வருடம் முழுவதும் உடலை சிலிர்க்கச் செய்யும் சீரான வானிலை, சுற்றுலா, தேன்நிலவு, சாகசம், ஓய்வு என அனைத்து விதமான பயணங்களுக்கும் ஏற்ற மாநிலம், பொதுவாகவே இனிமையான வானிலை இதனால் தான் இந்த மாநிலம் மட்டும் இந்தியா மட்டுமின்றி பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளாலும் அதிகளவில் ஈர்க்கப்படுகிறது. கேரளா... மூன்று புவியியல் பகுதிகளாக பிரிந்துள்ள இங்கு தொடர்ச்சி மலை, மலைகளின் கீழே சரியும் மேட்டு நிலங்கள், பள்ளத்தாக்குடன் இணைந்த பசுமை வயல்கள், வற்றாது ஓடும் கால்வாய்களும், ஆறுகளும், ஒரு பகுதி முழுக்க கடற்கரைகள் காணப்படுகின்றன. மலைத் தொடருக்கும், கடற்கறைகளுக்கும் பெயர்பெற்ற கேரளத்துல சுற்றுலா செல்ல வேறெந்த இடம் புதுசா இருக்கு என தெரியாதவர்களுக்கு அங்குள்ள அழகிய தீவுகளை அறிமுகம் செய்து வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். வாங்க, கேரளாவுள புகழ்பெற்ற தீவுகளுக்கு எல்லாம் ஒரு பயணம் மேற்கொள்வோம்.

கேரளத்து தீவுகள்
கேரளாவில் பத்திரமண்ணல், வெல்லிங்டன் ஐலேண்ட், தர்மதம் ஐலேண்ட், மன்ரோ ஐலேண்ட், பொன்னும்துருத்து என்னும் தீவுகள் மிகவும் பிரசிதிபெற்ற தலங்களாக காட்சியளிக்கின்றன. மேலும், பல முறை கேரளாவிற்கு சுற்றுலா சென்றவர்களுக்கு புதுவிதமான அனுபவங்களையும் இந்தத் தீவுகள் அளிக்கும் வல்லமை கொண்டுள்ளது.
Saisumanth532

பத்திரமண்ணல்
கோச்சியில் இருந்து சுமார் 53 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குமரகம். சுற்றலாவிற்கு பெயர்பெற்ற குமரகத்திற்கு அருகிலேயே உள்ள பத்திரமண்ணல் எனும் சிறிய தீவு அனந்த பத்மநாபன் தோப்பு அல்லது பத்திர தோப்பு என்றும் அழைக்கப்படுகிறது. வேம்பநாட் ஏரித்தேக்கத்தில் 10 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட தீவுத்திட்டாக காணப்படும் இது கோட்டயம் மற்றும் ஆலெப்பி மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. குமரகத்திலிருந்து ஃபெர்ரி எனப்படும் சொகுசு மோட்டார் படகு மூலம் இந்த தீவுக்கு செல்லலாம். குமரகம் உப்பங்கழிகளின் வழியாக படகில் பத்திரமண்ணல் நோக்கி பயணிக்கும் அனுபவம் ஒன்றே பயணிகளை மயங்கவைப்பதற்கு போதுமானதாக உள்ளது. யாருமே வசிக்காத இந்த வசீகரத்தீவு உங்களை சாந்தப்படுத்தி புத்துணர்ச்சியூட்டும் இயல்புடன் காட்சியளிக்கிறது. நாலாபுறமும் நீரால் சூழப்பட்டுள்ள இந்த சிறு தீவு புகைப்படக்கலையில் ஆர்வமுள்ளவர்கள் மிகவும் விரும்பும் இயற்கைக்காட்சிகளை ஏராளமாக கொண்டுள்ளது.
Navaneeth Krishnan S

வெல்லிங்டன் ஐலேண்ட்
கொச்சிக்கு மிக அருகில் எர்ணாகுளத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வெல்லிங்டன் ஐலேண்ட். கொச்சி மண்டலத்தின் கீழ் வரும் பகுதிகளில் இந்த வெலிங்டன் தீவும் ஒன்றாகும். இது கொச்சி ஏரியின் மீதே செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தீவுப்பகுதியாகும். ஏரியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மண்ணைக்கொண்டு இத்தீவு எழுப்பப்பட்டுள்ளது. கொச்சியின் பிரதான துறைமுக தலமாக இதுவுள்ளது. இந்தியக் கடற்படையின் கொச்சித்தளமானது இத்தீவின் கணிசமான பகுதியை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. வெல்லிங்டன் ஐலேண்ட் பகுதியில் பல பிரபலமான சொகுசு ஹோட்டல்கள் உள்ளன. ரம்மியமான இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள தாஜ் மலபார் ஹோட்டல் கடற்கரை வரை நீளும் ஒரு வித்தியாசமான நீச்சல் குளத்தையும் பெற்றுள்ளது.
Jaseem Hamza

