திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ள திருவெள்ளறை என்ற ஊரில் அமைந்துள்ளது பெருமாளுக்கான திருத்தலம். திருப் புண்டரீகாக்ஷ பெருமாள் கோவில் என அழைக்கப்படும் ஒரு பெரிய அழகான கோவில் இது. இக்கோவில், வெண் பாறைகளான குன்றின் மேல் அமைந்துள்ளதால், இத்தலத்திற்கு வேதகிரி என்ற பெயரும் உண்டு. இத்திருத்தலம் ஸ்ரீரங்கம் கோவிலை விட பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவதால், ஆதி வெள்ளறை என்றும் அறியப்படுகிறது. இதன் தனிச் சிறப்பே கோவில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் என்னவெல்லாம் சிறப்பம்சங்களை எல்லாம் இக்கோவிலில் உள்ளது என பார்க்கலாம் வாங்க.

கோவில்சிறப்பு
அருள்மிகு புண்டரீகாட்சன் கோவில் பிற கோவில்களைப் போல் அல்லாமல் கோட்டை போல் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இத்தலம் நான்காவது தலமாகும். இத்தலத்தின் பெரிய பிரகாரத்தின் தென் பகுதியில் கல்லினால் ஆன அறைகள் உள்ளது. இங்கிருந்து ஒலி எழுப்பினால் கோவில் முழுவதும் அந்த சத்தம் எதிரொலிக்கும்.
Mohan Krishnan

கோவில் அமைப்பு
புண்டரீகாட்சன் பெருமாளைத் தரிசிக்க தலத்தின் நுழைவு வாயிலில் 18 படிகளை கடக்க வேண்டும். இந்த 18 படிகளும் 18 கீதை அத்தியாயங்களை குறிக்கிறது. கோவில் நுழைவு வாயிலைக் கடந்தால் அதன் பின் பலிப்பீடம் உள்ளது. பலி பீடத்தை சேவித்து ஐந்து படிகளை கடக்க வேண்டும். இந்த 5 படிகளும் பஞ்சபூதங்களாக வரையருக்கப்படுகிறது. அதன் பின் நாழிக் கேட்டான் வாசலை அடைய வேண்டும்.
Ssriram mt

கருவறைக்கு இரண்டு வழிகள்
கருவறைக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி தட்சிணாயனம், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை திறந்திருக்கும். இரண்டாவது வழி உத்தராயணம், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை திறந்திருக்கும்.
Ssriram mt

தலவரலாறு
வெள்ளை நிற பாறைக் குன்றின் மீது இக்கோவில் உள்ளதால் வெள்ளறை என அழைக்கப்பட்டு பின் திருவெள்ளறை என பெயர்பெற்றது. புண்டசீகன் என்னும் யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அத்து அதில் வளர்ந்துவந்த துளசி இலையால் பெருமாளையும், செண்பகவல்லி அம்மையாரையும் வழிபட்டு வந்தார். ஒருநாள் யோகியின் வழிபாட்டில் மகிழ்ச்சியடைந்த பெருமாள் அவருக்கு தரிசனம் கொடுக்கவே இத்தலத்தில் தோன்றினார். அதனாலேயே இத்தல பெருமாள் புண்டரீகாட்சப் பெருமாள் என திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்.
Ssriram mt

வழிபாடு
நினைத்த நல்ல காரியங்கள் நிறைவேற பலிபீடு திருமஞ்சனம் செய்வதாக பிரார்த்தனை செய்து காரியம் நிறைவேறிய பின் பலிபீட திருமஞ்சனம் செய்து பெருமாளுக்கு, பலி பீடத்திற்கும் பொங்கல் பிரசாதம் தளிகை அமுது செய்து நேர்த்திக்கடன் செலுத்தலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தங்களில் தீர்த்தமாடி, பின்னர் பெருமாளுக்கு பிரசாதமிட்டு வழிபட்டால் குழந்தை பாக்கியம் கைகூடும் என்பது தல நம்பிக்கையாகும்.
Ssriram mt

திருவிழாக்கள்
சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமி, ஆடி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திரத்தில் ஜேஸ்டாபிஷேகம், ஆவணி மாத ஸ்ரீஜெயந்திவீதியடி புறப்பாடு, ஐப்பசியில் பெருமாள், தாயார் பிரம்மோற்சவம், திருக்கார்த்திகை, வைகுண்டஏகாதசி உள்ளிட்ட பெருமாளுக்கு உகந்த நாட்களில் வெகு விமர்சையாக விழா கொண்டாடப்படுகிறது.
Ssriram mt

நடைதிறப்பு
அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோவில் நடை காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிக்கும். மதியம் நடை சாற்றும் முன் நடைபெரும் உச்சிப் பூஜையைக் காண பெருமாள் பக்தர்கள் அதிகளவில் கூடுவது வழக்கம்.
Ssriram mt

எப்படிச் செல்ல வேண்டும் ?
திருச்சி மாநகரில் இருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இக்கோவில். திருச்சியில் இருந்து சென்னை- தேனி நெடுஞ்சாலையில் ஸ்ரீரங்கம், நொச்சியம், மண்ணச்சநல்லூர் கடந்தால் திருவெள்ளறையை அடையலாம். திருச்சி, துறையூர், திருபட்டூர் என சுற்றுவட்டாரத்தில் இருந்து இக்கோவிலுக்கு வர பேருந்துவசதிகள் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
Nsmohan



Click it and Unblock the Notifications



