உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா இந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 41 நாட்கள் நடைபெறும் உலகின் மிகப் பெரிய கலாச்சார, பாரம்பரிய நிகழ்வான மகா கும்பமேளா, பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதாவது, மகர சங்கராந்தி துவங்கி, மகாசிவராத்திரி வரை நடைபெறும். பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உலகம் முழுவதிலும் இருந்து கோடிக் கணக்கான மக்கள் பிரயாக்ராஜில் குவிந்துள்ளனர். இந்நிலையில் தென்னிந்திய மக்களும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக ஐஆர்சிடிசி சிறப்பு ரயில் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.

ஐஆர்சிடிசி சிறப்பு ரயில்
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் நீராடினால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பதால் பலரும் புனித நீராடி வருகிறார்கள். இந்நிலையில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் "சிறப்பு பாரத் கெளரவ் சுற்றுலா ரயில் சேவை" என்ற பெயரில் திருநெல்வேலியில் இருந்து உத்திர பிரதேசத்தின் வாரணாசி வரை இயக்க முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 05ம் தேதி முதல், பிப்ரவரி 13ம் தேதி வரை இந்த பயணம் நடைபெற உள்ளது. இது குறித்த முழு விபரங்கள் இதோ...
ரயில் புறப்படும் நாள், நேரம்
திருநெல்வேலியில் இருந்து பிப்ரவரி 05ம் தேதி அதிகாலை 01.00 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், காலை 05.50 மணிக்கு மதுரை வந்தடையும். மீண்டும் 06.00 மணிக்கு புறப்பட்டு, பிப்ரவரி 07ம் தேதி பகல் 12.30 மணிக்கு காசி நகரை சென்றடையும். அங்கிருந்து "மகா கும்ப புண்ணிய யாத்திரை 2025" பயணம் துவங்கும். பிப்ரவரி 07ம் தேதி மாலை நடைபெறும் கங்கை ஆரத்தியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும். பிப்ரவரி 08ம் தேதி காசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம், விசாலாட்சி அம்மன் ஆலயம், கால பைரவர் ஆலயம், சாரநாத் கோவில்களுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
பயண விபரம்
பிப்ரவரி 09ம் தேதி பயணிகள், சாலை மார்க்கமாக பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லப்பட்டு, கங்கை-யமுனை-சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வைக்கப்படுவார்கள். அன்று இரவு கும்பமேளா பந்தலில் அமைக்கப்பட்டிருக்கும் டென்ட் சிட்டியில் தங்க வைக்கப்படுவார்கள். பிப்ரவரி 10ம் தேதி காலை சாலை வழியாக அயோத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டு சரயு நதி மற்றும் ராம ஜென்மபூமியில் அமைந்துள்ள ராமர் கோவிலுக்கு யாத்ரீகர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். பிப்ரவரி 10ம் தேதி இரவு மீண்டும் ரயில் புறப்பட்டு, பிப்ரவரி 13ம் தேதி அதிகாலை 02.50 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை வந்தடையும். அன்று காலை 07.30 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா பயணம் நிறைவடையும்.
எங்கெல்லாம் நின்று செல்லும்?
இந்த சிறப்பு மகா கும்பமேளா ரயில் தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மொத்தம் 14 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் ஒரு ஒன் டயர் ஏசி கோச், 3 த்ரி டயர் ஏசி கோச், 7 ஸ்லீப்பர் கோச், ஒரு உணவு தயாரிக்கும் பெட்டி, 2 என்ஜின் பெட்டிகள் இருக்கும். மொத்தம் 716 இருக்கைகள் கொண்ட இந்த ரயிலில் 460 மூன்றாம் வகுப்பு ஏசி, 206 ஸ்லீப்பர், 50 இரண்டாம் வகுப்பு ஏசி இருக்கைகள் உள்ளன.
கட்டண விபரம்
இந்த சிறப்பு ரயிலில் பயணிக்க ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூ.26,850ம், மூன்றாம் வகுப்பு ஏசிக்கு ரூ.38,470ம், இரண்டாம் வகுப்பு ஏசிக்கு ஒரு நபருக்கு ரூ.47,900ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரயில் கட்டணம், ஓட்டலில் தங்குவதற்கான கட்டணம், பயண காப்பீடு, சுற்றுலா வழிகாட்டி, பாதுகாப்பு சேவை, தென்னிந்திய உணவுகள், உள்ளூரில் பயண வசதிகள் ஆகிய அனைத்தும் அடங்கும். இந்த ரயிலுக்கான முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வருகிறது.



Click it and Unblock the Notifications



