ஆந்திர பிரதேசம் என்றாலே திருப்பதி, விசாணப்பட்டிணம், விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளே முதலில் நம் நினைவுக்கு வரும். காரணம், இப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன. ஆந்திராவை நோக்கி ஏராளமான பக்தர்களையும், பயணிகளையும் ஈர்க்கும் முக்கிய சுற்றுலாத்தலம் மற்றும் ஆன்மிக தலமாக விலங்குவது திருப்பதி ஏழுமலையான் கோவில். இதற்கு அடுத்தபடியாக இருப்பது விஜயநகர மன்னர்களால் 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீரபத்ரர் ஆலயம். கடற்கரைகள் நிறைந்த விசாகப்பட்டினம். இதையெல்லாம் தவிர்த்து ஆந்திராவில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலம் என்றால் அது அருங்காட்சியகங்களே. இங்குள்ள அருங்காட்சியகத்தில் என்னவெல்லாம் உள்ளது என தெரிந்துகொள்வோமா.
டிரைபல் மியூசியம்
அரக்கு பள்ளத்தாக்கில் நிறுவப்பட்டிருக்கும் டிரைபல் மியூசியம் பழங்குடியினரின் வாழ்க்கை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்த வட்டாரத்தில் வாழும் பழங்குடியினரின் அமைதியும், ஒற்றுமையும் மிக்க வாழ்வு முறையை சுற்றுலாப் பயணிகள் தெளிவாக தெரிந்து கொள்வார்கள். இந்த அருங்காட்சியகத்தில் பழங்குடி மக்களின் களிமண் சிலைகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதோடு பழங்குடி மக்கள் எவ்வாறு தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு இந்த சிலைகள் பேருதவியாக இருக்கும். டிரைபல் மியூசியத்தில் சிலைகள் உட்பட அனைத்து கைவினைப் பொருட்களும் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது பழங்குடி மக்களின் சடங்குகள் போன்றவற்றோடு சேர்த்து அவர்களையும் நாம் ஆழமாக தெரிந்து கொள்ள பெருவாய்ப்பாக அமைந்திருக்கின்றன. இங்கு நகைகள், வேட்டை ஆயுதங்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் வரலாற்று சிறப்புகள் ஏதுமில்லையென்றாலும் டிரைபல் மியூசியம் அரக்கு பள்ளத்தாக்கின் வரலாற்றுக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது.
Ravi teja
கர்னூல் மியூசியம்
கர்னூல் மியூசியம் என்றழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் இந்திய தொல்லியல் துறையால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கர்னூல் பிரதேசத்திலிருந்து ஏராளமான வரலாற்று கால அரும்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் தொல்லியல் ரீதியாக கர்னூல் நகரம் முக்கியமான தலமாக குறிப்பிடப்படுகிறது. எனவே கர்னூல் நகரத்திலேயே ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. ஹந்த்ரி ஆற்றின் கரையில் கர்நூல் மருத்துவக்கல்லூரிக்கு அருகில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள சங்கமேஸ்வரம், ஆலம்பூர், ஷீசைலம் போன்ற கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட உடைந்த சிலைகள், உள்ளூர் தளபதிகள் பயன்படுத்திய போர்க்கருவிகள் போன்றவை இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கொட்லா விஜய் பாஸ்கர் ரெட்டி நினைவுச்சின்னத்துக்கு அருகிலேயே இந்த கர்னூல் மியூசியமும் அமைந்துள்ளது.
