தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. 12வது மாதமான பங்குனியில், 12வது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனிதநாள்தான் பங்குனி உத்திரம். வளமான பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.
முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்துகொண்டார். பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம்தான். எங்கெல்லாம் முருகன் கோயில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவுதான் நமக்கு வருகிறது. அதே நேரத்தில் பங்குனி உத்திரத்தன்று இந்த கோயில்களுக்கு போனீர்களேயானால், உங்கள் திருமண வாழ்வும், தொழிலும் சிறந்து விளங்கி நீங்கள் ராஜாவைப் போல வாழ்வீர்கள்.
அருள்மிகு தோரணமலை முருகன் திருக்கோயில்
500 வருடங்கள் பழமையானதாக கருதப்படும், இந்த கோயில் திருநெல்வேலி தோரணமலையில் அமைந்துள்ளது. தமிழ் மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், கார்த்திகை நட்சத்திரத்தின்போதும், பவுர்ணமி நாட்களிலும், சிறப்பு பூசை நடத்தப்படுகிறது. தைப்பூசம், சித்திரை திருநாள் போன்ற நிகழ்வுகளும் நடக்கின்றன.
இவரை வழிபட்டால் திருச்செந்தூர் கோயிலை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
Yesmkr
எப்படி செல்லலாம்?
திருநெல்வேலியிலிருந்து 70கிமீ தொலைவில் குற்றாலம் செங்கோட்டை அருகில் அமைந்துள்ளது இந்த கோயில். 1.40மணி நேர பயணத்தில் இந்த இடத்தை அடையலாம்.
தொழில் வளம் சிறக்க, குடும்ப பிரச்சனை போக்க இந்த கோயிலின் முருகனை வணங்கிச் செல்கின்றனர் பக்தர்கள்.
அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்
புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையில் அமைந்துள்ள இந்த கோயில் தமிழக முருகன் கோயில்களுள் சிறப்பானதாகும். இது 1000 ஆண்டுகள் பழமையானதாக நம்பப்படுகிறது. வைகாசி விசாகம், தைப்பூசம் உள்ளிட்ட நாள்களில் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த கோயில், பங்குனி உத்திரத்தின்போது பக்தர்களால் நிரம்பி வழிகிறது.
Vanmeega -
எப்படி செல்வது
திருச்சியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த முருகன் கோயில். அரை மணி நேரத்தில் எளிதாக அடையும் தொலைவில் இருக்கும் இந்த கோயில், காலை 6 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 வரை திறந்திருக்கும்.
அருள்மிகு வழிவிடும் முருகன் கோயில்
500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த முருகன் கோயில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு விசயம் என்னவென்றால், வேறெந்த கோயிலிலும் சேராத இருவர் இந்த கோயிலில் ஒருசேர அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். முருகரும் பிள்ளையாரும் இந்த கோயிலில் ஒரே சன்னிதியில் அமர்ந்திருக்கின்றனர்.
Pachaimalai murugan
எப்படி செல்லலாம்
ராமநாதபுரம் நகரில் அமைந்துள்ளது இந்த கோயில். எம்ஜியார் சிலைக்கு அருகில், பச்சிவளையக்கர தெருவில் அமைந்திருக்கும் இந்த முருகன் கோயிலுக்கு வழிவிடும் முருகர் என்று பெயர் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது சொத்துத் தகராறில் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு துன்பம் நீக்கி நல்வழிப்படுத்துவதே இந்த முருகரின் ஸ்பெஷல்.
அருள்மிகு நவநீதேஸ்வரர் கோயில்
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள 1000 வருடங்கள் பழமையானதாக நம்பப்படும் இந்த கோயிலில் நவநீதேஸ்வரராக முருகப்பெருமான் அவதரித்துள்ளார். இங்கு தாயார் வேல்நடுங்கண்ணி ஆவார். மல்லிகையை தலவிருட்சமாக கொண்டுள்ளதால், இந்த இடம் புராணகாலத்தில் மல்லிகாரண்யம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
Vanmeega
எப்படி செல்லலாம்
உச்சிக்கால பூசையின் போது வெண்ணெய் செலுத்தி வழிபட்டால், கஷ்டங்களைத் தீர்க்கும் முருகப்பெருமானின் இந்த தலத்துக்கு நாகப்பட்டினத்திலிருந்து 15 நிமிடத்தில் சென்றுவிடலாம். 7கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில் காலை 5.30 மணி முதல், மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறக்கப்பட்டிருக்கும்.
அருள்மிகு ஓதியாண்டவர் திருக்கோயில்
கோயம்புத்தூர் மாவட்டம் இரும்பறை அருகே மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோயில் ஓதியாண்டவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலின் மூலவர் கல்யாண சுப்பிரமணியர் ஆவார். இந்த தலத்தின் விருட்சம் ஒதிமரம் ஆகும். எனவேதான் இந்த தலத்துக்கு ஓதிமலை என்று பெயர். இந்த கோயில் 500 வருடங்கள் வரை பழமையானதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
Vanmeega
எப்படி செல்வது
ஒரு செயலைத் தொடங்கும் முன் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து முருகனிடம் அனுமதி கேட்கிறார்கள்,. முருகன் முன் பூ இட்டு உத்தரவு கேட்டபின் அந்த செயலைத் தொடங்கினால் மிகவும் சிறப்பாக முடியுமாம். இந்த கோயில் கோயம்புத்தூரிலிருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு 1.20மணி நேரத்தில் சென்றடையலாம்.