அமைதியான சூழலில், குயில், குருவிகளின் சத்தம் கேட்க, பூச்சிகள் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்க, சலசலக்கும் நீரோடும் பாதையில் மீன் பிடித்து மகிழ்வது மேலை நாடுகளில் பொழுதுபோக்கு. ஆனால் இந்தியாவில் இதுபோன்று வெகு சிலரே அனுபவிக்கின்றனர். உண்மையில் மீன் பிடித்தல் என்பது எவ்வளவு மகிழ்வான விசயம். நினைத்து பாருங்கள் 90ஸ் கிட்ஸ்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும். நம்ம ஊர் கம்மாய் கரைகளில், கிணறுகளில் ஒற்றை ரூபாய் தூண்டிலில் புழுக்களை - அப்போதெல்லாம் மண்ணை தோண்டினால் புழுக்கள் வரும் - வைத்து, ஒருவேளை அது கிடைக்கவில்லை என்றால் சோற்றுப் பருக்கையை, சேமியாவை வைத்து அதை கவ்வி இழுத்து தூண்டிலில் அகப்பட்டுக்கொள்ளும் மீனை பிடித்து அதை வறுத்து சாப்பிடுவதே பலரது பொழுது போக்காகும். இப்போது பல கிணறுகள் மூடப்பட்ட பிறகு, பல கண்மாய்கள் வறண்டுவிட்ட பிறகு அதை நினைத்து பார்க்க மட்டுமே முடிகிறது. ஆனால் இந்தியாவில் சில இடங்களில் மீன் பிடித்து மகிழ்வதற்காகவே மீன் பிடி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன இந்த இடங்களுக்கெல்லாம் நீங்கள் சென்றிருக்கிறீர்களா?
சரி.. கேரள மாநிலத்தில் உள்ள மீன் பிடி முகாம்களையும், அவற்றுக்கு எப்படி, எப்போது செல்லலாம் என்பதையும், அருகாமையிலுள்ள இடங்களைப் பற்றியும் இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.
கேரள மாநிலத்தில் இருக்கும் மீன் பிடி முகாம்கள்
ஆலப்புழா, கொச்சி, குமரகம், கோவளம், மராரிகுளம், செராய் பீச், அம்பலவாயல், பூவார், பேக்கல் ஆகிய இடங்கள் மீன் பிடி பொழுது போக்குக்கு ஏற்ற இடங்களாக அறியப்படுகிறது. மேலும் வலியத்துறா, நீண்டகரா ஆகிய இடங்களிலும் மீன்பிடி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மீன்பிடிப்பதற்காக இவ்வளவு தூரம் பயணிக்கவேண்டுமா என்பது பலரது கேள்வியாக இருக்கலாம். ஆனால் இந்தந்த இடங்களுக்கு செல்பவர்கள், அருகாமையில் இதுபோன்ற மீன்பிடி தலங்கள் இருந்தால் மறக்காமல் சென்று மகிழ்ந்துவிட்டு வாருங்கள்.
VIkramjit Kakati
ஆலப்புழா
உப்பங்கழிகள் நிறைந்த கீழை தேச வெனிஸ் என்று புகழப்படும் ஒரு இடம் ஆலப்புழா ஆகும். மனம் மயக்கும் உப்பங் கழிகளும், நீர் ஓடை களும், கண்ணை கவரும் காட்சிகளும் ஆலப்புழாவை இந்தியாவில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய முதல் 5 இடங்களுக்குள் கொண்டு வந்து விடும். ஓடைகளுக்கு இடையிடையே பச்சை பசேலென்ற காட்சியை மனம் விரும்பும் வண்ணம் நம் உணர்வுகளை எங்கெங்கோ இழுத்துச் சென்று காற்றில் மயங்கச் செய்யும் அழகு கொண்டது இந்த ஆலப்புழா.
ஒரு முழுமையான திட்டமிடலில் விடுமுறையை ஆலப்புழாவில், உப்பங்கழி இயற்கைக்காட்சிகள், படகுப்பயணங்கள் மற்றும் இயற்கை எழிலை ரசித்து திரும்புவது நிச்சயம் உங்களுக்கு புத்துணர்வூட்டும் சுற்றுலா அனுபவமாக இருக்கும். பளபளப்பான கடற்கரைகள், சாந்தம் தவழும் ஏரிகள் ஆகியவற்றுடன் மெய்மறக்க வைக்கும் படகு வீடு பயணங்கள் ஆகியவையும் இங்கு உங்களுக்காக காத்திருக்கின்றன.
