நம்மில் பலருக்கு இயற்கைச் சூழலில் இதுவரைக் காணாத அல்லது அரியதாய் காணக்கிடைக்கும் பறவைக் கண்டு ரசிக்க வேண்டும் என ஆசை இருக்கும். அதிலும், புகைப்படக் கலைஞராக இருந்தால் சொல்லவா வேண்டும். எதாவது ஒரு காட்டினுள் நுழைந்து காணக்கிடைக்காத பறவைகளை காத்திருந்து புகைப்படம் எடுப்பதே கனவாகக் கூட இருக்கும். வெளிநாட்டுப் பறவைகள் என்றால் இன்னும் அதிகமான எதிர்பார்ப்பும், காத்திருப்பும் இருக்கும். அவ்வாறன பறவைகளைத் தேடி பயணிப்பதே தனிச் சுகம் தான். ஆனால், நம் நாட்டு பறவைகள் மட்டுமின்றி போனசாக வெளிநாட்டுப் பறவைளும் நம் கண்ணில் தென்பட்டால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட வெளிநாட்டுப் பறவைகளைக் காண வேண்டும், அத குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்றால் இப்போதே ஆந்திராவிற்கு பயணம் செய்யலாம். அங்குள்ள சீதோஷன நிலையும், பறவைகளை ஈர்க்கும் பசுமைக் காடுகளும் தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகளால் நிறைந்து காணப்படுகிறது. சரி வாருங்கள், ஆந்திராவில் பிரசிதிபெற்ற பறவைகள் சரணாலயம் என்னவெல்லாம் என பார்க்கலாம்.
நேலபட்டு பறவைகள் சரணாலயம்
நெல்லூரில் அமைந்துள்ள இந்த நேலபட்டு பறவைகள் சரணாலயம் புலிகாட் ஏரியிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் சென்னையில் இருந்து மிக எளிதாக இந்த நேலபட்டு பறவைகள் சரணாலயத்தை அடையலாம். பல அரிய பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்யும் சரணாலயமாக இது விளங்குகிறது. சில அழிந்து வரும் இனங்களும் இங்கு வசிப்பது குறிப்பிடத்தக்கது. சின்ன நீர்க்காகம், வண்ணக்கொக்கு, அரிவாள் மூக்கன், புள்ளி கூழைக்கடா போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை உள்ள பருவம் இந்த பறவைகள் சரணாலயத்துக்கு பயணம் செய்ய ஏற்றதாகும். பெரும்பாலும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் கூட்டமாக கூடி வசிக்கும் பறவைகளை இங்கு பார்த்து ரசிக்கலாம்.
GnanaskandanK
மரேடிமல்லி ஈகோ- டூரிஸம்
ராஜமுந்திரியில் அமைந்துள்ள மரேடிமல்லி ஈகோ- டூரிஸம் எனும் இயற்கைப்பூங்கா வளாகம் பலவிதமான இயற்கை அம்சங்களுடன் பயணிகளை வரவேற்கிறது. ராஜமுந்திரிக்கு சுற்றுலா மேற்கொள்ளும்போது இந்த இயற்கைப் பூங்காவுக்கு மறக்காமல் பயணம் செய்வது சிறந்தது. மரேடிமல்லி ஈகோ-டூரிஸம் பூங்கா ராஜமுந்திரியிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இயற்கைச்சுழல் சுற்றுலா மற்றும் நாட்டுப்புறச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டு நோக்கங்களுடன் இந்த பூங்காத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வளமுரே கிராமம் மற்றும் அதைச்சூழ்ந்துள்ள வனப்பகுதி ஆகியவை உள்ளடங்கியுள்ளது. இவ்விரண்டும் மரேடிமல்லி மண்டலத்தின் கீழ் வருகின்றன. மரேடிமல்லி இயற்கைப்பூங்காவில் மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கான பொருத்தமான சூழல் காணப்படுகிறது. காட்டுப்பகுதியின் வழியே மலையேற்றத்தில் ஈடுபடுவது இயற்கை ரசிகர்களுக்கும், சாகச விரும்பிகளுக்கும் பரவசத்தை தரக்கூடிய அனுபவமாக இருக்கும். மேலும் இந்த வனப்பகுதியில் ஓடும் வற்றாத ஓடைகள் பிரம்மாண்ட பாறைகளின் வழியே ஓடிவருவது கண்கொள்ளாக்காட்சியாகும். காட்டுப்பகுதியின் அமைதியும், பசுமைச்சூழலும், ஓடைகளும் பயணிகளுக்கு மறக்கவியலாத ஒரு அனுபவத்தை தர இங்கு காத்திருக்கின்றன. பல நீர்வீழ்ச்சிகள் மற்றும் விடுதிகள் ஆகியவற்றுக்கும் இந்த இயற்கைப்பூங்கா பிரசித்தி பெற்றுள்ளது.
