அரியலூர் உடையவர் தீயனூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள இந்த இடம், ஜமதக்னீஸ்வரரின் கோட்டையாகும். அவர் இங்கு ஆட்சி செய்து வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த கோயிலில் தாயார் அமிர்தாம்பிகை ஆவார். இதன் தீர்த்தம் அக்னி தீர்த்தமாகும். 1000 வருடங்கள் வரை பழமையானதாக கருதப்படும் இந்த கோயிலுக்கு சென்றால் குழந்தையின்மை நீங்கி குழந்தை பிறக்குமாம். வாருங்கள் செல்வோம். அப்படியே அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களையும் பார்த்துவிட்டு வரலாம்.

திருவிழா
இந்த ஊரில் அமைந்துள்ள ஜமதக்னீஸ்வரர் இயல்பிலேயே லிங்கமாக காட்சிதருபவர். இந்த கோயில் சிவன் கோயில் என்பதால் இயற்கையாகவே பிரதோச நாள்களில் மிகச் சிறப்பானதாக இருக்கும். மேலும் இந்த கோயிலில் கொண்டாடப்படும் மற்றொரு திருவிழா மகாசிவராத்திரி ஆகும்.

நடைதிறப்பு
சோழர்களால் 1000 வருடங்களுக்கு முன்னதாக கட்டப்பட்டதாக நம்பப்பட்டு வரும் இந்த கோயில், காலை 6 மணி முதல், இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இடையில் காலை பத்து மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடை சாற்றப்படுகிறது.

வழிபாடு
வயிற்று பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், கண்களில் பிரச்னை இருப்பவர்கள் அனைவரும் அந்தந்த நோய்களிலிருந்து விடுபட இங்குள்ள மூலவரை வழிபடுகின்றனர். இங்குள்ள மூலவரை வணங்கினால் குழந்தை இன்மை, திருமணத் தடை ஆகியன நீங்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.

நேர்த்திக்கடன்
பல்வேறு நோய்களிலிருந்து விடுபட விரும்புபவர்கள் இங்கு வருவதாக நேர்ச்சை செய்கின்றனர். இதனால் தங்களுக்கு இந்த இறைவனின் அருள் கிடைப்பதாக நம்புகின்றனர் பக்தர்கள். அப்படி வேண்டியவற்றை நிறைவேற்றினால், நேர்த்திக்கடனாக இந்த கோயிலுக்கு வந்து சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

புராணக்கதை
இந்த ஊர் புராணகாலத்தில் வெப்பம் மிகுந்த பிரதேசமாக இருந்ததால் தீயனூர் என்று அழைக்கப்பட்டது. இங்கு வில்வமரங்கள் நிறைய இருந்தன. இதனால் வில்வாரண்யம் என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் ஜமதக்னி எனும் முனிவர் ஒருவர் சிவலிங்கம் ஒன்றை உருவாக்கினார். இதே இடத்தில்தான் தற்போது இந்த கோயில் அமைந்துள்ளது. தோஷம் போக இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

சிறப்பு
இந்த கோயிலின் மூலவர் ஜமதக்னீஸ்வர் ஆவார். இந்த கோயிலின் ஒரு பகுதியில் கருங்கல்லால் செய்யப்பட்டுள்ள பீடத்தில் அமைந்துள்ளார் அவர். இந்த பீடம் பலகை போன்ற அமைப்பில் சதுரவடிவில் அமைந்துள்ளது. இதன் மேல் சிவலிங்கமாக இருக்கிறார் இறைவன். இந்த கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

எப்படி செல்வது?
அரியலூரிலிருந்து 28கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஊர். உடையவர் தீயனூர் என்று அழைக்கப்படும் இந்த ஊருக்கு புராண காலத்தில் வில்வாரண்யம் என்று பெயர். அரியலூரிலிருந்து வாரனவாசி, பளுவூர், பொய்யூர் வழியாகவும், அயனாத்தூர், தெலூர் வழியாகவும் இரண்டு வழித்தடங்களில் இந்த இடத்தை அடையலாம்.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
இது சிறிய ஊர் என்பதால், அருகில் அந்த அளவுக்கு பெரிய சுற்றுலாத் தளங்கள் குறிப்பிடும் படியாக இல்லை. அரியலூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்களுக்கு சென்றுவரலாம். இந்த ஊரின் அருகில் சில கோயில்கள் உள்ளன. அருள்மிகு கட்டழகர் கோயில், பெத்தனாச்சி அம்மன் கோயில், கடம்பூர் சிவ கோயில், கோடமங்கலம் கோயில் என சிறப்பான கோயில்கள் உள்ளன.



Click it and Unblock the Notifications



