கிஷன்கர் நகரம் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் ஆங்கிலேய ஆட்சியின் போது ஜோத்பூர் அரசின் தலைநகரமாக விளங்கியது. அப்போது ஜோத்பூர் அரசின் இளவரசராக இருந்த கிஷன் சிங் அவர்களின் நினைவாகத்தான் இந்த நகரம் கிஷங்கர் என்று அழைக்கப்படுகிறது. கிஷன்நகர் நகரம் 1840 முதல் 1879-ஆம் ஆண்டு வரை ப்ரித்வி சிங் மகாராஜாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் பிறகு அவருடைய மகன் சர்துல் சிங் மகாராஜா சிறந்த முறையில் கிஷன்நகர் நகரை ஆண்டு வந்தார். இந்த நகரில் தற்போது கூட ப்ரித்வி சிங் மகாராஜாவின் சந்ததியை சேர்ந்த ப்ரிராஜ் சிங்ஜி மகாராஜா வாழ்ந்து வருகிறார். இப்படிபட்ட ஊருக்கு ஒரு சுற்றுலா சென்றால் எப்படி இருக்கும்.. வாருங்கள் சென்று பார்க்கலாம்.
கிஷன்கர் நகரத்தின் சுற்றுலா அம்சங்கள்
கிஷன்கரில் உள்ள பிரபலமான சுற்றுலா ஸ்தலங்களாக ஃபூல் மஹால் அரண்மனை, ரூபன்கர் கோட்டை, கிஷன்கர் கோட்டை போன்றவை அறியப்படுகின்றன. கிஷன்கர் நகரின் புகழுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக திகழ்வது கிஷன்கர் பாணி ஓவியங்களாகும்.
பச்சை நிறமும் இயற்கை காட்சிகளும்
அதுவும் 'பனி தனி' எனும் தாசி குலத்தை சேர்ந்த பெண்ணின் அங்க லாவண்யங்கள் கிஷன்கர் ஓவியங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பாங்கு கலா ரசிகர்களின் கண்களை ஒரு நொடி கூட இமைக்க அனுமதிக்காது. இந்த வகை ஓவியங்களில் பச்சை வண்ணங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதுடன், பெரும்பாலும் இயற்கை காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
சலவைக்கல் நகரம்
கிஷன்கர் நகரம் இன்று சலவைக்கல் நகரம் என்ற அடைமொழியில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. அதோடு உலகிலேயே நவ கிரகங்களுக்கும் தனித்தனி சன்னதியுடன் ஒரு கோயில் கிஷன்கர் நகரில்தான் கட்டப்பட்டுள்ளது.
பயண தகவல்கள்
கிஷன்கர் நகரிலிருந்து ஜெய்ப்பூரின் சங்கனேர் விமான நிலையம் 135 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அதோடு கிஷன் நகருக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாக 27 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் அஜ்மீர் ரயில் நிலையமே அறியப்படுகிறது. மேலும் ஆக்ரா, பிக்கனேர், ஜோத்பூர், ஜெய்சல்மேர், பரத்பூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கிஷன்கர் நகருக்கு இயக்கப்படுகின்றன.
திருவிழாக்கள்
கிஷன்கர் நகரில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கங்காவ்ர் எனும் திருவிழா மிகவும் ஆடம்பரமாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடப்படும். இதுதவிர கிஷன்கர் நகரில் கொண்டாடப்படும் உற்சாகமிக்க திருவிழாக்களாக ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகள் அறியப்படுகின்றன. இந்த நகரத்துக்கு சுற்றுலா வருவதற்கு அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்கள் பொருத்தமானதாக இருக்கும்.
கோட்டை
ஜெய்சல்மேர் பல்ஜில் அமைந்திருக்கும் கிஷன்கர் கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாகும். இந்தக் கோட்டை இந்தியா மற்றும் பாகிஸ்தானை இணைக்கும் சாலையில் இருப்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. கிஷன்கர் கோட்டையை பாகிஸ்தானிய இராணுவம் ஹர்ஸ் எனும் பழங்குடியினரின் உதவியுடன் கைப்பற்றிய போது இந்தக் கோட்டை பிரபலமடைய தொடங்கியது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிஷன்கர் கோட்டை இன்றும் இந்திய கட்டிடக் கலைக்கு சிறந்த சாட்சியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.