்றை அறியும் ஆர்வம் உங்களுக்கு இருப்பின் கண்டிப்பாக நீங்கள் ஒரு முறை இந்த ஹாசன் நகருக்கு பயணம் செய்துதான் ஆகவேண்டும். அதற்கு இப்போதிருந்தே திட்டமிடுங்கள்.
Likhith N.P
ஒம்பத்து குட்டா
ஹாசன் நகருக்கு வருகை தரும் பயணிகள் மலைஏற்றத்தில் விருப்பம் இருந்தால் இந்த ஒம்பத்து குட்டா (ஒன்பது மலை) என்ற மலைஸ்தலத்துக்கு விஜயம் செய்யலாம். இந்த சிகரத்தில் ஒன்பது உச்சிகள் போன்ற மேடுகள் அடுத்தடுத்து தென்படுவதால் இந்த பெயர் வந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 971 மீட்டர் உயரத்தில் இந்த சிகரம் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள உயரமான சிகரங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. மேலும் இந்த மலையானது ‘கப்பினலே வனப்பாதுகாப்பு சரகம்', ‘ஷிரடி ஷிரிஸ்லா வனப்பாதுகாப்பு சரகம்' மற்றும் ‘பாலூர் வனப்பாதுகாப்பு சரகம்' போன்ற வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த மலைஸ்தலத்துக்கு வருகை தரும் பயணிகள் உள்ளூர் மக்களிடம் வழி கேட்கும் போது முர்கல் குட்டா என்ற உள்ளூர் பெயரை சொல்லி கேட்பது நல்லது. இது கப்பினல்லே வனப்பகுதிக்குள் உள்ள குண்டியா சோதனைச்சாவடியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது. ஒம்பத்து குட்டா அடிவாரம் வரை ஜீப் மூலமாக பயணிகள் செல்லலாம். அப்படி பயணிக்கும்போது காட்டு மிருகங்களான சிறுத்தை, குரைக்கும் மான், கரசி, புலி, காட்டு யானை, காட்டெருமை போன்றவற்றை பார்க்கவும் வாய்ப்புண்டு. இந்த ஜீப் பாதை கப்பிஹோலே ஆற்றின் ஓரமாகவே செல்கிறது. இங்கு டைவிங் எனப்படும் ‘சாகச கயிறு குதிப்பு' தளங்களும் உள்ளன.
நுக்கேஹள்ளி
கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்துக்கு பயணம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் கண்டிப்பாக இந்த நுக்கேஹள்ளி எனப்படும் புகழ் பெற்ற ஆன்மீகத்தலத்துக்கு விஜயம் செய்வது நல்லது. இந்த புண்ணிய நகரம் இங்குள்ள லக்ஷ்மி நரசிம்மர் கோயிலுக்கும் சதாசிவ கோயிலுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. இந்தக்கோயில்கள் சோப்புப்பாறை எனும் விசேஷமான வழவழப்பு கற்களால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடத்தில் நுப்பள்ளி மற்றும் நுக்குபள்ளி என்றும் அழைக்கப்படும் இந்த நுக்கேஹள்ளி நகரம் ஹாசன் நகரத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் திப்தூர் - சன்னராயபட்னா மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. நுக்கேஹள்ளியில் அமைந்துள்ள இந்த இரண்டு கோயில்களுமே ஹொய்சள ஆட்சியில் வீர சோமேஷ்வர மன்னரின் தளபதியான பொம்மன்ன தண்டநாயகாவால் கட்டுவிக்கப்பட்டுள்ளன.1246ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள லட்சுமி நரசிம்மர் கோயில் திரிகூட அமைப்பையும் (மூன்று கோபுரங்கள்), அழகிய சிற்பங்கள் நிறைந்த பூஜைக்கூடத்தையும் கொண்டுள்ளது. கோயில் கட்டுமானம் முடிந்தபிறகு ஒரு பெரிய மண்டபமும் இங்கு கட்டப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. மையத்திலிலுள்ள மூடப்பட்ட மண்டபம் மூன்று சன்னதிகளையும் 9 மேடைப்பாதைகளையும் கொண்டுள்ளது. இந்தக்கோயிலின் விசேஷ அம்சம் நின்ற நிலையின் காட்சியளிக்கும் அற்புதமான பார்வதி தேவி சிலை ஆகும்.சதாசிவ கோயில் ஏககூட கோயில் அமைப்புடன் நகர பாணி கோபுரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் கர்ப்பகிருகத்தில் ஒரு பெரிய சிவலிங்கம் காணப்படுகிறது. கலையம்சத்தோடு வடிக்கப்பட்டுள்ள ஒரு நந்தி சிலை கல் சாளரங்கள் சுவரில் பதிக்கப்பட்ட ஒரு சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் வளாகத்தில் இரண்டு கணேச சிலைகளையும் பக்தர்கள் காணலாம். ஒன்று தேவி சன்னதியின் வாசலிலும் மற்றொன்று லிங்க கருவறையிலும் அமைந்துள்ளன.
சிரவணபெலகொலா
சிரவணபெலகொலா எனும் சொல்லுக்கு ‘வெள்ளைத்தடாக முனிவர்' என்று பொருள் சொல்லலாம். இந்த சிலை உலகத்திலேயே மிகப்பெரிய ஒற்றைக்கல் சிற்பமாக புகழ்பெற்றுள்ளது. இந்த சிலை தவிர சிரவணபெலகொலா நகரம் பல வரலாற்று காட்சிகளுக்குள் பயணிகளை அழைத்துச்செல்லும்படியான சின்னங்களையும் கொண்டுள்ளது. சந்திரகுப்த மௌரிய மன்னர் பல ஆண்டுகள் போரில் ஈடுபட்டும் ராஜ்ய பரிபாலனம் செய்தும் மனம் வெறுத்து இறுதியில் மனச்சாந்தியையும் அமைதியையும் நாடி இந்த சிரவணபெலகொலா ஸ்தலத்தில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. தென்னிந்தியாவில் ஜைனம் தழைத்தோங்குவதற்கு அவரின் பங்கு முக்கியமாக சொல்லப்படுகிறது. சிரவணபெலகொலா பல வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களையும் அதிக அளவில் ஈர்க்கிறது. இங்கு 600 - 1830 ம் ஆண்டுகள் வரையிலான கல்வெட்டுக்குறிப்புகள் ஏராளம் காணப்படுகின்றன. கங்க, ஹொய்சள மற்றும் உடையார் ராஜ வம்சங்களை பற்றிய சுமார் 800 கல்வெட்டு குறிப்புகள் இங்கு காணக்கிடைக்கின்றன. இந்த புராதன வரலாற்று ஆவணங்கள் நமக்கு அக்கால இந்திய நாகரிகம் ஆட்சி மற்றும் இதர தகவல்களை அளிக்கின்றன. சிரவணபெலகொலாவுக்கு அருகில் சன்னராயப்பட்டணா பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சன்னராயப்பட்டணாவுக்கு செல்வதற்கு பெங்களூர் மற்றும் மைசூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. அங்கிருந்து உள்ளூர் போக்குவரத்து மூலம் இந்த வரலாற்று சுற்றுலாஸ்தலத்தை சுற்றிப்பார்க்கலாம்.