பெரும்பாலான இந்திய மக்களின் வாழ்வில் ரயில் பயணம் ஒரு அன்றாட அங்கமாகவே மாறிவிட்டது. கல்வி கற்க, வேலைக்கு செல்ல, வீட்டிற்கு செல்ல, சுற்றுலாச் செல்ல என நாள்தோறும் கோடிக்கணக்கான பயணிகள் இந்திய ரயில்வேயில் பயணம் செய்கிறார்கள். ஆனால் நாள்தோறும் அவர்கள் சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதெற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவது போல தான், இந்திய ரயில்வே ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த செயலில் புகர் செய்தால் போதும்! உங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்! அந்த செயலி மூலம் என்னென்ன பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்? எப்படி அந்த செயலி பயன்படுத்துவது என்று இங்கே காண்போம்!
பயணிகள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள்
நாம் பெரும்பாலான நேரங்களில் ரயில் பயணங்களைப் பற்றி பெருமையாக பேசினாலும், சில நேரங்களில் கசப்பான அனுபவங்களையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. திருட்டு, கடத்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளிட்ட குற்ற சம்பவங்களும், கோச்களில் தண்ணீர் இல்லாமல் போவது, டாய்லெட் சுத்தமாக இல்லாமல் இருப்பது என பல பிரச்சனைகளை பயணிகள் அன்றாடம் சந்தித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Rail MADAD செயலி
ஓடும் ரயிலில் பிரச்சினை சந்திக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டுமென்று நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவது இல்லை. அதனாலேயே பெரும்பாலான பிரச்சினைகளை நாம் அப்படியே விட்டுவிடுகிறோம். ஆனால் இனி அப்படி விட வேண்டாம். ஓடும் ரயிலில் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் Rail MADAD (Mobile Application for Desired Assistance During travel) என்ற செயலியை டவுன்லோட் செய்து அந்த செயலியில் புகார் அளித்துவிட்டால் போதும். சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு உடனே புகார் சென்றுவிடும்.
Rail Madad செயலி மூலம் இரயில் பயணத்தின் போது பயணிகள் சந்திக்கும் இன்னல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். Menu on Rails செயலி மூலம் ரயிலில் கிடைக்கும் உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானம் போன்றவற்றின் விலையை சரிபார்க்கலாம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்ட செயலி
ரயில் பயணிகளுக்கு பயனுள்ள வகையில் இந்தியன் ரயில்வே துறை Menu on Rails, Rail MADAD என்ற இரண்டு மொபைல் செயலியை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகபடுத்தியுள்ளது! இந்த செயலி மூலம் இரயில் பயணத்தின் போது பயணிகள் சந்திக்கும் இன்னல்கள் தொடர்பாக புகார்களை தெரிவிக்க இந்திய ரயில்வே துறை இந்த முறையை அறிமுகம் செய்துள்ளது. ரயில் பயணிகளின் பயண அனுபவத்தை சுலபமாக்குவதற்கான ஒரு முயற்சியாகவே இந்த செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உடனடி தீர்வு
இப்படியாக ஒவ்வொரு கோட்டத்திற்கு இந்த தளத்தில் வரும் புகார்களுக்கு தீர்வு காண்பதற்காக பிரத்தியேகமாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரு புகார் பதிவாகிவிட்டால் அந்த புகார் குறித்த தீர்வு கிடைக்கும் வரை அந்த புகாரின் ஸ்டேட்டஸை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். பயணிகள் புகார் அளித்தவுடன் அந்த புகாருக்கான எண் ஒதுக்கப்படும் அந்த புகாரின் நிலை குறித்து அந்த எண்ணை பயன்படுத்தி ஆன்லைன் மூலமே தெரிந்து கொள்ள முடியும்.
மருத்துவ உதவி
இது அதற்கு மட்டுமல்ல ஒருவேளை ரயிலில் பயணிக்கும் பயணிக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ திடீரென அவரது உடல்நிலை யாரும் எதிர்பாராத வகையில் சிரியஸ் ஆகிவிட்டாலோ உடனடியாக இதில் புகார் அளிக்கப்படும் பட்சத்தில் அடுத்த ரயில்நிலையத்தில் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி,ஆம்புலன்ஸ் உதவி உள்ளிட்டவைற்றையும் பெற்றுக்கொள்ள முடியும். இன்று இந்த ஆப் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக தான் இருக்கிறது. இனி இந்த செயலியைப் பயன்படுத்தி நீங்கள் தொந்தரவின்றி ரயில் பயணம் செய்யலாம்.
சாதாரண போனிலும் புகார் செய்யலாம்
ஆன்லைன் ஆப் அல்லது வெப்சைட் பயன்படுத்த முடியாதவர்கள் அல்லது தெரியாதவர்கள் தங்கள் செல்போனில் 139 என்ற ரயில்வே . உதவி எண்ணிற்கு போன் செய்தும் உங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இதற்கு ஸ்மார்ட் போன்கள் தான் இருக்க வேண்டும் என்று இல்லை சாதாரண செல்போனிலிருந்தும் கூட புகாரளிக்கலாம்.