பச்சை பசேலென்று பரந்து விரிந்த பரப்புகளையும், வெள்ளியை உருக்கி விட்டார் போல அதன் ஊடே ஓடும் வெண்ணிற நதிகளையும் காணும் யாவருக்கும் கேரளம் பிடித்துப்போகும். ஒரு மாநிலம் முழுவதுமே இப்படி என்றால், கேட்கவா வேண்டும். திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுலா பகுதிகள், காணும் இடமெல்லாம் பச்சை நிறங்கள், புல்வெளிகள், காடுகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், சலசல நீரோடைகள், அழகியல் கொஞ்சும் பறவைகள், அழகழகான விலங்குகள், அச்சுறுத்தும் மாமிச பச்சிணிகள் என கேரளா அனைத்து உயிரினங்களையும் அரவணைத்து பாதுகாத்து இந்தியாவின் மிக அழகான மாநிலமாக திகழ்கிறது. சரி... அது ஏன் கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிறது தெரியுமா.. ? தொடர்ந்து படிங்க.
கேரளம்
தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளம், அரபிக் கடல் மற்றும் நீண்டு உயர்ந்த மேற்கு தொடர்ச்சி மலைகளின் நடுவே அழகிய தோற்றத்துடன் அமைந்துள்ளது. இங்குள்ள யாவருக்குமே வறட்சி என்ற ஒன்று கற்பனையிலும் யோசித்திருக்கவாய்ப்பில்லை. அந்த அளவுக்கு செழித்து காணப்படும் கேரளத்துக்கு கடவுளின் தேசம் என்று பெயர் வைத்ததில் என்ன தவறு இருக்கமுடியும்.
இயற்கையே சிறந்த கட்டுமானர்
நம் உலகில் எத்தனையே சிறந்த கட்டுமானங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு பாராட்டப்பட்டவை. பாராட்டப்படுபவை. ஆனால் இயற்கையே சில சமயங்களில் சிறந்த கட்டுமானங்களை தன்னகத்தே கொண்டிருக்கும். கேரளமும் அப்படி ஒரு இடம்தான். தென்னை மரங்களையும், கடற்கரை மலைகளையும் இணைத்து வைத்த ஓவியத்தை வரைந்துள்ளது இயற்கை. இப்படி பட்ட ஓவியத்தை கண்முன்னே காணும் எவரும் கேரளம் கடவுளின் பூமி என்பதை மறுக்கமாட்டார்கள்.. ஏன்.. நீங்கள் மறுக்கப்போகிறீர்களா என்ன?
கேரளத்தின் அழகிய நீர்வீழ்ச்சிகள்
அட்யாங்பாறை நீர்வீழ்ச்சி, அரிப்பாறை நீர்வீழ்ச்சி, அருவிக்குழி நீர்வீழ்ச்சி, ஆட்டுக்காடு நீர்வீழச்சி, சேத்தாலயம் நீர்வீழ்ச்சி, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, செய்யப்பாறை நீர்வீழ்ச்சி, கலக்காயம் நீர்வீழ்ச்சி, மடம்மாகுளம் நீர்வீழ்ச்சி, கீழார்குத்து நீர்வீழ்ச்சி, மாங்காயம், மீன்முட்டி, பாலருவி, மீன் வள்ளம், சென்டினல் பாறை, வெள்ளரிமலை, பவர் ஹவுஸ் நீர்வீழ்ச்சி, துஸாராகிரி நீர்வீழ்ச்சி என எக்கச்சக்க நீர்வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது கேரளம்.
இத்தனை நீர்வீழ்ச்சிகளையும், அது அமைந்துள்ள இடங்களையும் சேர்த்து காணும்போது இயற்கையின் படைப்பில் நாமெல்லாம் சிறிய துகள்களைப் போலல்லவா என்பதை உணரச் செய்கிறது. காடும் காடு சார் வாழ்க்கையும் எவ்வளவு சிறப்பானது. நாம் ஏன் மனிதர்களாக பிறந்தோம்.. இயற்கையை நேசிக்கும் மற்ற விலங்குகளாக பிறந்திருந்தால் எப்படி இருக்கும், உலகிலேயே யாருமில்லாமல் நாம் மட்டும் காடுகளில் வாழ்ந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற அளப்பரிய கற்பனைகளையும் நம் கண்ணில் தோன்ற செய்கிறது இந்த கேரளம். இப்போது சொல்லுங்கள்.. இது கடவுளின் தேசம் தானே..
