இந்தியாவில் இருந்து அதிகப்படியான வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும் நாடுகளில் மலேசியா முதன்மையான ஒன்று என்பது நாம் அறிந்த விஷயமே. குறிப்பாக விடுமுறை நாட்கள், பண்டிகை கால கட்டங்களில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில் ஆன்லைன் விசா பெறும் வசதியை மலேசியா நிறுத்தி வைத்துள்ளது. அதன் காரணம் என்ன? வேறு எப்படி நாம் விசா பெறுவது என்பதைப் பற்றி இங்கே காண்போம்!

புத்தாண்டு கொண்டாட்டதிற்காக உலகெங்கிலும் இருந்து குவியும் மக்கள்
மலாய் தீபகற்பத்தில் அமைந்துள்ள மலேசியா உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும். தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த வணிக மையமான கோலாலம்பூர், பிரமிக்க வைக்கும் கடற்கரைகள், அழகான தீவுகள், அழகிய மலைவாசஸ்தலங்கள் மற்றும் பல யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் போன்ற பல்வேறு அனுபவங்களை அந்நாட்டிற்கு செல்லும் பயணிகள் அனுபவிக்க முடியும்.
ஒவ்வொரு ஆண்டும், மலேசியாவில் புத்தாண்டு பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் வரவிருக்கும் புத்தாண்டின் போது, இ-விசா வசதியை மீட்டெடுக்காத பட்சத்தில், இந்த விழாக்களில் மிகச் சில இந்திய சுற்றுலாப் பயணிகளே வருவார்கள் எனக் கூறப்படுகிறது.

நிறுத்தப்பட்ட ஆன்லைன் விசா
இந்தியப் பயணிகள் அதிகம் பார்வையிடும் நாடுகளில் ஒன்றான மலேசியா, eNTRI ஆன்லைன் விசா பெறும் வசதியை தற்போது நிறுத்தியுள்ளது. இதன் மூலம் ஆன்லைனில் இந்தியா பயணிகள் மலேசிய விசாவை பெற முடியாது. மலேசிய விசாவைப் பெறுவதற்கான விசா விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கும் முறை இப்போது நடைமுறையில் இல்லை. புதுதில்லியில் உள்ள மலேசிய ஹை கமிஷன் இதை தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஆறு நாட்களில் மலேசிய விசா
விசா விண்ணப்பங்களை சென்னை, புது தில்லி மற்றும் மும்பையில் உள்ள மலேசிய தூதரகங்களில் நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். முதல் நாளில் விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க வேண்டும். ஆறு நாட்களுக்குப் பிறகு இரண்டாவது வருகையின் போது விசாவை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். மலேசியா இந்தியப் பயணிகளுக்கான ஒற்றை நுழைவு விசாக்களுக்கு மட்டுமே தற்போது உரிமம் வழங்கி வருகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கான குழு விசாக்களை விடுவிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய பயணிகளுக்கான விசா ஆன் அரைவல்
மும்பை, சென்னை அல்லது டெல்லியில் உள்ள தூதரங்களில் நேரடியாக விசா பெற முடியாதோர், தாய்லாந்து அல்லது இந்தோனேசியா வழியாகப் பயணம் செய்த பிறகு, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் விசாவைப் பெற்றுக் கொள்ளலாம். விசா பெற விரும்பும் இந்தியர்கள், இந்த நாடுகளில் ஒன்றில் குறைந்தபட்சம் ஒரு இரவைக் கழித்திருக்க வேண்டும் என்று கூடுதல் நிபந்தனையாகும். ஆகவே, இந்தியாவில் உள்ள தூதரங்களில் ஏதேனும் ஒன்றில் விசா பெறுவதும், அல்லது இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தில் ஒரு இரவு கழித்தப் பின்னர் மலேசிய விமான நிலையத்தில் விசா பெறுவதும் மட்டுமே மலேசிய விசா பெறுவதற்கான வழியாகும்.
ஆகவே, மேற்கண்ட தகவல்களை கருத்தில் கொண்டு மலேசிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள்!



Click it and Unblock the Notifications