Bhaskaranaidu
ஆர்யபட்டா சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி சொசைட்டி
ஆர்யபட்டா சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி சொசைட்டி எனப்படும் இந்த அறிவியல் தொழில்நுட்ப கழகம் 2006ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி ராஜமுந்திரி நகரத்தில் திறக்கப்பட்டது. ஹவுசிங் போர்ட் காலனியின் உள்ள இந்த மையத்திற்கு மிகச்சுலபமாக சென்றடையலாம். இங்கு பல அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கருவிகளின் தத்ரூப மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 36 அடி நீளம் கொண்ட ஒரு கான்கிரிட் விமான வடிவமைப்பு குறிப்பிடத்தக்கது. இங்கு சிறுவர்களுக்காக ஒரு கோளரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர பல கடல் உயிரினங்கள் மற்றும் ஊர்வன விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உருவங்களும் இங்கு பார்வையாளர்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவியல் காட்சியகத்துக்கு மாணவர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் என்று பல தரப்பினரும் விரும்பி பயணம் செய்வது வழக்கம்.
Direct M
ரல்லபண்டி சுப்பாராவ் மியூசியம்
ராஜமுந்திரியில் உள்ள மற்றுமொறு அருங்காட்சியகம் ரல்லபண்டி சுப்பாராவ் மியூசியம். 1967ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இங்கு பல அரிய கலைப்பொருட்கள் மற்றும் வரலாற்று நினைவுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புராதன காலத்திய ராஜமுந்திரி நகரத்தின் கலாச்சார பெருமைகளுக்கு பறைசாற்றும் அரும்பொருட்கள் இந்த சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. சுடுமண் சிற்பங்கள், மட்பாண்டங்கள், கற்சிலைகள், ராஜ வம்ச நாணயங்கள் போன்றவற்றை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம். அரிதான பனை ஓலைச்சுவடிகளும் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. சீமாந்திரா பூமியின் கலாச்சார தொன்மங்களை பாதுகாத்து காட்சிக்கு வைக்கும் பிரதான நோக்கத்துடன் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு நல்ல முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை இது திறக்கப்படுகிறது.
Palagiri
எடெர்னல் ஹெரிடேஜ் மியூசியம்
புட்டப்பர்த்தியில் சத்ய சாய் பாபாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள எடெர்னல் ஹெரிடேஜ் மியூசியம் பாபாவின் வாழ்வு குறித்தும், அவருடைய ஆன்மீக தேடல் பற்றியும் பக்தர்கள் மற்றும் பயணிகள் அறிந்துகொள்ளும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற ஆலயங்களின் மினியேச்சர் வடிவங்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம். அதோடு மத ஒருமைப்பாட்டை பற்றி எண்ணற்ற யோகிகள் அருளிய கருத்துகள் பலவும் இங்கு மாதிரிகளாகவும், ஆடியோ மற்றும் வீடியோ வடிவங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவைத்தவிர இந்த அருங்காட்சியகத்தில் உள்ள அறை ஒன்றில் ஆன்மிக புத்தகங்கள் ஏராளமாக சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
Mefodiyz
தொல்பொருள் அருங்காட்சியகம்
அமராவதியின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை வெளி உலகத்துக்கு எடுத்துக்காட்டும் மிகச் சிறந்த ஆதாரமாக திகழ்ந்து வரும் தொல்பொருள் அருங்காட்சியகம் கிருஷ்ணா நதிக் கரையின் வலது புறத்தில் அமைந்திருக்கிறது. இந்திய கலை வரலாற்றினை எடுத்துச் சொல்லும் அதேவேளையில் கலை மற்றும் கைவினைப் பொருட்களின் வழி அமராவதியின் பெரும் செல்வத்தை தொல்பொருள் அருங்காட்சியகம் காட்சிப்படுத்தி வருகிறது. தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகள் 3-ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. அதோடு தாமரை மற்றும் பூர்ணகும்பா உள்ளிட்ட கைவினைப் பொருட்கள் அமராவதியின் பாரம்பரியத்துக்கு மிகச் சிறந்த அடையாளங்களாகும். மேலும் அமராவதியின் நற்பேறு மற்றும் செல்வச் செழிப்பை குறிக்கும் விதமாக சின்னங்கள் சிலவும் இந்த தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காணப்படுகின்றன.
IM3847