'ஹனிமூன்' என்ற சொல்... இல்லற வாழ்வில் இணைந்த நம் ஒவ்வொருவருக்கும் விதவிதமான அனுபவத்தையும், இந்த ஜீவன் இருக்கும் வரை, அது சார்ந்த நிகழ்வுகள் நினைவில் இருந்து அழியாத ஒரு ஓவியம்.
ஐய்யோ... அத ஏன் சார் நீங்கள் நினைவுப்படுத்துறீங்கனு என்னை முறைக்கிறது புரியுது. சரி விஷயத்துக்கு வருகிறேன். கடந்த 1800 இறுதி வரை, 'ஹனிமூன்' என்ற சொல், உண்மையில் திருமணத்திற்கு பிந்தைய உல்லாச பயணத்தை குறிக்கவில்லை என்றே தெரிகிறது.

நம் முன்னோர்கள் வாழ்ந்த திருமண வாழ்வுடன், இன்றைய தலைமுறையினரின் திருமணத்தை ஒப்பிடுவது அவ்வளவு சரியாக இருக்காது... அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இந்த கட்டுரை, அது சார்ந்த விஷயம் குறித்து பேச போவது இல்லை.
இன்றைய காலகட்டத்தில், கல்யாணம் நடப்பதென்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது. குறிப்பாக, திருமணம் நடக்காதவர்களின் வேதனையை, ரீல்ஸ், மீம்ஸ் உலா வருவதை பார்த்தால் 'சிடு மூஞ்சில்' கூட, மெல்லிய புன்னகை வந்துவி டும். அந்தளவுக்கு காமெடி தலைவிரித்தாடும் இன்றைய ரீல்ஸ், மீம்ஸ்களில்.

திருமணம், அதன் பின் தன் துணையை புரிய தேவைப்படும் தனிமை ஆகியவை விலைமதிப்பற்றவை. திருமணம் முடிந்ததும், கணவன், மனைவி ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு நான் குறிப்பிட்டது போல இருவருக்கும் தனிமை தேவை. அதற்கு தான் தேனிலவு என்னும் பழக்கத்தை நம்மவர்கள் வைத்தார்களா? என்று தெரியவில்லை. ஆனால், திருமண வாழ்வுக்கு புரிதல் மிகவும் அவசியம்.

பணம் இருப்பவர்கள், திரைப்படங்களில் வருவது போல திருமணம் முடிந்ததும் வெளிநாடுகளுக்கு போய் என்ஜாய் பண்ணுவதை நாம் பார்த்து இருப்போம். ஆனால், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தம்பதியர்கள், புரிதல் ஏற்பட போக வேண்டும் என நினைத்தாலும், அவர்களின் எண்ணத்தை பட்ஜெட் என்ற ஒன்று தவிடு பொடியாக்கும் அல்லவா...!
அப்படி பட்ஜெட் பற்றி சிந்திக்கும் நபர்களுக்கு, தென்னிந்தியாவில் குறைந்த பட்ஜெட்டில், உங்கள் துணை பற்றி புரிந்து கொள்ள அழகிய இடங்கள் இருக்கிறது என்பதையும் நீங்கள் அறிய ஒரு வாய்ப்பு. வாங்க போலாம். உங்களுக்கே இது அடுக்குமா? இதை சொல்வதற்கு ஏன் இப்படி எங்களை இந்த நேரத்தில டென்ஷன் படுத்துறீங்க பாஸ்...
சரி சரி கோபப்படாதீங்க... உங்களை எல்லாம் இப்படி சொன்னாதான் படிப்பீங்க... அதான் கொஞ்சம் மசாலா தடவ வேண்டியது இருக்கு.

