அஸ்ஸாம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இது இந்தியாவின் பன்முகத்தன்மையின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இயற்க்கை வளம் செரிந்த இம்மாநிலத்தின் கலாசாரம் தனித்துவமானது. பசுமை போர்த்தியது போன்று காட்சியளிக்கும் ஹிமாலய மலைகள், சீறிப்பாயும் பிரம்மப்புத்திரா ஆறு, மணம் வீசும் தேயிலைத்தோட்டங்கள், வகை வகையான மிருகங்கள் வாழும் காடுகள் என அஸ்ஸாம் அள்ளித்தரும் அற்புதங்களுக்கு அளவே இல்லை. அம்மாநிலத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற காசிரங்கா தேசியபூங்கா இயற்கையின் அதிசயங்கள் நிரம்பிய இடம். வாருங்கள் அங்கே என்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.
காசிரங்கா தேசிய பூங்கா :
காண்டாமிருகங்களை பற்றி கேள்வியுற்ற ஜார்ஜ் கர்சான் என்னும் ஆங்கிலேய துரையின் மனைவி காண்டாமிருகங்களை காண வந்து ஒன்றை கூட பார்க்க முடியாமல் போனதால் தன் கணவரிடம் முறையிடவே அவர் அழிந்து வரும் உயிரனமான அவற்றை பாதுகாக்க உத்தரவிடுகிறார். இப்படி 1904ஆம் துவங்கப்பட்டது தான் இந்த காசிரங்கா தேசிய பூங்கா.
உலக புராதன சின்னங்களில் ஒன்றான இந்த பூங்கா, உலகில் பாதுகாக்கப்பட்ட இடங்களிலேயே வைத்து புலிகள் அதிக அடர்த்தியாக வாழு இடமாக உள்ளது. இதன் காரணமாக 2006இல் இந்த பூங்கா புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டது. இங்கிருக்கும் உயரமான புட்களில் இவை பதுங்கிக்கொள்வதால் புலிகளை கணக்கெடுப்பது பெரும் சவாலாக இங்கே உள்ளது.
தவிர உலகில் இருக்கும் மூன்றில் ஒரு பங்கு ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் இங்கே வாழ்கின்றன. இந்த காண்டாமிருகங்களின் கொம்பிலிருந்து ஆண்மைக்குறைவுக்கான மருந்து தயாரிக்க முடியும் என நம்பப்படுவதால் வேட்டையர்களால் அதிகம் வேட்டையாடப்பட்டு அழிந்து போகும் நிலையில் இருந்த காண்டாமிருகங்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக பெருகியுள்ளது.
யானைகள், ராஜ நாகங்கள், காட்டு எருமைகள், மான்கள், 100க்கும் மேற்ப்பட்ட பறவை வகைகள் இப்பூங்காவினுள் வாழ்கின்றன. 'Birdslife International' என்னும் அமைப்பு உலகில் பறவைகள் வாழும் முக்கியமான இடங்களில் ஒன்றாக இதனை குறிப்பிடுகிறது. மேலும் அருகி வரும் பிணந்தின்னி கழுகளும் இப்பூங்காவில் வாழ்கின்றன.
மிகப்பெரிதாக வளரக்கூடிய பாம்பு வகைகளான ஆசிய மலைப்பாம்பு, ராக் பைதான், அதிக விஷம் கொண்ட ராஜ நாகங்கள் போன்ற பாம்பு வகைகளும் இங்கே வாழ்கின்றன.
மிருகங்கள் அழிந்து போவதை தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் இப்பூங்கா ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. பூங்காவை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகள் யானை சவாரி அல்லது ஜீப் மூலம் பூங்காவை சுற்றிப்பார்க்கலாம். ஏப்ரல் முதல் அக்டோபர் இறுதிவரை மழைகாலத்தில் இப்பூங்கா மூடப்படுகிறது.
மொத்தத்தில் வனவிலங்குகளை உங்களுக்கு பிடிக்குமென்றாலோ, அவற்றை புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உடையவராகவோ இருந்தால் காசிரங்கா தேசிய பூங்கா உங்கள் சொர்க்கம்.
எப்படி அடையலாம்?
அஸ்ஸாம் மற்ற மாநிலங்களுடன் விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. குவஹாட்டி நகரத்தில் ‘லோகப்பிரியா கோபிநாத் போர்டோலோய் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்' விமானநிலையம் அமைந்துள்ளது.
இங்கிருந்து எல்லா இந்திய பெருநகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன. ரயில் மற்றும் சாலை மார்க்கமாக நாட்டின் இதர பகுதிகளுடன் அஸ்ஸாம் மாநிலம் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.