J.M.Garg
ஸ்ரீசைலம் சரணாலயம்
ஸ்ரீசைலம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசைலம் சரணாலயம் இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் பாதுகாப்பு காடுகளை தன்னகத்தே கொண்டிருப்பதாகும். 3568 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீசைலம் சரணாலத்தில் விலங்குகள் ஒன்றையும் உங்களால் பார்க்க முடியவில்லை என்றாலும் இதன் முரட்டுத்தனமான நிலப்பரப்பும், ஆழமான மலை இடுக்குகளும் சிறப்பானதொரு சாகச அனுபவத்தை தரும். அதோடு சரணாலத்தின் உள்ளே செல்லச் செல்ல ஏராளமான மூங்கில் மரங்களை உள்ளடக்கிய அடர்த்தியான இலையுதிர் காடுகள் உங்களுக்கு சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை கொடுக்கும். ஸ்ரீசைலம் சரணாலயத்தின் காடுகளில் புலிகள், சிறுத்தைகள், காட்டுப் பூனைகள், கரடிகள், மான்கள், கழுதை புலிகள், எறும்புதிண்ணிகள், வெளிநாட்டுப் பறவைகள் போன்ற எண்ணற்றவற்றை கண்டு ரசிக்கலாம். மேலும் இந்த சரணாலயம் ஸ்ரீசைலம் அணைக்கு வெகு அருகிலேயே இருப்பதால் பலவகைப்பட்ட முதலைகளையும் நீங்கள் இங்கு பார்க்கலாம்.
J.M.Garg
உப்பலபாடு இயற்கை பாதுகாப்பு பூங்கா
குண்டூர் நகரத்திற்கு தெற்கே சுமார் நான்கு மைல் தொலைவில் இந்த உப்பலபாடு இயற்கை பாதுகாப்பு பூங்கா அமைந்துள்ளது. ஏராளமான புலம்பெயர் பறவைகளை ஈர்க்கும் வகையில் இந்தப்பகுதியில் நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ளன. பல அரியவகை பறவைகள், வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் அருகி வரும் பறவையினங்களை இங்கு பார்க்கலாம். புள்ளி கூழைக்கடா மற்றும் வெளிநாட்டு வண்ணக்கொக்கு போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. பல வெளிநாட்டு, தூர தேச புலம்பெயர் பறவைகளை ஒரே இடத்தில் பார்த்து ரசிக்கும் அனுபவத்தை பெறுவதற்காக பறவை ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்த சரணாலயத்துக்கு பயணம் செய்கின்றனர். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் இந்த தலத்துக்கு பயணம் செய்ய ஏற்றதாக உள்ளன. இனப்பெருக்க காலம் என்பதால் இம்மாதங்களில் ஏராளமான புலம்பெயர் பறவைகளை இங்கு பார்க்க முடியும்.
J.M.Garg
கம்பலகொண்டா
ஆந்திர மாநில வனத்துறையால் பராமரிக்கப்படும் இந்த கம்பலகொண்டா பகுதி 1970ம் ஆண்டிலிருந்து ஒரு காட்டுயிர் சரணாலயமாக விளங்கி வருகிறது. இங்குள்ள கம்பலகொண்டா எனும் மலையின் பெயரிலேயே இந்த சரணாலயம் அழைக்கப்படுகிறது. பரந்து விரிந்த பசுமை மாறாக்காடுகளை இது உள்ளடக்கியுள்ளது. பலவிதமான தாவர வகைகள் மற்றும் உயிரினங்கள் இந்த வனப்பகுதியில் காணப்படுகின்றன. அருகி வரும் உயிரினமான இந்தியச்சிறுத்தை மற்றும் குரைக்கும் மான், இந்திய குள்ளநரி போன்ற விலங்கினங்கள் ஆகியவற்றோடு கட்டுவிரியன், இந்திய நாகம் போன்ற ஊர்வன வகைகளும் இங்கு வசிக்கின்றன. ஆசியன் பாரடைஸ் ஃப்ளைகாட்சர் எனும் அரிய பறவையினமும் இங்கு காணப்படுகிறது. கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால் நீர்ப்பறவைகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இப்பகுதீயில் காணப்படும்.
Adityamadhav83