ஏற்காடு, தமிழ்நாடு
ஷெவராய் மலைப்பகுதியில் அமைந்துள்ளது ஏற்காடு. இதமான காலநிலை மற்றும் அழகிய நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது. மழைக்காலம், அதன் பசுமையான மலைகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. இந்த இடங்களுக்கு செல்லும் தம்பதிகளுக்கு அமைதியான சூழலை அமைத்து கொடுக்கிறது.
ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா மற்றும் கிள்ளியூர் நீர்வீழ்ச்சி ஆகியவை முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பகோடா பாயிண்ட் போன்ற பல்வேறு காட்சிகள் பள்ளத்தாக்கின் அற்புதமான காட்சிகளை, உங்கள் துணையுடன் கைகளை கோர்த்தவாறு நடந்து சென்று பார்வையிடலாம்.
வயநாடு, கேரளா
வயநாடு, அதன் வளமான பல்லுயிர் மற்றும் இயற்கை அழகுடன், மற்றொரு சிறந்த இடமாகும். மழை, அதன் காடுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் வனவிலங்குகளுக்கு புத்துயிர் அளிக்கிறது. தேனிலவு கொண்டாடுபவர்கள், இந்த இடத்தை தேர்வு செய்தால், அங்குள்ளஅ மீன்முட்டி மற்றும் சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சிகளை பார்வையிடலாம்.
எடக்கல் குகைகளை, அவற்றின் பழங்கால கல்வெட்டுகளுடன் ஆராயலாம். அது மட்டுமின்றி, பூக்கோடு ஏரியில் படகு சவாரி செய்யலாம். வயநாடு வனவிலங்கு சரணாலயத்தில், யானைகள், மான்கள் மற்றும் பிற வனவிலங்குகளை காணும் வாய்ப்பையும் வழங்குகிறது.
கூர்க், கர்நாடகா
குடகு என்றும் அழைக்கப்படும் கூர்க், காபி தோட்டங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் இனிமையான வானிலைக்கு பெயர் பெற்ற அழகிய மலைவாசஸ்தலம். மழைக்காலம் கூர்க்கின் அழகை மேலும் பசுமையாக காட்சிப்படுத்துகிறது.
அபே நீர்வீழ்ச்சி மற்றும் இருப்பு நீர்வீழ்ச்சி போன்ற நீர்வீழ்ச்சிகள், உங்கள் காதுகளில் நீர் விழும் கடும் சப்தத்துடன் ஒருவித ஓசையை உள்ளே புகுத்தும். தம்பதிகள், இங்குள்ள மசாலா மற்றும் காபி தோட்டங்களை ஆராயலாம். பாரபோல் ஆற்றில், படகில் பயணம் செய்யலாம். துபாரே யானைகள் முகாமில் அமைதியான சூழலை நிச்சயமாக அனுபவிக்கலாம்.
மூணாறு, கேரளா
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மூணாறு. அங்கு பரந்து விரிந்த தேயிலை தோட்டங்கள், மூடுபனி மூடிய மலைகள் மற்றும் அமைதியான நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது. பருவமழையின் போது, மூணாரின் பசுமை இன்னும் துடிப்பாக மாறும். அதுமட்டுமின்றி, அங்குள்ள ஏராளமான நீர்வீழ்ச்சிகள் மிக அற்புதமானவை.
தேயிலைத் தோட்டங்கள் வழியாக, நிதானமாக நடந்து செல்லவும், அழிந்து வரும் நீலகிரி வரையாடுகளை, உங்கள் பாட்டனருடன் பார்க்கலாம். எரவிகுளம் தேசியப் பூங்காவிற்குச் செல்லவும், டாப் ஸ்டேஷனில் இருந்து அரிய காட்சிகளை ஆச்சரியம், ஒரு வித பயத்துடன் பார்க்கவும் முடியும்.
தற்போது 'மான்சூன்' காலம் என்பதால், தென்னிந்தியாவில் மேற்குறிப்பிட்ட இப்பகுதிகளை பசுமையான, துடிப்பான சொர்க்கமாகவும் மாற்றுகிறது. இது, காதல் மற்றும் சாகசத்தை விரும்பும் தம்பதியருக்கு தேனிலவுக்கு ஏற்ற நேரமாக அமைகிறது.
இயற்கை அழகு, அமைதி மற்றும் தனித்துவமான அனுபவங்களின் சரியானதை வாரி வழங்கும் தென்னிந்தியாவில் உள்ள இந்த நான்கு இடங்கள், பருவமழை காலத்தில் சுற்றி பார்க்க ஏற்ற பட்ஜெட் ஃபிரண்ட்லி ஸ்பாட்ஸ் ஆகும்.



Click it and Unblock the Notifications