தர்மதம் ஐலேண்ட்
கண்ணூரில் இருந்து சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவில் தர்மதம் நகர நிலப்பகுதியிலிருந்து 100 மீட்டர் தள்ளி அமைந்துள்ளது தர்மதம் ஐலேண்ட். 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீவுத்திட்டு தென்னை மரங்கள் மற்றும் பசுமையான தாவரச்செழிப்புடன் காட்சியளிக்கிறது. பசுமைத்தீவு என்ற பொருத்தமான பெயரிலும் இது அழைக்கப்படுகிறது. தர்மதம் தீவு தளசேரியிலிருந்து ஒரு சில கிலோ மீட்டர்கள் தூரத்திலுள்ள தர்மதம் நகரப்பகுதியில் அமைந்துள்ளது. முழுப்பிலான்காட் கடற்கரையிலிருந்து பார்த்தால் இந்த தீவு ஒரு வண்ண ஓவியம் போன்று காட்சியளிக்கிறது. பிறந்த குழந்தை போன்ற இயற்கையின் தூய்மையுடன் ஒளிரும் இந்த தீவுப்பகுதிக்கு அலை இறக்கம் உள்ள நேரத்தில் நீரில் நடந்தே சென்றடைய முடியும். குறிப்பாக, இந்தத் தீவு தனியாருக்கு சொந்தமானது என்பதால் தீவுக்கு செல்வதற்கு முன் அனுமதி பெறவேண்டியது கட்டாயம்.
Shagil Kannur

மன்ரோ ஐலேண்ட்
கொல்லத்தில் இருந்து குந்தரா வழியாக சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் மன்ரோ ஐலேண்ட் அமைந்துள்ளத. மன்ரோ துருத் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த மன்ரோ தீவுப்பகுதி எட்டு குட்டி தீவுகளை உள்ளடக்கியுள்ளது. மன்ரோ தீவுப்பகுதியானது அதிகமான சுற்றுலாப்பயணிகளால் விரும்பப்படும் ஒரு ரம்மியமான சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. மூலசந்தாரா கோவில் மற்றும் கல்லுவிலா கோவில் என்ற இரண்டு கோவில்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. 1878ம் ஆண்டில் கட்டப்பட்ட பள்ளியம் துருத் எனும் புராதன தேவாலயமும் தன் அமைதி தவழும் அழகால் பார்வையாளர்களை ஈர்க்கிறது. அஷ்டமுடி நீர்த்தேக்கம் கல்லடா ஆற்றோடு சங்கமிக்கும் இடத்தில் இந்த தீவுப்பகுதி அமைந்துள்ளது. விடுமுறைச் சுற்றுலாவுக்கு மிகவும் ஏற்ற இந்த தீவுப் பகுதியாக பறவை வேடிக்கை, மீன்படித்தல் மற்றும் இயற்கைக்காட்சி ரசிப்பு போன்ற பொழுது போக்குகளில் பயணிகள் ஈடுபடலாம்.
Arunsunilkollam

பொன்னும்துருத்து தீவு
வர்கலாவில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பொன்னும்துருத்து தீவு. கேரளாவில் முக்கியமான சுற்றுலாத் தலமான இந்த தீவுத் தலத்தை படகுகள் மூலம் சென்றடையலாம். இந்த தீவு கோல்டன் ஐலேண்ட் அல்லது தங்கத்தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீவில் துருத்து ஷேத்திரம் என்று பிரசித்தமாக அழைக்கப்படும் சிவன் பார்வதி கோவில் அமைந்துள்ளது. ஒரு நூற்றாண்டு கால பழமையையுடைய இந்த கோவிலுக்கு சொந்தமான தீவுதான் இந்த தங்கத்தீவு என்பதும் குறிப்பிடத்தக்கது. பசுமையான தென்னந்தோப்புகளுடன் நாலாபுறமும் நீர் சூழ்ந்திருக்க கனவுச்சோலை போன்று காட்சியளிக்கும் இந்த தீவு பயணிகளை மெய் மறக்க வைக்கும் எழிலுடன் வீற்றுள்ளது. இயற்கை ரசிகர்கள் ஒரு நாள் பயணமாக செல்வதற்கு ஏற்ற தனித்தன்மை வாய்ந்த அழகுத்தீவாகவும் இது உள்ளது.
Ikroos



Click it and Unblock the Notifications





