கொரோனாவாவது, கட்டுப்பாடுகள் ஆவது! எங்களுக்கு பயம் இல்ல - அதுக்கு இதுதான் சேம்பிள் என்கிறது போல் கோவா அரசு ஒரு அறிக்கை விட்டுள்ளது. ஆம்! ஜனவரி 2, 2023 வரை கோவாவில் கோவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என்று முதல்வர் பிரமோத் சாவந்த் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். உலகெங்கிலும் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்து விடுமோ என்ற அச்சம் தொற்றிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் கோவா இப்படி ஒரு செய்தி வெளியிட்டது எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்!
இந்தியாவின் பார்ட்டி தலைநகர் கோவா
இந்தியாவின் மினி தாய்லாந்து என செல்லமாக அழைக்கப்படும் நகரம் கோவா தான். வண்ணமயமான கடற்கரைகள், கேளிக்கைகள், பழங்கால கோட்டைகள், வித விதமான உணவுகள், பல வகையான பானங்கள், களைகட்டும் கஃபே மற்றும் பப்கள் என கோவா ஒரு உற்சாகமான இடமாக அனைவரையும் வரவேற்கிறது. கோவாவில் மேற்கத்திய கலாச்சாரமும் நாகரிகமும் உரசி செல்வதே நாமே உணரலாம். எந்தவித இடையூறும் இன்றி இரவு முழுக்க பார்ட்டிகளும் கொண்டாட்டங்களும் கோவாவில் அரங்கேறுகிறது. அதிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். பட்டையை கிளப்பும் அளவுக்கு அங்கு உற்சாகத்தில் பஞ்சம் இருக்காதாம்.
எங்கு பார்த்தாலும் புதிய கொரோனா வைரஸ் அச்சம்
சீனாவில் பூதாகரமாகிக் கொண்டிருக்கும் புதிய கொரானா வைரஸ் ஒமிக்ரான் B 7 கண்டு உலகமே சற்று அச்சம் கொண்டுள்ளது. கிடு கிடுவென சீனாவில் உயரும் கொரோனா பாதிப்புகளால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களிடம் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க உத்தரவிட்டு வருகின்றன. இந்தியாவிலும் கூட தைவான், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, ஹாங்காங் போன்ற தெற்காசிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கட்டாய RT-PCR பரிசோதனை செய்து வருகின்றது. டிசம்பர் 27 ஆம் தேதிக்குள் தேவையான உள்கட்டமைப்பை ஏற்படுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
எங்களுக்கு பயம் இல்லை – கோவா சொல்கிறது
இந்நிலையில் மத்திய அரசும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் கோவாவில், ஜனவரி 2, 2023 வரை கோவாவில் கோவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கோவா அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்றும், அவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொற்றுநோயைத் தவிர்க்க முகமூடிகளை அணியுமாறு மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
புத்தாண்டை கோவாவில் வரவேற்க தயாரா
கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது அனைத்து கடற்கரைகளிலும் பார்ட்டிகள், தெருக்கள் முழுக்க வண்ண விளக்குகள், தோரணங்கள், 24 மணி நேரமும் இயங்கும் கஃபேக்கள் மற்றும் பப்கள் என வெறித்தனமாக இருக்குமாம். எங்கு பார்த்தாலும் இளசுகளின் கூட்டம் அலைமோதுகிறது. எந்தவித கட்டுப்பாடும் இன்றி, ஆடி பாடி உற்சாகமாக உண்டு மகிழ்ந்து புத்தாண்டை வரவேற்க கோவா தான் இந்தியாவின் "நம்பர் ஒன் நியூ இயர் செலிபிரேஷன் கேபிடல்" ஆக உள்ளது. பாகா, கேண்டலிம், கேலங்குட், அஞ்சுனா, கோல்வா, ஆரம்போல், மோர்ஜிம், சின்கேரியம், அஸ்வேம், கேவலோசிம், அகோண்டா, பாட்னெம் என பல கடற்கரைகள் கோவாவில் உண்டு. புத்தாண்டை வரவேற்க நகரம் முழுவதுமே வண்ணமயமாக இருக்கும் கோவாவுக்கு செல்லுங்கள்! உற்சாகமாக இருக்கும்!