மீன்பிடி முகாம்கள்
இவ்விடத்தில் மீன் பிடி முகாம் அமைத்து மீன் பிடித்து பொழுதுபோக்கலாம்.
மக்கள் கூறுவதென்ன?
இந்த இடத்துக்கு வரும் மக்களுக்கு இங்குள்ள காயலில் பொழுதுபோக்குவது மிகவும் பிடித்திருக்கிறது. இங்குள்ள சுங்கம் கடையும், கருணாகரன் அருங்காட்சியகமும் பிடித்திருப்பதாக சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலரோ இங்கு பீச்சில் பொழுது போக்குவதையே விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
மெராரி பீச்சில் சுற்றுவது, காலார நடப்பது பிடித்திருப்பதாக சிலர் தெரிவித்திருந்தனர். ஒருவர் தனது வாழ்நாளில் கட்டாயம் ஒருமுறை வந்து பார்க்கவேண்டிய அற்புத இடம் என்று நிறைய பேர் கூறியுள்ளனர்.
இங்கு கிடைக்கும் தெருக்கரை உணவுகள் மிகவும் சுவையானதாக சிலர் கூறுகின்றனர். இது சொர்க்கம் மாதிரி இருப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரங்களில் பிரமாதமான கொண்டாட்டங்கள் இல்லை என ஒருவர் தெரிவித்துள்ளார்.
எப்போது எப்படி
நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட பருவத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆலெப்பி' நகருக்கு விஜயம் செய்யலாம். தங்கள் விருப்பம் மற்றும் பொருளாதார சக்திக்கேற்றபடி, ரயில் அல்லது பேருந்து அல்லது விமான மார்க்கமாக பயணிகள் ஆலெப்பி' நகருக்கு விஜயம் செய்யலாம். விமானம் மூலம் கொச்சி விமானநிலையத்தை அடைந்து அங்கிருந்து ஆலெப்பி வரலாம். எல்லா முக்கிய அண்டை மாநில நகரங்களிலிருந்தும் நேரடி ரயில் சேவைகளும்,பேருந்து சேவைகளும் ஆலெப்பி' நகருக்கு இயக்கப்படுவது ஒரு விசேஷமான அம்சமாகும். தேசிய நெடுஞ்சாலை ‘எண்: 47' ஆலெப்பி வழியே செல்வதால் சாலை வசதிகள் மற்றும் பேருந்து இணைப்புகளுக்கும் எந்த குறையுமில்லை.
vibitha vijay
கொச்சி
கொச்சிக்கு பயணம் செய்யும் பயணிகளை ஆச்சரியப்படுத்தும் மற்றொரு விஷயம் இங்கு காணப்படும் எண்ணற்ற உணவகங்களாகும். அனைத்து திசைகளையும் சேர்ந்த மக்களின் சுவை ரசனைகளை இவை பூர்த்தி செய்கின்றன. உலகில் எந்தப் பகுதியிலிருந்து வந்தாலும் சரி அவர்கள் ஊர் உணவுவகைகள் கொச்சியில் இல்லாமல் போகாது. ஆனால், கொச்சியின் உள்ளூர் உணவு வகைகளை சுவைப்பது ஒரு தனி அனுபவம் எனலாம். இங்குள்ள தனித்தன்மையான சைவ மற்றும் அசைவ உணவுமுறைகள் நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையுடையவை. குறிப்பாக வாழை இலையில் மூடி சமைக்கப்பட்ட மீன் உணவு இங்கு பிரசித்தம். கொச்சிக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் எந்த ஒரு சுற்றுலாப்பயணியும் ஏமாற்றத்துடன் திரும்பாத வகையில் இங்கு வரலாற்று ஸ்தலங்கள், ஆன்மீக மையங்கள், அருங்காட்சியகங்கள், குழந்தைகள் பூங்கா மற்றும் முக்கியமாக பலவகை ‘மால்' கள் எனப்படும் அங்காடி வளாகங்கள் போன்றவை நிறைந்துள்ளன.
மீன்பிடி முகாம்கள்
இங்கு இருக்கும் மீன் பிடி பொழுது போக்கு தளங்களில் மீன் பிடித்து கொண்டாடி மகிழுங்கள்
மக்கள் கூறுவதென்ன
இங்கு வரும் பெரும்பாலானோர் கொச்சி கோட்டையை பார்ப்பதற்காகவே இன்னொரு முறை வரலாம் என்கிறார்கள். எர்ணாகுளத்திலிருந்து கோட்டைக்கு செல்வதற்கு பெஃர்ரி படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அதன் கட்டணம் இந்த பயணத்துக்கு மிக உரியதாக இருக்கிறது. நிச்சயமாக நாங்கள் மகிழ்ந்திருந்தோம் என்று சிலர் கூறியுள்ளார்கள்.
