அலங்காரமான கோட்டைகள், அற்புதமான அரண்மனைகள் ஆகியவற்றுடன் ராஜபுதன கட்டிடக்கலை அம்சங்களை தாங்கி நிற்கும் தூண்கள், சாரங்கள் போன்ற நுணுக்கமான அமைப்புகளும் இந்த இடத்தின் வசீகரங்களாக திகழ்கின்றன. இவை தவிர ஜொலிக்கும் ஆறுகள், ஏரிகள் மற்றும் சொக்க வைக்கும் நீர்வீழ்ச்சிகள் போன்ற அம்சங்கள் இப்பிரதேசத்தின் அழகைக் கூட்டுகின்றன. இந்த இடத்துக்கு பெயர் தான் பூந்தி.
லட்டுவில் இருக்கும் பூந்தியைப் போலவே, இந்த இடமும் காண்பவர்களுக்கு இனிமையையும், அற்புதங்களையும் அள்ளித் தரவல்லது.

பூந்தி மாவட்டத்தின் பெரும்பகுதியானது பசுமையான வனம் போன்ற இயற்கை அமைப்பை பெற்றுள்ளதால் பலவித தாவர வகைககள் மற்றும் உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன. புகழ்பெற்ற எழுத்தாளர்கள், ஓவியர்கள் மற்றும் கலைஞர்களுக்கு உத்வேகத்தை அளித்த ஸ்தலமாகவும் பூந்தி மாவட்டம் புகழ் பெற்றுள்ளது. ருட்யார்டு கிப்ளிங் தனது 'கிம்' எனும் படைப்புக்கான ஊக்கத்தை இப்பிரதேசத்தில் வசித்தபோது பெற்றதாக சொல்லப்படுகிறது.

இங்கு தாராகர் கோட்டை, பூந்தி அரண்மனை, ராணிஜி- கி - பாவ்ரி மற்றும் நவால் சாஹர் போன்ற பிரசித்தமான சுற்றுலா அம்சங்கள் அமைந்துள்ளன. இவை தவிர சுக் மஹால், சௌராஸி கம்போன் கி சாத்ரி, ஜெயித் சாஹர் ஏரி மற்றும் ஃப்பூல் சாஹர் போன்ற இதர சுற்றுலா அம்சங்களையும் இங்கு காணலாம்.

பூந்தி நகர ரயில் நிலையம் பழைய நகரத்திலிருந்து தெற்கே 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஜெய்பூர், ஆக்ரா, வாரணாசி, டெஹ்ராடூன் போன்ற நகரங்களிலிருந்து வரும் ரயில்கள் இந்நிலையத்தின் வழியே செல்கின்றன.
பூந்தி நகரத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தின் பல நகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் பேருந்து சேவைகள் உள்ளன.
மாதவ்பூர், பிக்கானேர், ஜெய்பூர், கோட்டா போன்ற பல நகரங்களுக்கு பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.
பிஜோலியா, உதய்பூர், அஜ்மீர் மற்றும் ஜோத்பூர் போன்ற நகரங்களிலிருந்தும் பூந்திக்கு பேருந்துச்சேவைகள் உள்ளன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட பருவம் இப்பிரதேசத்தில் சுற்றுலா மேற்கொள்ள உகந்தது.



Click it and Unblock the Notifications