கடற்கரைகள்
மராரி கடற்கரை, ஆலப்புழா கடற்கரை, விழிஞ்சம் கடற்கரை, கோவளம் கடற்கரை, பேக்கல் கடற்கரை, கப்பாடு கடற்கரை, பைப்பூர் கடற்கரை, சௌரா கடற்கரை, முப்பிலாங்காடு கடற்கரை, சங்குமுகம் கடற்கரை, வர்க்கலா, கோவளம் கடற்கரை, சிரை கடற்கரை, நட்டிக்கா கடற்கரை, அந்தகாரணாழி கடற்கரை, நீந்தக்கரா கடற்கரை உள்ளிட்ட பல கடற்கரைகள் கேரள மாநிலத்தில் இருக்கின்றன. இவை அனைத்துமே அரபிக் கடலின் அழகை பிரதிபலித்து நிலப்பரப்புக்கு எடுத்துக்காட்டுகின்றன. அரபிக்கடலின் காற்றில் மிதந்து வரும் இயற்கை கேரளத்தோடு ஒரு ஓரமாக ஓரவஞ்சனையுடன் ஒட்டிக்கொள்கிறது. மிஞ்சி எஞ்சிய அழகும் கூட மேற்கு தொடர்ச்சி மலையில் மேம்போக்காக போகிறது. தமிழகத்துக்குதான் வஞ்சனையே தவிர்த்து கேரளம் இயற்கையின் கடைக்குட்டிபோல், மொத்த பாசத்தையும் அங்கேயே பொழிகிறது மழையாக....
இதையெல்லாம் கொண்டு நாம் ஏன் சொல்லக்கூடாது.. கேரளம் கடவுளின் தேசம் என்று...
இன்னும் இருக்கு ஆயிரம் காரணங்கள்
இதெல்லாம் போக இன்னமும் இருக்கு ஆயிரம் காரணங்கள்... அவற்றில் சில..
இது தென்னை மரங்களின் தாயகம். பத்து கோடி மரங்களையாவது காணமுடியும். இயற்கையை வரையச் சொன்னால் சிறுபிள்ளைக்கூட வீட்டின் அருகே தென்னை மரத்தையும் சேர்த்தே வரையும். அந்த அளவுக்கு தென்னை மரம் இயற்கையுடன் இணைந்து நம் மனதில் பதிந்துள்ளது. கேரளத்தின் எந்த ஒரு பகுதியையும் தென்னை மரத்தையும் பிரித்து பார்க்கமுடியாது. எங்கேயும் தென்னை மரம் இருக்கிறது.
நீர்பின்புலம்.. ஆங்கிலத்தில் பேக் வாட்டர் என்று அழைக்கப்படும் ஏரி, குளங்கள் எல்லாமே கேரளத்தின் வரம். அவைதான் உலகெங்கிலும் இருந்து மக்களை கேரளத்தை நோக்கி படையெடுக்க வைக்கின்றது. கேரளம் முழுவதும் நீர் வழிப் பயணம் சிறப்பாக இருக்கிறது. கடலிலும் சரி, நீர் நிலைகளிலும் சரி, மற்றவர்கள் படகு பயணம் செல்ல மிகவும் பிரியப்படுகிறார்கள். அந்த அளவுக்கு கேரளத்துடன் படகும் நீரும் சேர்ந்துள்ளது. இதிலும் ஒரு படி மேலே போய், படகு வீட்டில் சொகுசு வாழ்க்கையையும் இங்கு வாழலாம்.
மலைகளில் ஏறும் சாகசப் பயணங்கள். சீசனுக்கு ஏற்ப இடமும் மலையுமே மாறும் தவிர. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் யாரும் மலையேற்றத்தை தவிர்ப்பதே இல்லை. அவர்களின் மலையேற்றமும் சாகசங்களும் அவர்கள் யார் என்பதை கேரளத்துக்கும் கேரளம் யார் என்பதை மக்களுக்கும் உணர்த்துவதாக அமைகிறது.
இத்தனை அமைந்தும் கேரளம் கடவுளின் தேசம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால்... மன்னித்துவிடுங்கள்.. இயற்கை மீது ரசனை இல்லாதவர் நீங்கள் என்றுதான் கொள்ளவேண்டும். ஒருவேளை கேரளம் உங்களையும் ஈர்த்தால், ஓரிரு மாதங்கள் பொறுத்திருங்கள்.. சிலிர்த்துக்கொண்டு மேலெழும்பி வரும் கேரளம்.. நாம் நினைத்து நினைத்து மகிழும் அளவுக்கு சுற்றுலா இன்பத்தை அள்ளித்தரும்.. எத்தனை துன்பம் வந்தாலும், அடுத்தவரை மகிழ்விப்பதுதானே கடவுளின் குணம்.. அப்படியானால் இத்தனை மழை வெள்ளங்களையும் தாண்டி நம்மை மகிழ்விக்க தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு இடம்.. நிச்சயம் கடவுளின் தேசம்தானே....