கொச்சியில் இருக்கும் படகு வீடு மிக முக்கியமாக பார்க்கவேண்டிய இடமாகும். அங்கு தங்கியிருந்து கொச்சியின் அழகை ரசிப்பதும் சிறப்பு.
இங்குள்ள உள்ளூர் விடுதிகள் சிறப்பானவையாக இருக்கின்றன. தங்குவதற்கு போதிய வசதிகளுடன் இருப்பதாக சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் காண வேண்டியவை - கதக்களி மையம், மட்டஞ்சேரி மாளிகை, வொண்டர்லா கேளிக்கை பூங்கா
எப்போது எப்படி
கொச்சி மாநகரம் விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச நகரங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. பிரபலமான சுற்றுலாத்தலமாக உள்ளதால் பிரயாணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்துகொள்வது நல்லது. வருடமுழுதுமே இனிமையான பருவநிலை நிலவுவதால் கொச்சிப்பகுதிக்கு விரும்பும்போது பயணம் மேற்கொள்ளலாம். இருப்பினும் மே மாதத்தில் கோடையின் வெப்பம் அதிகமாக இருக்குமென்பதையும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மழையின் அளவு அதிகமாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்வது நல்லது. பொதுவாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இடைப்பட்ட பருவங்களில் கேரளாவுக்கு பயணம் செய்வது சிறந்தது. கொச்சியில் தங்குமிடங்களும், விடுதிகளும் ஏராளம் இருப்பதால் பயணிகள் தங்கள் பணவசதிக்கேற்ப எளிமையாகவோ சொகுசாகவோ தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
Hans A. Rosbach
மாராரிக்குளம்
ஆலப்புழா நகரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அழகிய கிராமமான மாராரிக்குளம், மஞ்சள் மணற்பரப்புடன் எழில் ஓவியமாய் காட்சியளிக்கும் அதன் மாராரி கடற்கரைக்காக மிகவும் புகழ்பெற்றது. மாராரிக்குளம் கிராமத்து மக்கள் இன்றும் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பாரம்பரிய வாழ்க்கை முறையையே கடைப்பிடித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சனல் தயாரிக்கும் தொழிலிலேயே ஈடுபடுவதால் மாராரிக்குளம் கிராமம், கயிறு மற்றும் சனல் தயாரிப்புக்காக பிரத்தியேகமாக அறியப்படுகிறது.
மீன் பிடி மையம்
மீனவர்கள் அதிகமாக வாழும் பகுதியான இங்கு நீங்கள் மீனவர்களோடு மீனவர்களாக கடலில் படகுப் பயணம் செய்து அவர்களின் போராட்டங்களையும், சந்தோஷத்தையும் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பை பெறுவதோடு, உங்களுக்கு அது ஒரு வித்தியாசமான சுற்றுலா அனுபவமாகவும் இருக்கும்.
மாராரிக்குளம் கிராமத்தின் முக்கிய சுற்றுலா மையமாக செயின்ட் தாமஸ் அவர்களால் நிறுவப்பட்ட கொக்கமங்கலம் தேவாலயம் அறியப்படுகிறது. கன்னி மேரிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த தேவாலயம் தும்போலி எனும் கடற்கரை நகரத்தில் அமைந்திருக்கிறது.
தவறவிடக்கூடாத இடங்கள்
கட்டிடக் கலைக்கு பெயர்போன சிவன் கோயில், சேர்தலா கார்த்தியேணி கோயில், காஞ்சிகுங்க்லரா கோயில் போன்ற ஹிந்துக் கோயில்களையும் நீங்கள் மாராரிக்குளம் சுற்றுலா வரும் போது பார்க்கலாம். மேலும் பயணிகள் மாராரிக்குளம் கடல் பகுதியில் கட்டுமரத்தில் பயணம் செய்வது, ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதோடு, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டு திளைக்கலாம்.
மேலும் காணவேண்டிய இடங்கள் - கொக்கமங்களம் செயின்ட் அப்போஸ்த்துலே தேவாலயம், அரூர், அருந்தன்கால், பூச்சக்கால், பணவல்லி, வெலோர்வட்டம் போன்ற இடங்களுக்கும் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.
எப்படி செல்வது
கொச்சி நகரிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மாராரிக்குளம் கிராமத்தை சாலை வழியாக சுலபமாக அடைந்து விட முடியும். மேலும் மாராரிக்குளம் கிராமத்துக்கு நிறைய பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
nborun